Wednesday, May 25, 2016

காலக் கணிதத்தின் சூத்திரம்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
சூரியனின் சூடும் சந்திரனின் குளிர்ச்சியும் அத்தனைப் பொருட்களிலும் இணையும். தன்னுடைய கிரணத்தை சண்டாளன் வீட்டிலும் வாரி இறைப்பான் சந்திரன் என்கிறது ஜோதிடம் (சந்திர: சண்டாளவேச்மனி). பாகுபாடு இல்லாமல் தங்களின் கிரணங்களை அத்தனையிலும் பரவ வைப்பவர்கள் சூரியனும் சந்திரனும். பிறப்பு முதல் இறப்பு வரையிலான இடைவெளியில் தென்படும் பலவிதமான மாறுபாடுகளுக்கு அவர்களே காரணம். 
தோற்றத்துக்கு குளிர்ச்சி அவசியம். மாறுபாட்டுக்கு வெப்பம் தேவை. பயிர் முளைக்க நீர் வேண்டும். அது வளர்வதற்கு வெப்பம் தேவை. தாமரையை மலரச் செய்ய சூரிய வெப்பம் உதவும். ஆம்பல் மலர்வதற்கு சந்திரனின் குளிர்ச்சி உதவும். மற்ற கோளங்களுக்கும் கிரணங்கள் உண்டு. அவை, சூரிய-சந்திர கிரணங்களுடன் இணைந்து செயல்படும். பரம்பொருளின் ஒளியில் இருந்து சூரியனும் ஒளிப்பிழம் பாகக் காட்சியளிக்கிறான் (தஸ்யபாஸா ஸர்வமிதம்விபாதி) எனச் சொல்லும் வேதம், மற்ற கோள்களும் பரம்பொருளின் இணைப்பில் செயல்படுகின்றன என்கிறது (தமே வயாந்துமனுபாதிஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி).
காற்றின் தொடர்பு புஷ்பத்தின் வாசனையை வெளிக்கொண்டு வரும். ஆகாசத்தின் உதவியில் அந்த வாசமானது எங்கும் பரவும்.  தண்ணீரின் தொடர்பில் சந்தனப் பொடியில் இருக்கும் நறுமணம் வெளிவரும். நெருப்பின் தொடர்பில் ஊதுவத்தியின் நறுமணம் பரவும். காலத்துடன் இணைந்த கிரகங்களின் தொடர்பில் கர்ம வினை வெளிப்படும். மறைந்திருக்கும் கர்மவினையை வெளிப்படுத்துவது ஜோதிடம் என்று விளக்கமளிப்பார் ப்ருதுயசஸ் (கர்மண: பக்திம் வ்யஞ்ஜயதிசாஸ்த்ரமேதத்). குட்டைத் தண்ணீர் வெப்பத்தின் தாக்கத்தில் சேறாகக் காட்சியளிக்கும். சாலையில் இருக்கும் இறுக்கமான 'தார்’ வெப்பத்தின் தாக்கத்தால் உருகி தண்ணீர் போன்று திரவமாகிவிடும். பொருளின் தரத்தில் மாறுதல் நிகழும். வெப்பம் மாறுதலுக்குக் காரணமாகாது; வெப்பத்தை சந்தித்த பொருளின் தரம் மாறுதலுக்கு உட்படும். தாமரைப் பூவை மலர வைக்கும் வெப்பம், ஆம்பல் பூவை மலர வைப்பது இல்லை.
கிரணங்களின் தொடர்பு அவரவர் கர்மவினையை வெளிக் கொண்டு வரும். கர்மவினையின் தரத்தை அது நிர்ணயம் செய்யாது. முற்பிறவி செயல்பாடுகளின் சேமிப்பு கர்மவினை. புது உடலில் புகுந்த ஜீவாத்மாவுக்கு பழைய உடலின் நிகழ்வுகள் நினைவுக்கு வராததால், அது அதிருஷ்டம்... அதாவது கண்ணுக்குப் புலப்படாததாக மாறிவிட்டது. கருவறையில் இருந்து வெளிவந்த குழந்தைக்கு பழைய நினைவுகள் மறைந்துவிடும் என்கிறது புராணம். யோனியில் இருந்து வெளிவரும் வேளையில் ஏற்படும் இறுக்கமே நினைவு மறையக் காரணம் என்று விளக்கும். ஆனால், சேமித்த செயல்பாடுகள் வாசனை வடிவில் மனத்தோடு இணைந்திருக்கும். வாசனை அனுபவத்துக்கு வரும் வேளையை ஜோதிடம் சுட்டிக் காட்டும் (சுபாசுபம் தஸ்தகர்மண:பக்திம்). நாம் உணரும் இன்ப-துன்பங்களுக்கு நாம்தான் காரணம் என்றும் அது விளக்கும் (ஸ்வகர்ம சூத்திரக்ரதி தோஹிலோக:).
