Monday, March 28, 2016

ராசி கோயில்கள்!

ம் வாழ்க்கை, காலத்தின் கையில். ஆனால், அந்தக் காலம் கடவுளின் கையில்! அவன் காலகாலன் அல்லவா? தூய பக்தியுடன் அவன் திருவடிகளை சிக்கென்று பற்றிக்கொண்டால் போதும்; எப்படிப்பட்ட பொல்லாத காலத்தையும் அவனருளால் வென்றுவிடலாம்!
அவ்வகையில், இன்னல்கள், கடும் தோஷங்கள், நோய்நொடிகள் யாவும் நீங்கி, நமது வாழ்க்கை வளம் பெறவும், எவ்வித பிரச்னைகளாயினும் அவற்றை எதிர்கொண்டு வெல்லும் மன வல்லமை பெறவும் இறையருள் நமக்குத் துணைபுரிவதற்கு ஏதுவாக, உங்கள் ஒவ்வொருவரது ராசிக்கும் உரிய தெய்வங்கள் திருக்கோயில்கள் தரிசனம் இங்கே உங்களுக்காக!
பழநியாண்டவருக்கு நெய் தீபம்!
அஸ்வினி, பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் முதல் பாதம் இந்த ராசியில் அடங்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு அதிபதியாக செவ்வாய் இருக்கிறார். இவரை அங்காரகன், பூமிகாரகன் என்றெல்லாம் சிறப்பிப்பார்கள். இது ராணுவம் மற்றும் காவல் துறையினருக்கு உரிய கிரகம். செவ்வாய் பகவானின் அதிதேவதை முருகப்பெருமான். ஆக, இந்த ராசிக்காரர்கள் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.
மேஷ ராசியில் இடம்பெறும் அஸ்வினி ஞானத்தையும், பரணி அரச போகத்தையும் குறிக்கும். இந்த இருகோலங்களிலும் அருளாட்சி நடத்துபவர் பழநி முருகன். மேலும், கார்த்திகை நட்சத்திரத்துக்கும் உரிய தெய்வம் முருகனே என்பதால், இந்த ராசிக்காரர்கள் பழநிக்குச் சென்று வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம். முருகப்பெருமானுக்கு உகந்த திருநாட்களில் பழநிக்குச் சென்று, நெய் தீபம் ஏற்றிவைத்தும், மலர்கள் சமர்ப்பித்தும் பழநியாண்டவனை வழிபடவேண்டும். பூக்களில் செம்பருத்தி, விருட்சம்பூக்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம். முருகப் பெருமானுக்கு நடைபெறும் விபூதி அபிஷேகத்தைத் தரிசித்து வழிபடுவதால் வினைகள் யாவும் தீரும்.
சஷ்டி திதி அன்று பழநிக்குச் சென்று வணங்கினால், வழக்குகள் சாதகமாகும்; பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வார்கள். செவ்வாய்க் கிழமைகளில் சென்று வழிபட்டால் நோய்கள் விலகும்; ஆயுள் ஆரோக்கியம் கூடும். வியாழக் கிழமையில் சென்று வழிபட்டால், கடன் சுமை நீங்கும்; அரசாங்கம் தொடர்பான பிரச்னைகள் முடிவுக்கு வரும். பழநிக்குச் செல்பவர்கள் போகரின் ஜீவசமாதியையும் தரிசித்து  வரலாம்.
சென்னைக்கு அருகில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலும் இந்த ராசிக்காரர்கள் வழிபட உகந்த தலமாகும். இயலாதவர்கள், வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயங்களில் அருளும் முருகனை வழிபட்டு வரலாம்.
சந்தோஷம் தரும் சந்தன அபிஷேகம்!
