Saturday, September 30, 2017

பாபாவின் உத்தரவே தாரகமந்திரம்!

 ஷீரடிக்கு யார் வர வேண்டும் என்றாலும், இல்லை யார் ஷீரடியிலிருந்து கிளம்ப வேண்டும் என்றாலும் சரி பாபாவின் அனுமதி இருந்தாலே அது நிகழும். அவ்வாறு இமாம்பாய் என்ற ஒரு பாபாவின் அடியவர், தன் ஊருக்குக் கிளம்புவதற்கு ஆயத்தமாகி பாபாவிடம் விடை பெறச் சென்றார். ஆனால், பாபா அவரை அப்போது ஊருக்குப் போக வேண்டாம் என்றும், நிலைமை சரியில்லை என்றும் கூறினார். இமாம்பாய் தன் வீட்டிற்கு போகும் அவசரத்திலும் ஆர்வத்திலும் பாபாவின் வார்த்தையை மீறிப் புறப்பட்டார். மேலும் அவர் கால்நடையாக செல்லலாம் என்றும் தீர்மானித்தார்.
ஷீரடியில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவு வரை எந்தவோர் இடைஞ்சலுமின்றி அவர் கடந்தார். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அவர் சுராலா என்ற நதிக்கரையில் நடந்து சென்றார். அப்போது வானிலை மோசமாக இருந்தபடியால் அங்கிருந்த ஓர் அதிகாரி அவரை மேலும் பயணத்தைத் தொடர வேண்டாம் என்று எச்சரித்தார். இன்னும் நான்கு மைல் மட்டுமே எஞ்சியிருப்பதால், அவர்தான் செல்வதாகக் கூறிச் சென்றார். அவர் மூன்று மைல் தொலைவு சென்றதும், பலத்த காற்று வீசத் தொடங்கியது. இடியுடன் பெரும்மழை பெய்தது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கலக்கமுற்ற இமாம்பாய் சாயிநாதரை அழைத்தார். அப்போது வானில் ஒரு மின்னல் கீற்று வந்தது. அந்த ஒளியில் சாயிநாதரை தரிசித்தவர், சாயியைப் பணிந்து வணங்கியபடிஅந்த நதியைக் கடந்து சென்றார். அவர் நதியைக் கடக்கும் வரையில் தண்ணீர் அவரின் முழங்கால் அளவே இருந்தது. மறு கரைக்குச் சென்றதும் அவர் திரும்பி ஆற்றினை நோக்கும்போது அதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் கண்டார். பாபாவின் அருளால்தான்  தன்னால் ஆற்றினைக்  கடக்க முடிந்தது என்பதை அறிந்து அங்கேயே பாபாவுக்கு மனதார நன்றி கூறினார்.

சாயிநாதர் அன்னைக்கு நிகரானவர் ஆவார். ஒரு தாய் எவ்வாறு தன் குழந்தைக்கு ஆபத்து என்று தெரிந்த கணத்தில் ஒடிச்சென்று காக்கின்றாளோ, அவ்வாறே சாய்நாதர் தன் பக்தர்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் ஓடிச்சென்று அவர்களைக்  காப்பார்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஷீரடி சாய்பாபா!

லியுகத்தின் கண்கண்ட தெய்வமாக எங்கெங்கும் வியாபித்திருந்து, அருள்மழை பொழிந்து வருகின்றார். அவர் எங்கு எப்போது பிறந்தார் என்பது யாருக்குமே தெரியாது. அவருடைய தோற்றம்தான் புதிராக இருந்தது என்றால், அவருடைய மொழிகளும், நடவடிக்கைகளும்கூட பல நேரங்களில் புதிராகவே இருந்திருப்பதை அவருடைய சத்சரிதத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அவர்தாம் மகாசமாதி அடையப்போகும் நாளைகூட இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே 1916-ம் ஆண்டு மற்றவர்களுக்கு உணர்த்தவே செய்தார். ஆனால், மற்றவர்கள் அதை உணரவில்லை. 1918-ம் ஆண்டு இதே விஜயதசமி நாளில்தான் சாய்பாபா மகா சமாதி அடைந்தார். அவர் மகா சமாதி அடைந்த 100-வது ஆண்டு இன்று விஜயதசமியன்று தொடங்குகிறது.