துயரத்தையும் மகிழ்ச்சியையும் யாரும் நமக்கு அளிப்பதில்லை.  பிறரால் விளைந்தது என்ற விளக்கம் நமது அறியாமையே. நமது கர்மவினையே நமது சுக துக்கத்துக்குக் காரணம் என்பதே உண்மை என்று ஜோதிடம் விளக்கும் (ஸ¨கஸ்யதுக்கஸ்யந கோபிதாதாபரோ ததாதீதிகுபுத்திரேஷா...). கர்ம வினையை தவறாமல், சிதறாமல் அளிப்பதற்கு தோதாக, ஒருவன் காலத்துடன் இணையும் வேளையில்... அதாவது அவன் பிறக்கும் வேளையில், அவனது சுக-துக்கங்களுக்கு ஏற்றபடி, கிரகங்கள் ராசிக்கட்டத்தில் அமர்ந்துவிடும். லக்னம்- புது உடலில் புகுந்த ஜீவாத்மா.
உலகின் ஆன்மா சூரியன் என்கிறது வேதம் (சூர்ய ஆன்மா ஜகத:...). பிரமாண்டத்தின் பிண்டாண்டமான உடலை இயக்குபவன் சூரியன், ஆன்மகாரகன் சூரியன் என்கிறது ஜோதிடம். பரம்பொருளின் மனத்திலிருந்து சந்திரன் உருப்பெற்றான் என்கிறது வேதம் (சந்திரமாமனதோஜாத:). சந்திரனை மனத்துக்குக் காரகன் என்கிறது ஜோதிடம். 'காரகன்’ என்ற சொல்லுக்கு நடைமுறைப்படுத்துபவன் என்று பொருள். ராசி புருஷனுக்கு சூரியன் ஆன்மாவாக வும், சந்திரன் மனமாகவும் செயல் படுவர். அவர்களின் இணைப்பில் ராசி உயிர் பெற்று செயல்படுகிறது. ஒரு நிலையில் இல்லாமல் தேய்ந்தும் வளர்ந்தும் தென்படும் சந்திரன், மனத்தின் இயல்பைப் பெற்றிருக்
கிறான். எதிலும் ஒட்டாமல் ஒளிப்பிழம்பாக காட்சியளிக்கும் சூரியன், உயிரினங்களின் இயக்கத்துக்குக் காரணமாக தென்படுகிறான். ஆன்மாவும் உடலோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து, மனத்தோடு இணைந்து உடல் இயக்கத் திற்குக் காரணமாக தென்படுகிறது என்று வேதம் விளக்கும்.
சூரியன் தோன்றும் வேளையில் உயிரினங் கள் உயிர்ப்பெற்று உணரத் துவங்குகின்றன. அவன் மறையும் தறுவாயில் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகின்றன (யோஸெளதபன்னு தேதி.ஸஸர்வேஷாம் பூதானாம் ப்ரணானாதா யோதேதி...). சூரியனில் களங்கம் இல்லை. ஜோதி வடிவில் கரும்புள்ளி இல்லாமல் தென்படு வான். சந்திரனில் களங்கம் இருக்கும். அதன் கரும்புள்ளி கண்ணுக்குப் புலப்படும்.  மனித மனத்திலும் முற்பிறவி வாசனை ஒட்டிக் கொண்டிருக்கும். அதுவே மனத்தில் சிந்தனை மாற்றத்தை நிகழ வைக்கிறது. வளர்பிறை தேய்பிறை மாற்றங்கள், மனமாற்றத்தை சுட்டிக்காட்டுவ தால், சந்திரனை மனத்தோடு இணைக்க அதன் இயல்பு காரணமாகிறது. வளர்ந்தோங்கி செழிப்பு பெறும் செயல்பாடு களுக்கு வளர்பிறையும், குறை நீங்கி நிறைவு பெற தேய்பிறையும் சிறந்தது என்ற முகூர்த்த சாஸ்திரத்தின் கூற்று, இயல்பில் மனத்துடன் இணைந்தவன் சந்திரன் என்பதை உறுதி செய்கிறது. ஒழுக்கத்தில் உயர்ந்த ரகு வம்சத்தை சூரியவம்சம் என்றும், அதாவது சூரியனிலிருந்து வெளிவந்து வளர்ந்த பரம்பரை என்றும், சூதும்வாதும் கலந்து களங்கத்துடன் செயல்படும் குருவம்சத்தை சந்திர வம்சம் என்றும் புராணங்கள் சுட்டிக்காட்டும் கணிப்பு, சூரிய- சந்திரரின் இயல்பை உறுதி செய்ய உதவுகிறது. ஆன்மா மனத்துடன் இணையும். மனம் புலன்களுடன் இணையும். புலன்கள் பொருளோடு இணையும் என்று பிருஹத் சம்ஹிதையில்   விளக்குவார் வராஹமிஹிரர் (ஆன்மா மனஸாஸம்யுஜ்யதே, மன இந்திரியேண, இந்திரியமர்த்தேன்).
