Saturday, May 13, 2017

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்!

நட்சத்திர தேவதை: அஷ்ட வசுக்கள்.
வடிவம்: மத்தள வடிவமுடைய 4 நட்சத்திரங்களின் தொகுப்பு.
எழுத்துகள்: க, கி, கு, கூ.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:
செவ்வாயின் மூன்றாவது நட்சத்திரம் அவிட்டம். அஷ்ட வசுக்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். ஆகவே இது தேவ நட்சத்திரம் என்கிறது ஒரு நூல். நட்சத்திர மாலை, இந்த நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள், நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துப் பேசுவார்கள், தாய், தந்தையைத் தனித்து விடாமல் அவர்களுடைய ஆயுட்காலம் வரை பேணிக் காப்பவர்; பொன், வெள்ளி ஆபரணங்களை அணிபவர்; பூமி அதிரும்படி நடக்காமல் மென்மையாக நடப்பவர்; கலைகள் பல கற்றுத் தேர்ந்தவர்; வேந்தர்களால் விரும்பப்படுபவர் என்று கூறுகிறது.
ஜாதக அலங்காரம், இவர்களை ஒழுக்கமுள்ளவர்; தொழில் செய்பவர்; வாதிடுபவர்; அஞ்சாமல் எதிரிகளை எதிர்கொள்பவர்: விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ளாதவர்; அழகு, அறிவு, அடக்கம் உடையவர்; அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதவர்; பெற்றோரால் விரும்பப்படுபவர்.
பிருகத் ஜாதகம், சங்கீதத்தை விரும்புபவர்;  பராக்கிரமம் வாய்ந்தவர் என்று கூறுகிறது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்டமே சிதறினாலும் அஞ்சா நெஞ்சர்கள். அடுத்தவர் தயவில் வாழமாட்டார்கள். கால் வயிறு கஞ்சி குடித்தாலும், கௌரவமாக இருக்க நினைப்பார்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும். இவர்கள் சார்ந்திருக்கும் இனம், மொழி, நாட்டுக்காக உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்க மாட்டார்கள்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை மதிப்பார்கள். சுயநலமில்லாத அரசியல் தலைவர்களையும் ஆதரிப்பார்கள். 'மதியாதார் தலைவாசல் மிதியாதவர்கள் இவர்கள். நல்லவர்களுக்கு நல்லவராகவும் வல்லவர்களுக்கு வல்லவராகவும் விளங்குவார்கள் என்று சந்திர காவியம் என்னும் நூல் கூறுகிறது.
வீண் சண்டைக்குப் போகமாட்டார்கள். ஆனால், வந்த சண்டையை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள். அனாவசியமாக அடுத்தவர்களுக்கு செலவு வைக்க மாட்டார்கள்.வாழ்க்கைப் போராட்டங்களைக் கடந்து வெற்றி காண்பார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை,  ஒருவர் எதிரியாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் ஒருவர் துரோகியாக இருக்கக்கூடாது. துரோகியை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எந்த வழக்கையும் வாதாடி வெற்றி காண்பார்கள் என்று 'துய்ய கேரளம்' என்ற நூல் கூறுகிறது.
இவர்களில் பலர் நாட்டைக் காக்கும் ராணுவத்தில் பெரிய பதவி வகிப்பார்கள்; காவல் துறையிலும் சமூகத்தைக் காக்கும் இயக்கங்களிலும் சேர்ந்து பணியாற்றுவார்கள். இவர்கள் தான் பட்டினி கிடந்தாலும், வந்தவருக்கு வயிறார உணவளிப்பார்கள். விருந்தோம்பலில் தலைசிறந்தவர்கள்.

மனைவி, பிள்ளை, பெற்றோர், சகோதரர் என்று கூட்டாக வாழ ஆசைப்படுவார்கள். குற்றம் சொல்பவர்களை நெற்றிக் கண்ணால் சுட்டெரிக்கும் கோபக்காரர்கள். அதேநேரம், ‘கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும்’ என்பதைப்போல, ஒருவர்மீது கோபமிருந்தாலும், அவருக்கு வேண்டிய உதவிகளைத் தக்கநேரத்தில் செய்துகொடுக்கும் நல்லவர். கடின உழைப்பால் முன்னேற விரும்புவார்கள். முத்து, பவளம் போன்ற ரத்தினங்களை விரும்பி அணிவார்கள்.
உற்றார், உறவினர்களைவிட  நண்பர்கள், அன்னியர்கள் மீது அதிகப் பாசமுடையவராகவும் மத நம்பிக்கை உடையவராகவும் இருப்பார்கள். சமூக சீர்திருத்தவாதியாகவும் மூடநம்பிக்கையை வேரறுப்பவராகவும் இருப்பார்கள். நடைமுறைக்கு ஏற்றதை மட்டுமே பின்பற்றுவார்கள்.  கண்டிப்புடனும் கறாராகவும் இருப்பார்கள். விளையாட்டில் அதிக நாட்டம் கொண்டவர்கள். மாவட்ட, மாநில அளவில் விளையாடி வெற்றி பெறுவார்கள். பகட்டான வாழ்க்கையும் பஞ்சு மெத்தை உறக்கமும் இவர்களுக்குப் பிடிக்காது

அனுபவ அறிவால் பெற்றதை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களை வழிநடத்திச் செல்வதில் வல்லவர். 13 வயது முதல் 22 வயது வரை போராட்ட விளிம்புக்கே போவார்கள். உங்களில் சிலர், கல்வியை முழுமையாகத் தொடர முடியாமல் போகும். ஆனால், ‘அவிட்ட நட்சத்திரம் தவிட்டுப் பானையில் தங்கம் எடுப்பார்கள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, 24-வது வயது முதல் எல்லா வளங்களையும் பெறுவார்கள்.
யாரையும் சார்ந்திருக்க இவர்களுக்குப் பிடிக்காது. 37-வது வயதிலிருந்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். இளம் வயதைக் காட்டிலும் மத்திய வயதிலிருந்து நிம்மதியும் கவலையற்ற வாழ்க்கையும் அமையும். அடிமைத்தனம், மூடத்தனம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு வெற்றி வாகை சூடுவார்கள்.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:
அவிட்டம் நட்சத்திர முதல் பாத பரிகாரம்:
திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் வழித்தடத்தில் இருக்கும் தகட்டூரில் மூலவராக வீற்றிருக்கும் ஸ்ரீபைரவரை வணங்குதல் நலம்.
அவிட்டம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
சிக்கல் என்ற ஊருக்கு அருகிலுள்ள ஆவராணியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்தல் நலம்.

அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
திருவலஞ்சுழியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுவேத விநாயகரையும் ஸ்ரீ அஷ்டபுஜ காளியையும் வணங்குதல் நலம்.
அவிட்டம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
மாயவரம் - கும்பகோணம் மார்க்கத்திலுள்ள க்ஷேத்ரபாலபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பைரவரை தரிசித்தல் நலம்

No comments:

Post a Comment