ரிஷப ராசிக்கு அதிபதி சுக்ரன். இவரை கட்டடக்காரகன், கல்யாணக்காரகன் என்றெல்லாம் சிறப்பிப்பார்கள். வாகனம், சினிமா, நாட்டியம், இசை மற்றும் கலைகளுக்கு இவரே அதிபதி! கார்த்திகை 2,3,4ம் பாதங்கள், ரோகிணி மற்றும் மிருகசீரிஷத்தின் முதல் இரண்டு பாதங்கள் இதில் அடங்கும். ராசிநாதன் சுக்கிரனின் தன்மை, மற்றும் இந்த ராசியில் அடங்கும் நட்சத்திரங்கள் அடிப்படையில் இந்த ராசிக்காரர்கள் தரிசித்து வழிபடவேண்டிய தெய்வம், கோவை சத்தியமங்கலம் செல்லும் வழியில் உள்ள கோவில்பாளையத்தில் அருளும் கால காலேஸ்வரர்.
நந்தி பகவானின் அருள்பெற்ற ராசியாக ரிஷபம் உள்ளதால், இவர்களின் வழிபாட்டுக்கு இக்கோயிலே உகந்தது. இங்குள்ள மூலவர் விசேஷ யோகங்களை அளிப்பவர். இவருக்கு சந்தன அலங்காரம் விசேஷம்! இந்த ராசிக்கு தற்போது கண்டகச் சனி நடப்பதால், ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூத்தி போன்றவற்றை இந்த ஆலயத்தில் செய்யலாம். இக்கோயிலில் பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை நட்சத்திர தினங்களில் சென்று வழிபடுவது சிறப்பு. ஸ்வாமிக்கு தும்பைப்பூ மாலை அணிவித்தோ, வில்வார்ச்சனை செய்தோ வழிபடலாம்.  இத்தலம் தவிர, விஸ்வாமித்திரர் தவம் புரிந்த தலமான முசிறியில், சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றும் வழிபடலாம்.
அல்லல் நீங்க, அரங்கனை வழிபடுங்கள்!
மிதுனத்துக்கு அதிபதியாக புதன் வருகிறார். கல்வி மற்றும் கலைக்கு புதன் உரியவராகிறார். இந்த ராசிக்காரர்கள் சமயோசித புத்தி, எழுத்தாற்றல், பேச்சாற்றல் மிக்கவராகத் திகழ்வர். மிருகசீரிடம் 3, 4 ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2 3ம் பாதம் இதில் அடங்கும். இவர்களுக்குப் பூர்வபுண்யாதிபதியாக சுக்கிரனும் பாக்கியாதிபதியாக சனியும் வருகின்றனர்.  இவர்களின் பலம் பெருக, திருவரங்கநாதரை வழிபடவேண்டும். இதனால் வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம்,  கல்வியறிவு கிடைக்கும். அரங்கனை வழிபடச் செல்லும்போது தாமரை, துளசி மாலை அல்லது முத்து மாலை சாற்றி வழிபடலாம். ஏகாதசி திதி, புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் வழிபட உகந்த நாட்கள். குறிப்பாக, பஞ்சமி மற்றும் அஷ்டமி திதி நாட்களில் சென்று வழிபடுவதால் பன்மடங்கு பலன் உண்டு.
திருவரங்கம் மட்டுமின்றி, திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடி ஸ்ரீ லோகநாத பெருமாளையும், திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாளையும் வழிபட்டு வரலாம்.
திருவருள் தரும் திருவக்கரை அன்னை!