பரம்பொருளிடம் இருந்து ஒளி பெற்று, சூரியனும் சந்திரனும் இணைந்து பிரமாண் டத்தை இயக்குகிறார்கள். பிண்டாண்டத்தில் - நம் உடலில் ஆன்மாவும், மனமும் சூரிய- சந்திரரிடம் இருந்து பலம் பெற்று உடல் இயக்கத்தை நடைமுறைப் படுத்துகிறார்கள். ஐம்பெரும் பூதங்களின் கலவையில் உருப்பெற்ற பிரமாண்டம் சூரிய- சந்திரரால் இயக்கப்படுவது போன்று, அதே பூதங்களின் கலவையில் உருவான பிண்டாண்டத்தை (உடலை) இயக்க சூரிய- சந்திரரின் மறுபதிப்பான ஆன்ம மனஸ் ஸம்யோகம் பயன்படுகிறது. ஜோதிடம் சூரியனையும் சந்திரனை யும் அரசனாகவும் அரசியாகவும் சித்திரிக்கும். பரம்பொருள் ஆற்றல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழிலை நடைமுறைப்படுத்தும். இங்கு உடலில் - பிண்டாண்டத்தில் முத்தொழிலை அரசன், அரசி என்ற கோணத்தில் சூரிய -சந்திரர்கள் நடைமுறைப்படுத்துவார்கள்.
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய கோளங்களை... அரசகுமாரன், படைத்தலைவன், பரிந்துரைப்பவர், தேவைகளைப் பூர்த்தி செய்பவர், உழைப்பால் ஒத்துழைப்பவர்கள்  என்று, அரசனின் (சூரியனின்) செயல்பாட்டை வெற்றியடையச் செய்வதற்கு தங்கள் பங்கை செலுத்துபவர்களாக ஜோதிடம் சித்திரிக்கும். பிரமாண்டத்தில் நடப்பது போன்று பிண்டாண்டத் திலும் ஆட்சி செயல்படுகிறது.
சூரியனை கிரகநாயகன் என்று போற்றுவது உண்டு. வழிநடத்திச் செல்பவன் சூரியன். அவரின் வழி காட்டுதலில் மற்ற கிரகங்கள் செயல்படும். ராசிச் சக்கரத்தில் 'லக்னம்’ பிரதானம். உருப்பெற்ற பிண்டாண்டம் அது. அதன் காரகன் சூரியன். லக்னத்துடன் இணைத்து 12 பாவங்களுக்கும் பலன் சொல்லவேண்டும் என்கிறது ஜோதிடம். இன்பமோ துன்பமோ லக்னம் வாயிலாக உணரப் படும். இன்ப- துன்பங்களை ஜீவாத்மா உணருகிறது. உடலும், உடலோடு இணைந்திருக்கும் மனமும் ஜடப்பொருள்கள்; ஒருநாள் அழிவைச் சந்திப்பவை. ஆன்மாவுக்கு அழிவில்லை. உடலில் அடிபட்டாலும் ஆன்மாவுடன் இணைந்த மனம் அதை உணரும்; ஆன்மாவில் இருந்து விடுபட்ட மனம் உணராது.
ஆன்மாவுடன் இணைந்த மனமானது புலன்களின் வாயிலாக வெளிவந்து, உலகவியல் பொருட்களில் பற்றிக்கொண்டு, அதன் தரத்தை ஆராய்ந்து இன்பத்தையோ துன்பத்தையோ சந்திக்கும். புலன்கள் கருவிகள். மனத்தில் சேமித்த ஆசைகளானது சைதன்ய இணைப்பில் மனத்தைத் தூண்டிவிட்டு, புலன்களின் உதவியுடன் நிறைவேற்றிக்கொள்கின்றன. நிறை, குறை இரண்டையும் உணர்வது ஜீவாத்மா. இந்தக் கோட்பாட்டில் ராசி சக்கரத்தின் அமைப்பு உருவெடுத்திருக்கிறது.
பிறந்த பிறகு, பல ஆசைகள் மனத்தில் உதயமா னாலும் அவற்றை ஏற்று மகிழ முற்படும்போது, முற்பிறவி வாசனையுடன் இணைந்த மனமானது மாறுபட்ட சிந்தனைக்கு உட்படும். தனது விருப்பப்படி இல்லாமல் விபரீத பலனைச் சந்திக்கும்படி செய்துவிடும் கர்மவினை. மனித சிந்தனையை மாற்றியமைப் பது கர்ம வினையின் வாசனை. ஒரு பொருளைப் பற்றிய சிந்தனையில் மனிதருக்கு மனிதர் மாறுபாடு தோன்றுவதற்கு, அவரவர் கர்ம வினையே காரணமாகிறது.
குடும்பச் சூழலில் பலவித துயரங்களுக்கு இலக்கான குரு ஒருவர், சிஷ்யனை அறிவுறுத்தினார். ''நீ உனது வாழ்வில் துயரம் தொடாமல் இருக்க வழி சொல்கிறேன். எனது குடும்ப வாழ்க்கை கசப்பான அனுபவத்தை அளித்துவிட்டது. கைப்பிடித்த மனைவி எதிரியாக  மாறிவிட்டாள். குழந்தைகளும் என்னிடத்தில் நெருக்கமோ பாசமோ காட்டுவதில்லை. வாழ்வை துறந்துவிட்டால் என்ன என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஆகையால் குடும்ப வாழ்க்கையை ஏற்காதே!'' என்றார்.