தம்முடைய மகா சமாதிக்குப் பிறகும், தாம் அளவற்ற ஆற்றலுடன் தம் பக்தர்களுக்கு அருள்புரிவேன் என்று தாம் கொடுத்த உறுதிமொழியின்படி இன்றும் தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். அவர் தம்முடைய ஜீவித காலத்தில் நடத்திய சில அருளாடல்களை இங்கே பார்ப்போம்.
தண்ணீரில் விளக்கேற்றிய தயாபரன்!
ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் மசூதியில் தீபம் ஏற்றுவது பாபாவின் வழக்கம். அதற்காக தினமும் கடைத்தெருவிற்குச்  சென்று வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கி தீபம் ஏற்றுவார். சிலநாள்கள் இப்படியே சென்றன. ஒருநாள் கடைக்காரர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவு செய்தனர். அதன்படி இனி யாரும் பாபாவுக்கு எண்ணெய் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்தனர். பாபாவுக்குக் கொடுக்கும் எண்ணெய்க்குக் காசு வராது என்பதால்தான் அந்த முடிவுக்கு வந்தனர்.
இதை அறிந்த மகான் அவர்களுக்கு ஞானம் வழங்க விரும்பினார். எனவே, அவர் அந்த எண்ணெய் வியாபாரிகளிடம் சென்று எண்ணெய் கேட்டார். ஆனால், அவர்கள் யாரும் எண்ணெய் தர முன்வரவில்லை.
அனைத்தும் அறிந்த சாயிநாதர் எதுவும் பேசாமல் தன் மசூதிக்குச் சென்றார். அவர் என்ன செய்கிறார் என்பதைக் காண எண்ணெய் வியாபாரிகள் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். பாபா எண்ணெய் டப்பாவை கையில் எடுத்து, அதில் சிறிது நீர் ஊற்றினார். அதைத் தன் வாயில் ஊற்றி பின்னர் அந்த நீரை மறுபடியும் எண்ணெய் டப்பாவில் நிரப்பி, அதைத் தீபங்களில் ஊற்றினார். அவரைச் சாதாரண மானிடர் என்று அதுவரை எண்ணியிருந்த வியாபாரிகள் அதிசயிக்கும் வகையில் தீபங்கள் எரியத் தொடங்கின.
இதைக் கண்ட வியாபாரிகள் அவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். இவ்வாறு பாபா அவருக்கு ஞானம் வழங்கி ஆசி கூறினார். மேலும் என்றும், எவரிடத்தும் பொய் கூறக் கூடாது என்றும், எப்போதும் பொருளாசை இருக்கக் கூடாது என்றும்கூறினார்.

