Saturday, April 23, 2016

விரதத்திற்கு பின்னால் உள்ள விஞ்ஞானம்!

விரதம் இருப்பது மூடநம்பிக்கை....இல்லையில்லை அது மத நம்பிக்கை என இருவேறு கருத்துக்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், உண்மையில் விரதத்திற்கு பின்னால் இருக்கிறது மிகப்பெரிய விஞ்ஞானம். அதை கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாமே!
விரதம் இருப்பது ஏன்...?
'அன்னத்தை அடக்கியவன் ஐந்தை (கண், காது, மூக்கு, வாய், உடல்) யும் அடக்குவான்' என்பார்கள். இவைகளை கட்டுப்படுத்தும்போது, நம் மனம் ஞானத்தை தேடி செல்கிறது என்பதை அத்தனை தத்துவ ஞானிகளும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். வாயை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணில் பட்டதையெல்லாம் வயிற்றுக்குள் அடைத்து விடுவது, பிறகு பல்வேறு உபாதைகளுக்கு பிறகு, டயட்டில் இருப்பது வழக்கமாகிப்போனது.
மக்களின் மன ஓட்டத்தை அறிந்துகொண்ட வணிக மருத்துவ உலகம் நியூட்ரிஷியன், டயட்டீஷியன் ஸ்பெஷலிட்டுகளை உருவாக்கி கல்லா கட்டிவருகிறது. 'அதை சாப்பிடுங்க, இதை சாப்பிடுங்க' எனவும், நாம் எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் எனவும் ஆர்டர் போடுகிறார்கள். பெரியவர்கள் சொன்னதைக் கேட்டு, தொடர்ந்து பின்பற்றி வந்திருந்தால் இன்று டயட்டீஷியன்களை தேடி நாம் ஓட வேண்டியதில்லை. 
நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். இதனையொட்டித்தான் அமாவாசை, பெளர்ணமி என விரதங்கள் எல்லாம் வரையறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. ஜீரண உறுப்புகள் சீராகிறது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இந்த அடிப்படையில்தான் எல்லா மதங்களுமே விரத்தை தூக்கிபிடிக்கின்றன. சபரிமலை ஐய்யப்பனுக்கு மாலையிட்டு ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருந்து மலைக்கு போய் வருகிறார்கள்.
அதேபோல பழனி முருகனுக்கும் விரதம் இருந்து மாலைபோட்டு போகிறார்கள். அன்னதானங்கள் ஊரெங்கும் வழங்கப்படுகிறது. சுய ஒழுக்கங்கள் வரையறை செய்யப்படுகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து, உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் திருநாளாகக்  கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் மேற்கொள்வர். இதைத் தவக்காலம் என்கிறார்கள். கிறிஸ்தவர்களில் கத்தோலிக பிரிவினர் வேளாங்கன்னிக்கு மாலையிட்டு விரதம் இருந்து வருகிறார்கள்.
ரம்ஜான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், தர்மம் என்ற கோட்பாடுகள் முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஒருவர் சேமித்தவற்றில், குறிப்பிட்ட அளவை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் வழங்க வேண்டும் என்பதற்காக ஜகாத், பித்ரா, சதகா போன்ற தர்மங்கள் என்பது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சமணர்களின் ஷ்ராவண மாதத்தில் விரதம் இருந்து, பின்னொரு நாள் ஒருவரை ஒருவர் சந்தித்து 'மிச்சாமி துக்கடம்'  என சொல்கிறார்கள். சென்ற காலத்தில் நான் ஏதேனும் வகையில் உன்னைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடு என்று அர்த்தமாம். சமண மதத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் தவ நிகழ்வான 'சல்லேகனை விரதம்' மோட்சம் அடைவதற்காக ஆகாரம் உண்ணாமல் பின்பற்றப்படும் ஒரு விரதம் என்கிறார்கள்.
வருடத்தின் ஆரம்பப்பகுதியில் 40 நாள் உபவாசம் இருப்பது பூர்வ பாபிலோனியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள் ஆகியோர் மத்தியில் சகஜமாக இருந்து வந்திருக்கிறது.
மொத்தத்தில் சகல மார்க்கங்களும் விரதத்தை உடலையும், மனதையும் செம்மைப்படுத்தும் விஷயமாகவே வழிநடத்தி வந்திருப்பதை அறியலாம்.