இதைக் கேட்ட சீடனானவன் தன் நண்பனிடம், ''தான் திருமணம் செய்து கொண்டு, சுகத்தை அனுபவித்து குழந்தைச் செல்வங்களையும் பெற்றுக்கொண்டு பெருமையோடு இருப்பவர், என்னை அதிலிருந்து விடுவிக்க எண்ணுகிறார். நான்  குடும்ப சுகத்தை அனுபவிப்பதில் அவருக்குப் பொறாமை'' என்றான். இப்படியான விபரீத எண்ணம் உதித்தது எனில், அது அவனது கர்மவினையின் விளையாட்டே ஆகும். உண்மையான விளக்கத்தையும் மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைப்பதிலும் கர்ம வினைக்குப் பங்கு உண்டு.
சொற்பொழிவில் வெளிவரும் தகவல்களை மாறுபட்ட கோணத்தில் பார்ப்பவர்கள் இருப்பார்கள். அங்கெல்லாம் சிந்தனை வளம் பெற்றவர்களின் கணிப்பு என்று ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ள இயலாது. தத்தம் கர்ம வினையோடு தொடர்புடைய சிந்தனையை அவரவர் உயர்வாக எண்ணுவர்.
வாசனையற்ற, பக்ஷபாதம் இல்லாத சிந்தனைதான் உயர்ந்த சிந்தனை. பெரும்பாலும் விளக்கவுரைகளானது, அதை அளிப்பவரின் வாசனை கலந்துதான் வெளிவரும். அது, துயரத்தையோ மகிழ்ச்சியையோ சந்திக்க வைக்கும். ஆக, துயரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் நாம்தான் காரணம் என்பதை புரிந்துகொள்ள வைக்கிறது ஜோதிடம்.

Sunday, May 22, 2016

Kalakasthi Temple


Saturday, May 21, 2016

Temple 24 - 21 அடி உயரத்தில்... விஸ்வரூப ஆஞ்சநேயர்!

சோக வனத்தில், அனுமனின் பராக்கிரமத்தை சீதை வினவ, அவளுக்காகத் தன் திருமேனியை விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்த்து, விஸ்வரூபம் (பேருருவம்) காட்டி நின்றான் ராமபக்தனான ஸ்ரீஅனுமன். அப்படி வானுயர்ந்து நின்ற திருக்கோலத்திலேயே, ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயராகக் கோயில்கொண்டிருக்கிறார் அனுமன், வேகுப்பட்டி கிராமத்தில். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து பாலக்குறிச்சி செல்லும் வழியில், கொப்பனாம்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது வேகுப்பட்டி.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, விஸ்வரூப அனுமன் விக்கிரகத்தின் பணிகள் நடந்தன. கடந்த 18.4.14 அன்று, ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலய மகாகும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள், திருக்கோவிலுர்
ஜீயர் சுவாமிகள், பரனூர் ஸ்ரீகிருஷ்ணப்ரேமி சுவாமிகள், விஜயவாடா பூஜ்யஸ்ரீ மாதா சிவசைதன்யா, ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஆகியோருடன் ரங்கராஜ பட்டர் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில், கும்பாபிஷேகத்துக்கு முன்னதாகவே வந்து ஸ்வாமி தரிசனம் செய்து விட்டுச் சென்றார் தமிழக கவர்னர் ரோசய்யா.
சுமார் 21 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீஅனுமன். இவர், தமிழகத்தின் மூன்றாவது பிரமாண்ட அனுமன் என்கின்றனர். விசாலமான இடத்தில், அழகே உருவெனக் கொண்டு திகழ்கிறது கோயில். அதற்கான மொத்தச் செலவையும் வேகுப்பட்டி ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி அறக்கட்டளை சார்பாக சா.அண.முத்துபழனியப்பன் ஏற்றுக் கொண்டுள்ளார். குன்றக்குடி, பிள்ளையார்பட்டி செல்லும்போது, அப்படியே வேகுப்பட்டி ஸ்ரீஅனுமனையும் கண்ணாரத் தரிசித்து வாருங்கள்!    

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளில் ஒன்றில்- பிறந்த வேளை (லக்னம்), அதில் தென்படும் நட்சத்திரபாதம் (சந்திரன்) இருக்கும் வேளையில், புதனின் த்ரிம்சாம்சகத்தில் தோன்றியவள் குணக்குன்றாக இருப்பாள் என்கிறது ஜோதிடம் (பௌதே குணாட்யா).
ஒரு பொருள் தோன்றும்போதே, அதனுடன் இணைந்திருக்கும் சிறப்பம்சத்துக்கு 'குணம்’ என்று பொருள். கரும்பில் இனிப்பும், பாகற்காயில் கசப்பும், எலுமிச்சம்பழத்தில் புளிப்பும் தோன்றும்போதே இணைந்தவை. தோன்றியபிறகு வெளியுலக தாக்கத்தால் இணைந்தவை அல்ல. ஆக, புதன் த்ரிம்சாம்சகத்தில் பிறக்கும்தறுவாயில், அந்த பெண்ணானவள் குணங்களுடன் இணைந்திருப்பாள் என்கிறது ஜோதிடம். பிறக்கும்போது இணைந்த இயல்பு மாறுதலுக்கு உட்படாது (ஸ்வபாவோ துரதிக்ரம:).