கடக ராசிக்கு அதிபதி சந்திரன். இவர் தண்ணீருக்கு அதிபதியாக இருக்கிறார். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகியன இதில் அடங்கும். சந்திரன் ஆயக்கலைகள் அறுபத்து நான்குக்கும், தாய்க்கும் உரிய கிரகமாகவும் விளங்குகிறார். ஆகவே, திண்டிவனம் அருகில் திருவக்கரையில் மூன்றாம் பிறையுடன் அருளும் சந்திரமெளலீஸ்வரரை இவர்கள் வழிபடுவது சிறப்பு. வராக நதிக்கரையோரம், பல்லவர்களின் கலைவண்ணத்தில் உருவான இந்தக் கோயில் மிகவும் பழைமையானது. இங்குள்ள சித்தர் சந்நிதியில் அமர்ந்து தியானிப்பது அவ்வளவு விசேஷம்! இங்குள்ள துர்கை அம்மன் மிகுந்த வரப்ரசாதியானவள். இவளை வழிபட மாங்கல்ய பலம் கூடும். அத்துடன் கோயிலின் முகப்பில் ஈசான்யத்தை நோக்கி அருள்பாலிக்கும் வக்ரகாளியம்மனை வழிபட்டால் அரசு பதவி கிடைக்கும்; வழக்குகள் வெற்றி அடையும்; திருஷ்டி தோஷங்கள் நீங்கும். கடகத்தின் ராசிநாதனாகிய சந்திரன் தேய்ந்து வளரும் தன்மை கொண்டது ஆதலால், இந்த அம்மனை வலதுபக்கமாக ஐந்து முறையும், இடது பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து வழிபடுவது சிறப்பு. இதனால் முழு சந்திர பலமும் வாய்க்கும்.
பஞ்சமி, அஷ்டமி, நவமி, பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் இங்கு சென்று வழிபடுவதால் கூடுதல் பலன் கிடைக்கும். ஞாயிறு, வெள்ளிகளில் அரளிப்பூ, எலுமிச்சைப்பழ மாலை அணிவித்து அம்பாளை வணங்கினால், சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் உண்டாகும். இக்கோயில் தவிர, அரியலூருக்கு அருகிலுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அருளும் ஸ்ரீ பிரகதீஸ்வரர், கோவை மாவட்டம் நவகரையில் அருளும் துர்கா பகவதி அம்மன் ஆகிய தெய்வங் களையும் வழிபடலாம்.
யோகங்கள் தரும் மரகத நடராஜர்!
இந்த ராசிக்கு அதிபதி சூரியன். இவர், பிதுர்க் காரகனாகவும் ஆத்ம காரகனாகவும், அரசியல், அரசாங்க பதவி, தலைமை குணத்தை தருபவராகவும் விளங்கு கிறார். மகம், பூரம் மற்றும் உத்திரம் முதல் பாதம் ஆகியன இதில் அடங்கும். அளவற்ற ஆற்றல் கொண்ட சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தையே பெயராகக் கொண்ட உத்தரகோசமங்கையில் அருளும் மங்கள நாதரையும், பூண்முலை அம்மனையும் இவர்கள் வழிபடுவது சிறப்பு! ராமநாதபுரத்துக்கு தென்மேற்கில் 15 கி.மீ தொலைவிலுள்ளது இத்தலம். கயிலாயத்துக்கு இணையானது என்பதால், இதைத் தென்கயிலாயம் எனப் போற்றுவர். இங்கு அருளும் இறைவன் இத்தலத்தின் தாமரைப்பொய்கையில் யோகிகளுக்குக் காட்சியளித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. இங்குள்ள மரகத நடராஜரை வணங்கினால், வாழ்வில் அனைத்து வகை யோகங்களும் வந்து சேரும். மல்லிகை மற்றும் வில்வத்தால் இங்குள்ள இறைவனை அர்ச்சித்து வழிபடுவது நல்லது. ஞாயிறு, வியாழக்கிழமைகளிலும், அமாவாசை, தசமி, திரயோதசி திதி நாட்க ளிலும் சென்று வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்.
இத்தலம் மட்டுமின்றி, உத்திரமேரூருக்கு அருகிலுள்ள திருப்புலிவனத்தில் அருளும் ஸ்ரீஅமிர்தகுஜாம்பாள் சமேத ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் மற்றும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில்  சென்று வணங்கலாம். மேலும், ஆவுடையார் கோவிலில் அருளும் ஸ்ரீ யோகாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆத்மநாதரையும், சண்டிகேஸ்வரரையும் வணங்கி வழிபடலாம்.
நல்லன அருளும் நரசிம்மம்!
இந்த ராசிக்கு அதிபதியாக புதன் வருகிறார். ஏட்டறிவைவிட பகுத்தறிவும், பட்டறிவும் இவர்களுக்கு அதிகம் இருப்பதால், நெருக்கடி நேரத்திலும் நியாயம் தவற மாட்டார்கள். உத்திரம் (2,3,4 பாதங்கள்), அஸ்தம், சித்திரை (1,2பாதங்கள்) ஆகிய 3 நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ராசியில் இடம் பெறுகின்றனர்.