இல்லாதவர்களுக்கு கொடுத்து எல்லாருக்கும் எல்லாமும் சென்றடைய வேண்டும் என்ற பொதுநலத்தையும் போதித்து வந்திருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான நிஜம் என்ன தெரியுமா? எந்தவொரு விஷயத்தையும் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டல காலத்துக்கு தொடர்ந்து செய்யும்போது, இயல்பாகவே அதற்கு நம் மனமும், உடலும் பழக்கப்பட்டுவிடுகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உளவியல் உண்மை.
உடல் நலம், மன நலம், பொது நலம் கலந்த விரதங்களை அதன் புராதன கதைகளை மட்டும் கேட்டு புரிபடாமல் விட்டுவிடாமல், அதன் காரணங்களை அறிந்து, அதற்குள் உள்ள விஞ்ஞானத்தை புரிந்து பின்பற்றினால், இந்த உலகமே புதிதாய் மாறும் என்பதில் சந்தேகமில்லை. 

Friday, April 22, 2016

YOGA...



ள்ளூர் மாடு விலை போகாது என்பார்கள்...அது உண்மைதான். முன்னோர்கள் வடிவமைத்துக் கொடுத்த வாழ்வியல் கலையான யோகாவை, கண்டுகொள்ளாமல் இருந்து விட்டோம். ஆனால், அதன் அருமை பெருமைகளை உணர்ந்த மேலை நாட்டினர் பயன்படுத்தி கொண்டாடுகிறார்கள்.
அப்படி என்னதான் இருக்கிறது யோகாவில்?

இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிர்களும் பல்வேறு பரிமாணங்களாக மாற்றம் பெற்று வந்தவை. இவை அனைத்தும் இயற்கையை மையமாக வைத்ததே இயங்குகிறது. ஒவ்வொரு உயிருக்கும் உடல், மனம், அறிவு, உணர்வு போன்றவை இருக்கின்றன.  இவை அனைத்தையும் சமன்படுத்தும் கலைதான் யோக கலை. சுருக்கமாகச் சொன்னால் உடலையும் உள்ளத்தையும் ஒழுக்கத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவும் அறிவியலே யோக கலை.
ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைக்கும் செயல் யோகா என்கிறது இந்து மதம். உடலைக் கொண்டு செய்யும் செயல்களை கர்மயோகா என்றும், உணர்வு, பக்தி, அர்ப்பணித்தலை பக்தி யோகா என்றும், மனம், அறிவு நிலையை ஞானயோகா என்றும்,  ஒட்டு மொத்த உள் சக்தியை மேம்படுத்தும் செயலை க்ரியா யோகா என்றும் யோகாவை பல நிலைகளாக பிரித்து வைக்கிறார்கள். இந்த நான்கு வழிகள் மூலமாக ஒரு மனிதன்,  தன் உள்நிலையை உணரலாம்.
அறிவு வழியாகவோ, பக்தி வழியாகவோ, பயன்கருதாத பணிகள் மூலமாகவோ, உள்நிலை சக்திகளை மாற்றி அமைப்பதன் மூலமாகவோ இது சாத்தியம்.  இதையே உடல், மனம், அறிவு, சக்தி என்று சுருக்கமாக சொல்லலாம். அறிவு சார்ந்தோ, மனம் சார்ந்தோ, உழைப்பு சார்ந்தோ, சக்தி சார்ந்தோ மனிதன் முழுமையானதாக இருந்துவிடுவதில்லை. ஆனாலும் இந்த நான்கு பரிமாணங்களின் கலவைதான் மனிதன். அவன் வளரவேண்டுமானால் இந்த நான்கு பாதைகளின் ஒருங்கிணைந்த மார்க்கமான பக்தி, ஞானம், கர்மா, கிரியா ஆகியவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
அந்த இணைப்புக்கு பெயர்தான் யோகா. இந்த நான்கு நிலையில் ஒருங்கிணைக்கப்பட்டு உயர்ந்த நிலையை தழுவியவர்கள் சித்தராக, ஞானியாக, யோகியாக பார்க்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி அவர்களில் சிலர் கடவுளாகவும் பார்க்கப்படுகிறார்கள். போதி மரத்தடியில் ஞானோதயம் பெற புத்தர் ஆறு ஆண்டுகள் ஆழமாக யோக பயிற்சியை மேற்கொண்டார். பன்னிரெண்டு ஆண்டுகள் யோக பயிற்சியில் ஈடுபட்ட மகாவீரர் சமண சமயத்தை நிறுவினார். கடவுளாக பூஜிக்கப்படுகிற ஒவ்வொருவரும் யோகா, தியானம் செய்தார்கள் என்கிறது வரலாறு.