அவரவரது இயல்பு அவரவரின் தரத்தை நிர்ணயிக்கிறது என்பது நியதி. குருவின் மனைவியோடு சந்திரனின் இணைப்பு புதனை உருவாக்கியது. புதனின் தகப்பன் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. புதன், குருவின் புதல்வனா அல்லது சந்திரனின் புதல்வனா என்று கேள்வி விரிவடைந்தது. அந்தரங்கமான விஷயத்தை எவராலும் கணிக்க இயலவில்லை. இப்படியான விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன், சந்திரன் புதனிடமே கேள்வி கேட்டு பதிலளிக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தினான். 'சந்திரனின் புதல்வன் நான்’ என்று புதனிடமிருந்து பதில் வந்தது. சந்திரன், புதனை முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டினான். ''உண்மையை உணர்ந்தவன் நீ என்பதால், உனக்கு புதன் என்ற பெயர் பொருந்தும்'' என்றான் சந்திரன்.  'புத அவகமனே’ என்ற தாதுவில் இருந்து, 'அறிவாளி’ என்ற கருத்தில் 'புதன்’ என்ற காரணப் பெயர் அமைந்திருக்கிறது (அவகமனம் = அறிவை எட்டியவன்).
குருவின் அம்சமும் (சிந்திக்கவேண்டிய தகவலும்), சந்திரனின் அம்சமும் (சிந்திக்கும் திறனும்) இணைந்து உருப்பெற்றவன் 'புதன்’ என்ற விளக்கமும் உண்டு. அலசி ஆராயும் திறன் மட்டுமல்ல, நல்லதை ஏற்கவும் கெட்டதை துறக்கவும் துணிந்த விவேகமும் (பகுத்தறிவும்) புதனில் இணைந்திருக்கும். 'புத்தி’ என்றால் ஆராய்ந்து முடிவெடுக்கும் கருவி. அது புதனிடமிருந்து வலுப்பெற வேண்டும் என்கிறது ஜோதிடம்.
மனம், புத்தி, சித்தம் அகங்காரம் - என்ற நான்கு பகுதிகள் இணைந்தது 'அந்த: கரணம்’ என்று ஆன்மிகவாதிகளும் உடற்கூறு ஆய்வாளர்களும் விளக்குவர். ஆக, மனம் (சந்திரன்) புத்தியோடு (புதன்) என்றும் இணைந்திருப்பதால், புதனை சந்திரனின் புதல்வனாகச் சுட்டிக்காட்டியது ஜோதிடம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மனம் தரும் தகவலை ஆராய்வது புத்தி என்பதால், புதனின் நெருக்கம் மனத்தோடு (சந்திரனோடு) இருப்பது இயற்கை. பாமரர்கள் தெரிந்துகொள்ளும் பொருட்டு (சந்திரன் - குரு - புதன்) கதை வடிவில் அவர்களது தொடர்பை உறுதிப்படுத்தியது ஜோதிடம்!
'உனக்குப் புத்தியில்லையா?’ என்ற கேள்விக்கு 'ஆராயும் திறன் இல்லையா?’ என்று பொருள். அதை துளிர்க்க வைப்பவன் புதன். உள்ளிருக்கும் மனம் (சந்திரன்), புலன்களின் வாயிலாக வெளியுலகத்தில் வந்து, அங்கு தென்படும் பொருள்களை அறிந்து, அதை தன்னோடு இணைந்த புத்தியிடம் (புதன்) ஆராயக் கட்டளையிடும். அதன் தீர்வில் தனது விருப்பத்தை மனமானது செயல்படுத்த விழையும் என்பது நடைமுறை. ஆகையால், மனத்தின் அந்தரங்க உதவியாளனாக புதனைச் சித்திரிக்கிறது ஜோதிடம்.
புத்தி செயல்பட ஆன்மாவின் இணைப்பு தேவை. ஆராயும் தகவலைப் பெற மனத்தின் இணைப்பும் வேண்டும். ஆன்மா- சூரியன்; மனம்- சந்திரன் இருவரின் இணைப்பில் செயல்படும் அத்தனை கிரகங்களும், மற்றவற்றைவிட புதனின் நெருக்கத்தை உணர்த்தும் வகையில், ராசிச் சக்கரத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் அடுத்த அடுத்த வீட்டில் புதன் தென்படுவான்.
சூரியனோடு இணைந்த புதனை 'நிபுண யோகம்’ என்று சுட்டிக்காட்டும் ஜோதிடம். நிபுணன்- நைபுண்யம் என்றால், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப முடிவெடுத்து வெற்றி காணும் திறன் இருப்பதைச் சுட்டிக்காட்டும். ஆசாபாசங்களை உதிர்க்கும் மற்ற கிரகங்களின் தொடர்பற்ற நிலையில், தெளிந்த சிந்தனையைப் பெற்றுத் தருபவன் புதன் என்று பொருள். புதன் சுப கிரகங்களோடு (தட்பக் கிரகங்கள்) சேர்ந்தால், நல்ல சிந்தனையை உருவாக்க ஊக்கமளிப்பான். அசுப கிரகங்களோடு (வெப்பக் கிரகம்) இணைந்தால், கோணலான சிந்தனை அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்திருக்கிறானோ, அதன் இயல்பை ஏற்று சிந்தனையை மாற்றிக்கொள்வான் என்கிறது ஜோதிடம்.