மன அமைதி அருளும் மகான்!
ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் என்பதை பின்வரும் கதை நமக்கு உணர்த்துகிறது.
வாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த காகாஜி வைத்தியர் என்பவர் சப்தசிருங்கி தேவியின் ஆலயத்தில் பூசாரியாக இருந்தார். அவர் தினமும் தேவிக்கு பூஜை செய்து வந்த போதிலும் அவரது மனமானது வேதனைகளால் நிறைந்து அமைதியிழந்து இருந்தது. மனஅமைதி பெற விரும்பிய அவர், தான் தினமும் வழிபடும் சப்தசிருங்கியிடம் வழி கேட்டார். அவர் மேல் இரக்கம் கொண்ட தேவி அவரை பாபாவைச் சென்று வணங்கும்படியும் அதனால் மனமானது அமைதியடையும் என்றும் கூறினாள்.
சாயிநாதரைப் பற்றி எதுவும் அறிந்திராத காகாஜி, பாபா என்று சப்தசிருங்கி தேவி குறிப்பிட்டது த்ரயம்பகேஷ்வரில் உள்ள ஈஸ்வரனையே ஆகும் என்று தன்னுள் எண்ணியவர், த்ரயம்பகேஷ்வர் சென்றார். அங்கு பத்து நாள்கள் தங்கி ஈஸ்வரரை வழிபட்ட பின்னும் அவர் மனமானது அமைதி பெறவில்லை. எனவே, மீண்டும் அவர் தன் கிராமத்திற்குத் திரும்பினார்.
மீண்டும் தேவியை வணங்கிய அவர் தன் மீது கருணை கொண்டு தனக்கு மன அமைதி கிட்ட வழி கூற வேண்டும் என்று வணங்கினார். அவர்மீது இரக்கம் கொண்ட தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றினாள். தான் பாபா என்று குறிப்பிட்டது ஷீரடி சமர்த்த சாயியையே என்றும்; வீணாக ஏன் த்ரயம்பகேஷ்வர் சென்றாய்? என்றும் வினவினாள். அவ்வாறு கூறிவிட்டு உடனே மறைந்துவிட்டாள். உறக்கத்திலிருந்து விழித்த காகாஜி தனக்கு ஷீரடியைப் பற்றி எதுவும் தெரியாததால், தான் எவ்வாறு ஷீரடியை அடைந்து பாபாவை தரிசிப்பது என்று எண்ணியிருந்தார்.
நாம் கடவுளைக் காண வேண்டும் என்று நினைத்தால் மட்டும் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைத்துவிடாது. கடவுளின் பூரண அனுக்கிரகம் நமக்கு இருந்தால் மட்டுமே அவரைக் காண இயலும். ஆனால், பாபாவின் விசயத்தில் அவரின் பக்தர்கள் அவரைக் காண எண்ணினாலே போதும் எப்படியேனும் அவர்களைத் தன்னிடம் கூட்டி வருவார்.
அவ்வாறே காகாஜிக்கும் நிகழ்ந்தது. ஷீரடியைச் சேர்ந்தவரும், சாயிபாபாவின் பெரும் அடியவருமான ஷாமா என்பவரின் சகோதரர் ஒருமுறை ஒரு ஜோதிடரைச் சந்தித்தார். அவரிடம் தன் குடும்பத்தில் பல சோதனைகள் ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் போக்க ஏதேனும் வழி கூறுமாறும் கேட்டார். அதற்கு அந்த ஜோதிடர், "உங்கள் தாயார், உங்கள் சகோதரர் ஷாமா சிறு பிள்ளையாக இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல்போன காரணத்தால் உங்கள் குலதெய்வமான சப்தசிருங்கியிடம், ஷாமாவின் உடல்நலம் சரியானால் குடும்பத்துடன் வந்து வழிபடுவதாகவும் கூறினார். அவர் அவ்வாறு வேண்டிய உடனே ஷாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் குலதெய்வத்திடம் வேண்டியதை மறந்துவிட்டார். ஆனால், ஷாமாவின் தாயாருக்கு இறக்கும் தருவாயில் தனது வேண்டுதல் நினைவுக்கு வந்தது. ஷாமாவிடம் குலதெய்வத்தைச் சென்று வணங்க வேண்டும் என்ற சத்தியத்தைப் பெற்ற பின்னரே ஷாமாவுடைய தாயாரின் உயிர் பிரிந்தது.