கடந்த காலங்களில் எல்லோருக்கும் இந்த கலை எளிதில் கிடைத்துவிடவில்லை. யோக கலையை கற்க நினைத்தவர்கள், குருமார்களைத் தேடி மலை அடிவாரங்களில் காத்துக் கிடந்தனர். மலையில் இருந்த யோகா இப்போது ஒவ்வொருவர் வீடுகளுக்கும் வந்துவிட்டது. இந்த கலை, வேதங்காலத்துக்கு முன்பே தோன்றியதாக சொல்கிறார்கள். யோக வழியை முதன் முதலாக ’ஹிரண்யகர்பர்’  காட்டினார் என்றும்,  அதை பதஞ்சலி முனிவர்தான்  சூத்திரமாக்கினார் என்றும்,  அதிலிருந்து  வியாசர் வேத சூத்திரம்மாக்கினார் என்றும்,  நாரதர் பக்தி சூத்திரமாக்கினார் என்றும் சொல்கிறார்கள்.
பல கட்டங்களில் பல யோகிகள், மக்களிடம் யோக கலையை கொண்டு சேர்த்திருக்கிறார்கள். இமயமலையில் யோக நிலையில் இருந்த ஆதியோகி,  குருபவுர்ணமி அன்று ஏழுபேர்களுக்கு இதை கற்றுக் கொடுத்து அவர்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள், உலகம் முழுவதிலும் வெவ்வேறு பெயர்களில் ஆன்மிக வடிவில் இந்த யோகாவை கொண்டு சென்றார்கள். அகத்தியர் கூட அப்படி அனுப்பி வைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் என்றும் சொல்லப்படுகிறது.
மிதவாத தன்மைக்கு இமயம், புனித தன்மைக்கு நியமம், அமர்தல் தன்மைக்கு ஆசனம், மூச்சு விடுதல் தன்மைக்கு பிராணாயாமம், ஐந்து புலன்களை அடக்கும் தன்மைக்கு ப்ரத்யாஹாரம்,  மனதை ஒரு நிலைபடுத்தும் தன்மைக்கு தாரானை, ஆழ்ந்த தன்மைக்கு தியானம், விடுதலை தன்மைக்கு சமாதி என எட்டு அங்கங்களை கொண்ட 185 சுருக்கங்களைக் கொண்டிருக்கிறது பதஞ்சலி யோகசூத்திரம்.இவைகள் தவிர யோகி ஸ்வாத்மராமாவின் உடல், மனம் மற்றும் இன்றியமையாத சக்தியை பெற பயன்படும் ஹத யோகா உட்பட மேலும் பல யோகா வகைகளும் உண்டு.
கடந்த காலங்களில் மலேசியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிலும் இந்த யோக கலை பரவியது. பண்டைய யோக சாஸ்திர நூலான அமிர்த குண்டா, அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அங்கே பயிற்றுவிக்கப்பட்டது. யோகாவில் இந்து மதத்தை புகட்டும் சாத்திய கூறுகள் இருப்பதாக கடந்த 2008-ல் அங்கே எதிர்ப்பு கிளம்பி தடை ஏற்பட்டது.  ஆனாலும் அங்கேவுள்ள பெண்ணுரிமை இயக்கங்கள் யோகாவை ஆதரித்தன. அதேபோல் கிறிஸ்தவ நாடுகளிலும் இதுபோன்று பிற சமயங்களை சார்ந்த எந்த ஒரு கலையையும் ஏற்க முடியாது என எதிர்ப்பு கிளம்பியது. 