எந்த ஒரு விஷயத்திலும் சிந்தனை சாதகமாகவும் பாதக மாகவும் தென்படும். 'கடவுள் இல்லை’ என்ற தீர்வைக் கேட்ட வுடன், மனமானது 'கடவுள் உண்டு’ என்ற சிந்தனையைத் திருப்பிவிட்டு ஆராய முற்படும். இருப்பதையே 'இல்லை’ என்று சொல்ல முடியும். இல்லாததை இல்லை என்று சொல்வது, அறியாமையின் அடையாளம்.
'இருக்கிறார் அவர்’ என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, 'இல்லை’ என்கிற வாதத்தை ஆராய்வோம் என்று புத்தியில் தோன்றிவிடும். நேரடியான சிந்தனை எழும்போது, எதிரிடையான சிந்தனை மனத்தின் அடித்தளத்தில் தோன்றிவிடும்.
இருவரது இணைப்பில் நன்மை யும் தீமையும் இடம் மாறுவது உண்டு. துஷ்டனோடு இணைந்த நல்லவன் துஷ்டனாக மாறுவது உண்டு (ஸம்ஸர்கஜாதோ ஷகுணாபவந்தி). வெப்பக் கிரகத்தோடு இணையும் புதன் (தட்பக் கிரகம்), அதன் ஆக்கிரமிப்பில் தனது சொந்த இயல்பை வெளிப்படுத்த இயலாமல் தவிக்கிறான். இதையே, புதன் எவருடன் இணைகிறானோ அந்த இணையின் - கிரகத்தின் இயல்பைப் பெற்று, தனது இயல்பை பின் தள்ளிவிடுகிறான் என்று ஜோதிடம் விளக்குகிறது.
குளிகனோடு இணைந்த புதன் புத்தியின் ஆராயும் திறனை அறவே அகற்றிவிடுவான் என்று சொல்லும். அவனுக்கு ஆராயும் திறன் இருக்கும். ஆனால், அதை செயல்படாமல் தடுக்கும் இயல்பு குளிகனிடம் இருந்து பெற்றது. இன்று பரவலாகத் தென்படும் மனோவியாதி (டிப்ரஷன்) தோன்றுவதற்கு, இவ்விருவரது சேர்க்கையே காரணம் என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. பலம் பெற்ற புதன் அறிவாளி ஆக்குவான்; பலம் குன்றிய புதன் அறிவிலியாக்குவான்.
கிரகங்களின் குணத்தை வைத்து அதை சுட்டிக்காட்டும் வேதம். கிரகத்தின் வடிவம் ஒரு பொருட்டல்ல; அதன் குணம்தான் அதன் அடையாளம் என்கிறது வேதம். 'புதனை வழிபட வேண்டும் எனில், அதன் குணத்தைச் சுட்டிக்காட்டும் தேவதையை வழிபடு’ என்று சொல்லும்.
கிரகம் என்பது ஜடம். அது எதையும் அளிக்காது; அதன் தேவதையை (அதன் குணத்தைச் சுட்டிக்காட்டும் பகுதி) வணங்கினால் தீமை அகலும் என்று சொல்லும் (உத்புத்யஸ்வாக்னே...). 'புதனில் வெப்பமும் தட்பமும் விகிதாசாரப் படி கலந்திருக்கும்’ என்பதை... அதிதேவதை - ப்ரத்யதி தேவதை என்ற முறையில், விஷ்ணுவையும் நாராயணனையும் விளக்கிக் குறிப்பிடும். வேள்வி, பயிரினங்களின் செழிப்பு ஆகியவை நிறைவு பெற வெப்பம் வேண்டும். அந்த வெப்பம் புதனில் இருக்கும்.
அதன் அதிதேவதை விஷ்ணு. அவர் நீரில் படுத்திருப்பவர். நாராயணன் என்ற சொல்லுக்கு, நீரில் இருந்து தோன்றியவன் என்று பொருள். இப்படி நீர் தன்மை அதிகமாகவும், வெப்பம் அளவுடணும் இணைந்த கிரகமாக வேதம் விளக்கும். கட்டுக்கடங்கிய வெப்பத்தோடு இணைந்த தட்பமானது, தடங்கலின்றி சிந்தனை வளத்தைப் பெருக்கிவிடும். அந்தப் பெருமையை புதன் பெற்றிருக்கிறான் என்கிறது வேதம்.
இப்படியான வேத விளக்கங்களை ஒதுக்கிவிட்டு, காழ்ப்பு உணர்ச்சியில் மாறுபட்ட விளக்கங்களை சொல்வளத்தால் மெருகூட்டி, பாமரர்களை வழிதவறச் செய்யும் செயல்பாடு ஜோதிடர்களிடம் இருக்கக்கூடாது.