கன்னி ராசி, புதனுடைய அம்சம். நெருப்பு கிரகமான சூரியனின் நட்சத்திரமான உத்திரம், தண்ணீர் கிரகமான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரம், போர் கிரகமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் ஆகியன இந்த ராசியில் இடம்பெறுகின்றன. கோபம், யுத்தம், சாந்தம் ஆகிய மூன்று குணங்களும் இந்த ராசிக்கு உண்டு. இந்த 3 குணங்களுக்கும் ஏற்ற கடவுளாக நரசிம்மர் விளங்குகிறார்.
இவர்கள், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்கிரிக்குடியில் அருள்பாலிக்கும் அருள்மிகு நரசிம்மர் திருக்கோயிலில் உள்ள பிரகலாதவரதனை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபடுவது நலம் தரும். தயிர் சாதம், புளி சாதம் தானம் வழங்கலாம். சுமார் 2000 ஆண்டுகள் பழைமைமிகு பெருமைகள் கொண்டது இத்திருத்தலம். இந்தக் கோயிலைத் தவிர, சென்னை கோயம்பேட்டில் உள்ள வைகுண்டவாசல் பெருமாள் கோயிலிலும் வழிபடலாம்.
ஐயம்பாளையத்தில் அருள் கிடைக்கும்!
சுக்கிரனுடைய அம்சத்தில் வரும் இவர்கள் கலை உணர்வு கொண்டவர்களாகவும், நீதி தவறாதவர்களாகவும் இருப்பார்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்களில் வியாபார நுணுக்கம் அறிந்திருப்பவர்கள் ஏராளம். சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ம் பாதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ராசியில் அடங்குவார்கள்.
இந்த ராசி அன்பர்கள் வழிபடவேண்டிய ஆலயங்களாகப் பல ஆலயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகில் ஐயம்பாளையத்தில் சிறு குன்றின் மீது எழுந்தருளி இருக்கும் உத்தமராய பெருமாளை வழிபடுவது நன்மைகளைத் தருவதாக அமையும். ஆளுமைத் திறன் அதிகம் கொண்டவர்களாகவும், அநியாயத்தைக் கண்டு அஞ்சுபவர்களாகவும் விளங்குவர். ஆனால் அவ்வப்போது முன்னுக்குப் பின் முரணாக முடிவெடுத்து தவிப்பவர்கள். இந்த பெருமாளை வழிபடுவதால், இந்த ராசிக்காரர்களின் தடுமாற்றங்கள் நீங்கும்.
சனி பகவான் சுகாதிபதியாகவும் பூர்வபுண்ணியாதிபதியாகவும் வருவதால் இந்தப் பெருமாளை சனிக்கிழமைகளில் வழிபடவேண்டும். புரட்டாசி சனிக்கிழமையும் ஏகாதசி திதியும் விசேஷமான நாள்களாகும். ஏலக்காய் மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டு, அன்னதானம் செய்தால், அளவற்ற நன்மைகள் உண்டாகும். இந்தப் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். புத்திரப் பிராப்தியும் உண்டாகும். ஊமையைப் பேசவைத்த திருத்தலம் என்ற பெருமையும் இந்தக் கோயிலுக்கு உண்டு. இதேபோல் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகில் உள்ள கோவிலூர் சென்னகேசவரையும் வழிபடலாம்.
எட்டுக்குடி சென்றால் ஏற்றம் கிட்டும்!
நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே எனும்படி நியாயத்தின் பக்கம் இருப்பவர்கள், இந்த ராசிக்காரர்கள்.விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ராசியில் அடங்குவார்கள். காலப் புருஷனின் 8வது ராசியில் இவர்கள் பிறந்து இருப்பதால், மன எழுச்சி அதிகம் உண்டு. அதைக் கட்டுப்படுத்த நாகை மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகனை வணங்கி வழிபடுவது அவசியம். 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் வான்மீகர் என்னும் சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருப்பதால், இங்கே வந்து வழிபடுபவர்களுக்கு மனச் சாந்தி உண்டாகும். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இங்கே வந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். நெய்தீபம் ஏற்றி வழிபடுவதும், பால் காவடி எடுப்பதும் விசேஷமாகும். எட்டுக்குடி முருகன் கோயிலைப் போலவே, நாகப்பட்டினம் அருகில் உள்ள சிக்கல் சிங்காரவேலனையும் வணங்கிப் பலன் பெறலாம்.
மங்கலம் பெருக, மஞ்சள் காப்பு!
தனுசு ராசிக்கு அதிபதியாக குரு பகவான் வருகிறார். போராடும் குணமும், தொலைநோக்குச் சிந்தனையும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகம் உண்டு. மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ராசியில் அடங்குவார்கள். இந்த ராசியின் சின்னமாக வில்லும் அம்பும் அமைந்துள்ளது.
இந்த ராசி அன்பர்கள், திண்டுக்கல் அருகில் வேடசந்தூரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு நரசிம்மரை வழிபடுவது, அளவற்ற நன்மைகளைத் தரும். இந்தத் தலத்தில் நரசிம்மர் தேவிபூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் உள்ள வீர ஆஞ்சனேயருக்கு உகந்த ராசியாக இந்த ராசி உள்ளது. எனவே, இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் வீர ஆஞ்சனேயரையும் வழிபடலாம். இந்த ராசி அன்பர்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பித்து உள்ளதால், அடிக்கடி ஆயுளைப் பற்றிய அச்சம் ஏற்படக்கூடும். எனவே, அப்படிப்பட்ட நேரங்களில் இங்கு வந்து நரசிம்மரை வழிபட்டால், ஆயுளைப் பற்றிய அச்சம் நீங்குவதுடன் திருமணத் தடையும் விலகும்.
இந்த ஆலயத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வந்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். மஞ்சள் சார்த்தி வழிபட, மங்கலம் பெருகும்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இந்தக் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமி விசேஷமான தினமாகும். வேடசந்தூர் நரசிம்மர் கோயிலைப் போலவே, நாமக்கல் அருகில் உள்ள மோகனூரில் அமைந்திருக்கும் கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சென்றும் வழிபடலாம்.
புகழ் குன்றில் ஏற்றும் குணசீலம்!
மகர ராசிக்கு அதிபதி யாக சனிபகவான் அமைகிறார். அவரின் எதிர் கிரகமான செவ்வாய் இந்த ராசியில் உச்சமாகிறார். உத்திராடம் 2, 3, 4ம் பாதங்கள், திருவோணம் மற்றும் அவிட்டத்தின் முதல் இரு பாதங்கள் ஆகியன இதில் அடங்கும். பெருமாளின் நட்சத்திரம் இதில் வருகிறது. இந்த ராசிக்காரர்கள், திருச்சிசேலம் செல்லும் வழியில், காவிரிக் கரையில் உள்ள குணசீலம் தலத்தில் அருளும் பெருமாளை வழிபடுவது விசேஷம். திருவோண நட்சத்திர தினங்கள், வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் இந்தக் கோயிலுக்குச் சென்று துளசி மாலை அணிவித்து, பெருமாளை வழிபட்டு வரலாம்.
இந்த ராசியில் நெருப்பு கிரகம் செவ்வாய் உச்சமாகிறார். எனவே, உடல் உஷ்ணம் தொடர்பான குறைபாடுகள், எலும்புத் தேய்வு, தைராய்டு பிரச்னைகள், நரம்புப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். இவற்றையெல்லாம்  குணமாக்கும் வைத்தியராகத் திகழ்கிறார் இந்தத் தலத்தின் பெருமாள். இந்தக் கோயிலில் தரப்படும் தீர்த்தமானது வயிற்றுவலிக்கு அருமருந்தாகத் திகழ்கிறது. குணசீல முனிவர் தவம் புரிந்த சிறப்பும் இத்தலத்துக்கு உண்டு. இத்திருக்கோயிலில் உச்சிக்காலம் மற்றும் அர்த்தஜாம பூஜைகள் விசேஷமானவை.