" யோகா ஒரு விஞ்ஞானம், அதை மதமாக பார்க்க வேண்டாம். மனித நல்வாழ்விற்கு யோகா அவசியம்” என  குருமார்கள் மற்றும் இந்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. அதனை ஏற்றுக் கொண்ட ஐ.நா சபை, ஜூன் 21-ம் தேதியை ’யோகா தினம்’ என அறிவித்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் யோகா கலை பயிற்றுவிக்கப்பட்டது.
அதுபோல் இந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதியும் யோகா தின பயிற்சி நடக்கிறது.
இந்த கோபதாப அவசர  உலகில்,  உடலையும் உள்ளத்தையும் ஒருங்கிணைக்கும் யோகா அனைவருக்கும் அவசியமானதே!

Wednesday, April 20, 2016

விஞ்ஞானிகள் வியக்கும் 'ஹோமம் தெரபி'

சூர்யாய ஸ்வாஹா
   சூர்யாய இதம் நமஹ
   பிரஜாபதேய ஸ்வாஹா
   பிரஜாபதேய இதம் நமஹ'
- இவை அக்னிஹோத்ர மந்திரத்தின் எளிய சொற்களாக விளங்குபவை. வேதங்களில் கூறப்பட்டுள்ள யக்ஞங்களில் மிகவும் எளியது இதுதான். அக்னி ஹோத்ரம் வானிலையை மாற்றுகிறது. அதில் ஈடுபடுபவர்களின் மனத்தையும், பக்குவப்படுத்துகிறது.

அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் இந்தப் பயன்களை அடைய முடியுமா என்பதை விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்கிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிவபுரி என்ற ஊரில் இதற்காக ஓர் ஆராய்ச்சி நிலையமே நிறுவப்பட்டிருக்கிறது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சக்தி, வம்ச அடிப்படை, மருத்துவம், விவசாயம் போன்றவை வளம் பெறுவதற்குக் கூறப்பட்டிருக்கும் குறிப்புக்களை இங்கே விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்கிறார்கள்.
ஜெர்மனியின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் பிரெடரிக் மாக்ஸ்முல்லர்,  இப்படி குறிப்பிட்டார்:
   'அக்னிம் இதே புரோசிதம் -யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம்
    ஹோதாரம் ரத்னதாதமம்
உலகத்தின் பழம்பெரும் நூலான ரிக்வேதத்தில் வரும் முதல் வாசகம் இது. 'அக்னியை நான் வணங்குகிறேன். யாகத்தின் முதல் தலைவனும், தெய்வீகம் நிறைந்த முதல்வனும், சக்தியைத் தூண்டுபவனும், எல்லாச் செல்வங்களையும் அருளுபவனும் ஆகிற அக்னியை நான் வணங்குகிறேன்.''
ஹோமம் என்பது சாதாரண நெருப்பல்ல. விதிப்படி அதை தயார் செய்ய, குறிப்பிட்ட பொருட்களை உபயோகிக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சக்தியைப் பெற, குறிப்பிட்ட மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
சிவபுரியில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 2,500 ஆண்டுகளுக்குப்பிறகு, முதன்முறையாக அகல்கோட் மடத்தைச் சேர்ந்த கஜானன் மகராஜ் என்ற பெரியவரால் சோமயக்ஞம் முறைப்படி செய்யப்பட்டது. அந்த யாகத்தில், கூடவே ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. விஞ்ஞான ரீதியாகப் பல முடிவுகள் அதிலிருந்து வகைப்படுத்தப்பட்டன.
ஹோமங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறியதும் எளியதுமான ஒன்று அக்னிஹோத்ரம். இது இயற்கையின் விஞ்ஞான வழியில் மனிதனின் மனத்தைப் பண்படுத்துகிறது. இதனால் உடலுக்கும், சில அடிப்படையான பக்குவங்கள் கிடைக்கின்றன. இவை ஆயுர்வேத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
அக்னிஹோத்ரம் ஒருநாளைக்கு இரண்டு முறைகள் செய்யப்படவேண்டும். சரியாக சூரியன் உதிக்கும்போதும் சூரியன் மறையும்போதும் செய்யவேண்டும். இயற்கையின் சுழற்சியை ஒட்டி இது செய்யப்படுவதால் சூரியனின் தோற்றமும் மறைவும் இதற்கு உரிய கால அளவுகளாக இருக்கின்றன.