'குருவின் மனைவிக்கும் சந்திரனுக்கும் தவறான முறையில் பிறந்தவன் புதன்’ என்ற கதையை வைத்து, மனிதர்களாகிய நம்மைப் போன்று அவர்களையும் தரம் தாழ்த்தி, உறவுமுறையை வைத்து பலன் சொல்லும் இயல்பு, நம்மில் இருக்கக் கூடாது. 'அசுர குரு சுக்கிரன்; தேவகுரு வியாழன். அசுரனும் தேவனும் பகைவர்கள். ஆகையால் சுக்கிரனும் குருவும் (வியாழனும்) பகைவர்கள்’ என்று இல்லாத பகையை இருப்பதாகச் சித்திரித்து, நமது அசட்டுத்தனமான நடைமுறைகளை கிரகங்களிலும் சுமத்தி, அதன் அடிப்படையில் பலன் சொல்லும் அவலம் ஜோதிடர்களிடம் தென்படக்கூடாது. வெப்ப- தட்பம், அதன் சேர்க்கையின் விகிதாசாரம், அதனால் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாற்றங்கள் உடலையும் உள்ளத்தையும் பாதிக்கும் நடைமுறை கள்... இவை குறித்த ஆராய்ச்சியில், நாம் சந்திக்கும் இன்ப-துன்பங்களை வரையறுக்கும் பணியில் ஜோதிடத்தின் பெருமையை உணரவேண்டும்.
ஜோதிடமானது இயற்கை சாஸ்திரம். அதற்கு ஆதாரம்- ஐம்பெரும் பூங்களில் ஒன்றான ஆகாயம், அதில் சுழலும் கிரகங்கள், அதில் மிளிரும் நட்சத்திரங்கள். அவற்றின் தாக்கம் அத்தனை ஜீவராசிகளிலும் பிரதிபலிக்கும். ஆகாயம் தொடாத எந்த ஜீவராசியும் வாழ இயலாது. ஆறறிவு பெற்றவனிடம் தாக்கம் அறியப்படுவதால், அவனுக்கு மட்டும்தான் அது வரப்ரசாதம். தாக்கத்தில் விளையும் தீமைகளை அகற்றி நன்மைகளை ஏற்க, அதன் துணை நிச்சயமாக வேண்டும்.
காலத்தின் தாக்கம் வலுவானது. காலம்தான் ஜோதிடம். விண்வெளியில் தென்படும் காலத்தின் தாக்கத்தில் பல உயிரினங்கள் அல்லல் படுவதை நாளேடுகளில் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீர், நிலம், நெருப்பு, காற்று போன்றவற்றின் தவறான போக்கில் நிகழும் விளைவுகளை, ஆகாய பூதத்தில் அடங்கியிருக்கும் கிரகங்களும் நட்சத்திரங்களும் முன்னரே அறிவுறுத்தி எச்சரிக்கை செய்வதை, 'உத்பாதம்’ என்கிற வரிசையில் வராஹமிஹிரரின் 'பிருஹத் ஸம்ஹிதை’ சுட்டிக்காட்டுவதை அறிந்து செயல்பட வேண்டும், ஆறாவது அறிவை எட்டியவர்கள். அப்போதுதான் ஆறாவது அறிவு பயனுள்ளதாகும்.
அன்றாட அலுவலுக்கு மட்டுமே பயன்படும் என்று அதை சிறு சிந்தனை வட்டத்தில் ஒதுக்கக்கூடாது. ஒட்டுமொத்த உலகையும் 'உத்பாத’த்திலிருந்து காப்பாற்ற ஜோதிடம் ஒத்துழைக்கிறது.
சிந்தனை வளம் பெற்றவன் மனிதன். சிந்தனை வளம் அளிப்ப வன் புதன். அவன் தரத்தை அறிந்து, அவனால் ஏற்படும் குணங்களை வரையறுக்கும் ஜோதிடம், அவனது (புதன்) த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள் நல்ல குணங்களோடு மிளிர்வாள் என்கிற தகவலை அளித்தது. இரண்டு ராசிகளிலும் புதன் பரவியிருப்பான். ஒற்றைப்படை ராசியில்  18-க்கு மேல் 7 பாகைகளும்; இரட்டைப்படை ராசியில் 5-க்கு மேல் 7 பாகைகளுமாக புதன் இருப்பான். 3-வது த்ரேக்காணமும் முதல் த்ரேக்காணமும் முறையே இணைந்திருக்கும். முதல் த்ரேக்காணத்தில் ஐந்துக்கு உடையவனும், இரண்டாவதுக்கு ஒன்பதுக்கு உடையவனும் இணைந்திருப்பார்கள். மிதுனத்துக்கு சனியும், கன்னிக்கு புதனும் இருப்பர். இரு ஹோரை களிலும் சூரியனும் சந்திரனும் இணைந்திருப்பார்கள்.
தற்போது ராசியில் புதன், இரட்டைப்படை ராசியில் முதல் த்ரேக்காணத்தில் புதன், ஹோரைகளில் சந்திரன் - இப்படி வெப்பத்தின் குறைவும் தட்பத்தின் நிறைவும் இருக்கும் வேளையில் பிறந்தவள், எல்லா குணங்களையும் பெற்றவளாக விளக்குகிறது ஜோதிடம் (பௌமே குணாட்யா).
தட்பம் மிகுதியான வெப்ப மானது குணங்கள் குடியிருக்கும் தகுதியை அளித்துவிடுகிறது. அதிக தட்பமும் அதிக வெப்பமும் சிந்தனையை முடக்கிவிடும். வெப்பம் அளவோடும் தட்பம் ஓங்கியும் இருக்கும்போது சிந்தனை ஓட்டம் நேர்வழியில் தடையின்றி நிகழும். குணங்கள் பெருகி வளம் பெற இந்த சூழல் ஒத்துழைக்கும். ஆக, புதன் த்ரிம்சாம்சகம் பலம் பெற்றுத் தன்னோடு இணைந்த வெப்பத்தை பின்னுக்குத் தள்ளி, நல்ல குணங்களை மலரச் செய்யும் சூழலை அடைந்த வேளையில், அவள் பிறக்கும்போது அத்தனை குணங்களும் அவளில் தென்படும் எனும் விளக்கம் பொருத்தமானது.