இந்தத் தலம் மட்டுமின்றி, கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் அருள்பாலிக்கும்  அருள்மிகு வைகுண்ட நாராயண பெருமாளையும் இந்த ராசிக்காரர்கள் வழிபடலாம்.
திருப்பம் தரும் திருவேங்கடநாதபுரம்
கும்ப ராசி சனி பகவானின் ராசியாக உள்ளது. இதில் சனி முழு பலத்துடன் காணப்படுகிறார். பொறுமை இவர்களிடம் அதிகம் இருக்கும். வேலைக் காரர்களாக இருந்து, முதலாளியாக மாறும் தகுதி பெற்றவர்கள். அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதியின் முதல் மூன்று பாதங்கள் இதில் இடம்பெறுகின்றன. இந்த ராசிக்காரர்கள் நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் உள்ள பெருமாளை வணங்கி வழிபடுவது சிறப்பு.
புதன், வெள்ளி, சனிக்கிழமைகள் மற்றும் ஏகாதசி திதி நாட்களில் இந்த ஆலயத்துக்குச் சென்று மலர் மாலைகள் அணிவித்தும், நெய் தீபம் ஏற்றியும் பெருமாளை வழிபட்டு வரலாம். அத்துடன், பக்தர்களுக்கு தயிர்சாதம் வழங்குவது விசேஷம்! இங்குள்ள கருடாழ்வார் சங்குசக்கரத்துடன் காட்சி தருவது சிறப்பம்சம். அரிய வகை கல்வெட்டுகளும் இங்கு உள்ளன.
இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால், நாக தோஷம் நீங்கும்; குழந்தை பாக்கியம் விருத்தியாகும்; வியாபாரம் செழிக்கும். பொருளாதார அந்தஸ்து தரக்கூடிய ஸ்தலமாகவும் இந்தத் திருத்தலம் விளங்குகிறது. மேலும், வேலூர் மாவட்டம், திருப்பாற்கடல் தலத்தில் அருளும் ரங்கநாதரையும் தாயாரையும் வழிபடலாம்.
கொல்லிமலை நந்திக்கு அருகம்புல் அர்ப்பணம்!
மீன ராசி குரு பகவானின் ராசி. குரு இந்த ராசியில் ஆட்சி பெற்றாலும், அவருடைய பகை கிரகமான சுக்கிரன் உச்சம் அடையும் ராசியாகும். அதனால், இவர்கள் வித்தியாசமாக சிந்திப்பவர்கள். இந்த ராசிக்காரர்கள் நாலும் தெரிந்தவர்களாகவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்வார்கள். பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியன இதில் அடங்கும்.
இந்த ராசிக்காரர்கள், சேலம் மாவட்டம், கொல்லிமலையில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு அறப்பளீஸ்வரரை வழிபடலாம். இங்கே ஸ்வாமி சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். மீன ராசிக்காரர்கள் இந்த ஸ்வாமியை வழிபடுவதால், நல்ல பலன்களை அடையலாம். இங்கே அருளும் அறம்வளர்த்த நாயகியும் வரப்பிரசாதியானவள். முன் மண்டப விதானத்தில் அமைந்த அஷ்டலட்சுமியுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் இக்கோயிலின் விசேஷ அம்சம். இதன் கீழ் நின்று அம்மையப்பனை வழிபடுவதால், அதீத நன்மைகள் கிடைக்கும்; செல்வ வளம் பெருகும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்தத் தலத்துக்குச் சென்று தரிசிப்பதும், இங்குள்ள நந்தியெம்பெருமானுக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபடுவதும் விசேஷம்!
இந்தத் தலம் மட்டுமின்றி, மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் உள்ள திருக்குருக்கையில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை யோகீஸ்வரரை வழிபடுவதாலும் மேன்மை அடையலாம்

No comments:

Post a Comment