இதைப் பற்றி வாஷிங்டனில் நடைபெற்ற ஆராய்ச்சியின்போது 'சூரியோதயத்தின்போது சக்தி மிகுந்த மின்னணுக்கள், நெருப்பு மின்னல்கள் பூமியை நோக்கி வருகின்றன. இந்த ஒளிவெள்ளத்தின் ஆற்றல் அபாரமானது. தீய பொருட்கள் அந்த உதயத்தில் கருகி அழிந்துவிடுகின்றன. உயிர் கொடுக்கும் சக்தி ஓங்குகிறது. அந்த வேளையில் அக்னிஹோத்ர மந்திரங்களை இசையுடன் கூறுவது அந்தச் சக்தியை தூண்டுகிறது. மாலையில் சூரியன் மறையும் வேளையில் இந்தச் சக்தி மெள்ள மெள்ள சுருங்கி அடங்குகிறது. அப்போதும் இந்த மந்திரம் அதன் இயக்கத்துக்கு ஏற்றபடி அமைகிறது' என்று கண்டறியப்பட்டது.
சூரியனின் சக்தியைப் பொறுத்தே வானிலை அமைந்திருக்கிறது. வானத்தில் பரவி இருக்கும் பல்வேறு மண்டலங்களிலும் அந்தச் சக்தி இயங்குகிறது. வெள்ளம்போல் எலெக்ட்ரான் அணுக்கள் பூமியின் காந்த மண்டலத்தை நோக்கி வந்து சேருகின்றன.
பூமியைச் சுற்றி உள்ள மின்காந்த மண்டலமும் நம் எண்ணங்களையும் உணர்ச்சி அலைகளையும் ஏந்தி நிற்கிறது. மிதமான நிலையில் இதன் வேகம் ஏழு சுழற்சிகள் ஆகும். நாம் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியான நிலையில் தியானத்தில் அமரும்போது, நம் மூளையில் எழும் அலைகளும் அப்போது ஒரு வினாடிக்கு ஏழு சுழற்சிகள் வீதமே இயங்குகிறது. ஆகவே, தியான நிலையில் நாம் இயற்கையான சூழ்நிலைக்குப் பொருந்தி விடுவோம்.
அக்னிஹோத்ரம் செய்ய கூர் உருளை வடிவம் கொண்ட செப்புப் பாத்திரம், காய்ந்த பசுஞ்சாண வறட்டிகள், சுத்தமான நெய், நவதானியங்கள் ஆகும். ரசாயன முறைப்படி புரதச் சத்து மிகுந்த அரிசி, முட்கள் நிறைந்திருக்கும் மரங்களின் சுள்ளிகள் ஆகியவையே ஹோமத்துக்கு உரியவை. காலையும் மாலையும் அக்னி மூட்டப்பட்டு ஹோமம் நிகழ்த்தப்படுகிறது.
வறட்டித் துண்டுகளும், அரிசியும், நெய்யும் அக்னியில் சேர்க்கப்படுகின்றன. விரல் நுனியில் மட்டுமே எடுக்கக் கூடிய அளவு அரிசியை எடுத்து, 'சூர்யாய ஸ்வாஹா, சூர்யாய இதம் நமஹ' என்று முதல் மந்திரம் உச்சரிக்கப்படுகிறது. தொடர்ந்து, 'பிரஜாபதயே ஸ்வாஹா, பிரஜாபதயே இதம் நமஹ' என்று இரண்டாவது மந்திரம் கூறப்படுகிறது. இது உதய காலத்தில் செய்யப்படும் தொடக்கம்.
இதேபோல் 'அக்னயே ஸ்வாஹா, அக்னயே இதம் நமஹ' 'பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் நமஹ' என்று சந்தியா காலத்தில் உச்சரிக்கப்படுகிறது. அப்போது அக்னிஹோத்திர பாத்திரத்தைச் சுற்றி அபரிமிதமான சக்தி அலைகள் உருவாகின்றன. காந்த சக்தி மிகுந்த மண்டலம் உருவாகி, அழிவுச் சக்திகளைத் தடுத்து வளர்ச்சி சக்திகளை அமைக்க உதவி செய்கின்றன. இவ்வாறு அக்னி ஹோத்திரம் வளர்ச்சியையும், செழுமையையும் தூண்டுகிறது. இவை அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் விஞ்ஞான அடிப்படையில் எடுக்கப்பட்ட அளவுகளாகும்.