புதனுக்கு 'சௌம்யன்’ என்ற பெயர் உண்டு. மென்மையானவன் என்று பொருள். அந்த மென்மையைச் சந்திரனிடமிருந்து பெற்ற தால், சந்திரனின் புதல்வன் - 'சௌம்யன்’ என்ற பெயர் வந்தது. குணசாலிகளிடம் மென்மையான அணுகுமுறை தென்படும். மென்மையை தட்பம் சுட்டிக்காட்டும். அளவான தட்பம் மென்மையை ஏற்படுத்தும். பயிர்கள் விளையும் பூமியில் வெப்பம் இருந்தாலும், தட்பத்தின் தாக்கத்தால் வெப்பம் மறைந்து மென்மையான பயிர்கள் வளர்ந்தோங்கி வளம்பெறுகிறது. வளர்ச்சிக்கு தட்பம் தேவை. மாறுதலுக்கு வெப்பம் தேவை.  தட்ப ஆதிக்கத்தில், வெப்பம் அதற்கு எதிரிடை ஆகாமல் ஒத்துழைத்து, நல்ல குணங்கள் வளர ஊக்கம் அளிக்கிறது.
இவ்வண்ணம் ஆராய்ச்சியில் இறங்காமல், பலன் சொல்வதில் நடுக்கம் ஏற்பட்டு, கடவுளையும், ஆன்மிகத்தையும், மகான்களின் கணிப்புகளையும் துணைக்குச் சேர்த்துக்கொண்டு செயல்படும் நிலை ஜோதிடர்களுக்கு வரக்கூடாது. கடவுள் தத்துவம், ஆன்மிகச் சிந்தனை, மகான்களின் அருள்வாக்கு ஆகியவை ஜோதிடத்தின் பலன் சொல்லும் பகுதிக்குத் தொடர்பற்றவை. தன்னிறைவு பெற்ற ஜோதிடத்துக்கு- பலன் சொல்லும் பகுதிக்கு மற்ற சாஸ்திரங்களின் ஒத்துழைப்பு தேவைப்படாது. ஆன்ம ஞானம், மோட்சம் போன்ற  குறிக்கோளுக்குப் பயன்படும் சாஸ்திரங்கள் வேறு. இரண்டும் மாறுபட்ட வழிகளுடன்கூடிய குறிக்கோளைக் கொண்டவை.
ஜோதிடம் என்பது துணை சாஸ்திரம் அல்ல. இதுவும் தனி சாஸ்திரம். பாமரர்களும் ஏற்கும் வகையில் ஜோதிடத்தில் மற்ற சாஸ்திரங்களையும் இணைக்கும் செயல் தேவையற்றது. பஞ்ச பூதங்களின் அடித்தளத்தில் அமைந்த இந்த சாஸ்திரம் எல்லோருக்கும் ஒருங்கே தேவைப்படுவதாகும்.

Friday, May 20, 2016

தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ''மணல் ரகசியம்'':

தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும்
''மணல் ரகசியம்'': வல்லுநர்கள் புதிய தகவல்....
உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் 'முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது!' என்கின்றன ஆய்வுகள்.
2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது.
மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான 'பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்', ‘தி இந்து’விடம் கூறியதாவது.....
''பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்!
அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி, அதில் பரு மணலை நிறைத்து.... அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்!
கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது.
பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.
தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன்.
அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர்.
இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில் நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது! தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்!
இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன.
2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை.
அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத்துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது!
இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் 'குறுமணல்'.
ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய 'பருமணல்'. இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.'' இவ்வாறு கூறினார்.
ஒடிசா மாநிலத்தில் வரலாற்றுக் கோட்டைகளை ஆய்வு செய்தவரான 'ஒரிசா பாலு' கூறும்போது....,
''நம் மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை கட்டியது காட்சிக்காகவும் பக்திக்காகவும் மட்டும் அல்ல. அன்னியர்களால் நமது வரலாறு அழியாமல் இருக்கவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தான் பிரமாண்டமான கோயில்களைக் கட்டியுள்ளனர்.
அப்படி பிரமாண்டமாக அமைத்தால்தான் அதன் அடியில் பெரும் நிலவறைகள் வடிவமைத்து பொருட்களைப் பாதுகாக்க முடியும்.
எனவே, பெரிய கோயிலின் அடியில் நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவை வென்ற தமிழனின் மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக் கட்டுமானக் கலையின் வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
கோயிலில் அகழ்வாராய்ச்சி நடத்தித்தான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார் மற்றும் Ground penetrating radar தொழில்நுட்பம்மூலம் பூமிக்குள் ஊடுருவி படங்களை எடுத்து ஆய்வு செய்யலாம்” என்றார்