பூனாவில் உள்ள ஆராய்ச்சிக் கழகத்தில் பாரி ராத்னர், அர்விந்த் மாண்ட்தர் ஆகிய விஞ்ஞானிகள், அக்னிஹோத்ரம் செய்யப்படும் இடத்தில்,  ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு கணிசமாகக் குறைந்திருப்பதையும், ஹோமப் புகையில் பார்மல்-டி, ஹைட் என்ற உயிரணுக்களுக்கு செழுமையை ஊட்டும் பொருள் நிறைந்திருப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.
சுமார் 30 வருடங்களுக்கு முன்பே அமெரிக்க விஞ்ஞானி ஆன்மெக்ளிப்ஸ்,  ''இன்றைய தொழில் வளர்ச்சியினால் காற்று, மண், நீர் ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவை மூன்றையும் தூய்மைப் படுத்தவேண்டியது மனித குலம் உயிர் பிழைக்க மிகவும் அவசியம். இதற்கு அக்னிஹோத்திரம் உதவுகின்றது" என்று சொல்லி இருக்கிறார்.
அக்னிஹோத்ரம் செய்யப்படுவதற்கு முன்பும் செய்த பின்பும் வானிலையில் உள்ள பண்புகளை 'எலோப்டிக்' சக்தி அளவுமானியின் மூலம் பகுத்து அறிந்திருக்கிறார்கள். அக்னிஹோத்திரம் செய்த பிறகு இந்த சக்தி கணிசமான அளவு உயர்ந்திருப்பதை அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
சரும நோய்கள், மூச்சு வியாதிகள், இருதய பாதிப்புகள், தொண்டை வியாதிகள் ஆகிய நோய்களில் இருந்து நிவாரணம் தரக்கூடிய மருந்துகள் அக்னிஹோத்திரம் நிகழ்த்தி அந்தச் சூழலிலேயே தயாரிக்கப்படுவதாகவும், இந்த மருந்துகளைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக விளங்குவது அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் இருந்து திரட்டப்படும் சாம்பலே ஆகும் என்றும் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர், மோனிகா ஜெஹ்லே கூறி இருக்கிறார்.
அக்னிஹோத்திரம் ஹோமாதெரபியைப் போல் செயல்பட்டு, உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்திருக்கிறது. மனம் அமைதிப்படுவதால் ரத்தத்தின் பண்பும் துடிப்பும் மேம்படுகின்றன. வியாதிகளால் வரும் பாதிப்புகள் குறைகிறது. மனதைத் தூய்மைப்படுத்தி.. தன்னம்பிக்கையையும் செயல்திறனையும் வளப்படுத்த உதவுகிறது. அக்னியின் மூலம் வானமண்டலமும் தூய்மை அடைகிறது. அதனால் இயற்கையின் இயக்கத்துக்கு ஏற்ற அளவில் மனமும் இயங்கி அமைதி அடைகிறது.
அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் ஒரு சக்திமண்டலம் உருவாகிறது. இந்த நிலையில் அங்கே வளரும் தாவரங்கள் செழுமையுடன் சத்துக்களையும் பெறுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பே மஹாராஷ்டிராவில் உள்ள,  திராட்சைப் பயிர் பெருக்கத் துறையின் விஞ்ஞானிகள் இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். நாசிக் மாவட்டத்தில் பஸ்வந்த் என்ற கிராமத்தில், திராட்சைப் பயிர்கள் ஆறுமாதத்தில் பெறக்கூடிய வளர்ச்சியையும் செழுமையையும் மூன்று வாரங்களிலேயே அடைந்திருக்கின்றன.
உலகமெங்கும் வானிலை, நீர், மண் ஆகியவற்றை வளப்படுத்தி, மனிதனின் மனதையும் பண்படுத்தி உயிர்கள் வளர உதவி, தாவரங்களையும் செழுமைப்படுத்தும் அக்னிஹோத்திரத்தை வாழ்வளிக்கும் மகாசக்தியாகப் போற்றுவது முற்றிலும் சரிதான்