ஆனால், நாளடைவில் ஷாமா அந்த சத்தியத்தை மறந்தார். இதை நினைவுகூர்ந்த ஜோதிடர் அந்த சத்தியத்தை நிறைவேற்றினால் அவரின் குடும்பக் கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்று கூறினார். பாபாவின் ரூபத்திலேயே தனது குலதெய்வமான சப்தசிருங்கி தேவியை தரிசித்த ஷாமா நேராக பாபாவிடம் சென்றார்.
பாபாவை தன் குலதெய்வம் என்று எண்ணி வழிபடச் சென்ற அவரிடம், வாணி என்ற கிராமத்தில் இருக்கும் ஷாமாவின் குலதெய்வமாக விளங்கும் சப்தசிருங்கியை சென்று வழிபடுமாறு கூறினார். அதாவது அந்தச் செயலின் மூலம் பாபா தன் பக்தரான காகாஜியைத் தன்னிடம் அழைத்து வரவும் எண்ணினார்.
ஷாமா வாணி கிராமத்திற்கு வந்து தன் குலதெய்வமான சப்தசிருங்கியை வணங்கினார். அவர் ஷீரடியிலி ருந்து வந்திருக்கிறார் என்பதை அறிந்த காகாஜிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அவர் தனக்கு பாபாவை தரிசிக்க வேண்டும் என்றும், தன்னையும் அவருடன் அழைத்துச் செல்லுமாறும் கேட்டார். ஷாமாவும் அவரைத் தன்னுடன் ஷீரடிக்கு அழைத்துச் சென்றார்.
காகாஜி பாபாவை தரிசித்த அந்த கணமே அவரது மனமானது அமைதியைப் பெற்றது. ஆச்சர்யத்தின் உச்சமாக காகாஜி பாபாவிடம் தன்னுடைய பிரச்னைகள் பற்றி எதுவும் கூறவில்லை. அதேபோல் பாபாவும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவரைக் கண்ட  மாத்திரத்திலேயே அவரின் மனதில் இருந்த வேதனைகள் நீங்கி, அவரது மனமானது அமைதியடைந்தது.  

Friday, September 29, 2017

ஸ்ரீசாயி சரணம்! - சிலிர்க்க வைக்கும் அற்புதத் தொகுப்பு

து 1854-ம் ஆண்டு. மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தின் சிறிய கிராமமான ஷீர்டியில், வேப்பமரம் ஒன்றின் அடியில் கடினமானதொரு யோகாசனத்தில் அமர்ந்திருந்தான் இளைஞன் ஒருவன். பல நாள்கள் எவருடனும் பேசாமல் யோகநிலையில் இருந்த அந்த இளைஞனைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆவலும் துடிப்பும் அந்தக் கிராமத்தவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது.

இந்த நிலையில், ஒருநாள் அவ்வூரிலிருந்த கண்டோபா கோயில் பக்தர் ஒருவருக்கு இறையருள் வந்தது. அவர் மூலம் இறைவாக்காக வேப்பமரத்தின் அருகில் குறிப்பிட்டதோர் இடத்தில் இருந்த சுரங்க அறை கண்டுகொள்ளப்பட்டது; ‘அங்குதான் அந்த இளைஞன் 12 ஆண்டுகளாக பயிற்சி செய்தான்’ என்ற தகவலும் எடுத்துச் சொல்லப்பட்டது. அது தன் குருநாதர் சமாதியான இடம். புனிதமான அந்த இடத்தைப் பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று இளைஞன் கூற, அதை ஏற்றுக்கொண்டு கிராமத்து மக்களும் அந்த இடத்தை மனதார வணங்கினார்கள். அதன் பிறகு அங்கிருந்து அந்த இளைஞன் காணாமல் போனான்!
வருடங்கள் ஓடின. ஒளரங்காபாத் மாவட்டத்தின் தூப் நகரில் வசித்த சாந்த்பாடீல் என்ற அன்பர், தனது ஊரிலிருந்து ஒளரங்காபாத் செல்லும் வழியில் தனது குதிரையைத் தொலைத்துவிட்டார். இரண்டு மாதங்களாகத் தேடியும் குதிரையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஒருநாள் குதிரையைத் தேடியலைந்த சாந்த்பாடீல் களைப்பாறுவதற்காக அங்கிருந்த மரத்தடிக்குச் சென்றார். அங்கே, கஃப்னி எனும் நீண்ட அங்கி அணிந்துகொண்டு, கையில் ஸட்கா எனும் குறுந்தடியுடனும், ஹூக்காவுடனும் திகழ்ந்த விசித்திர மனிதர் ஒருவரைக் கண்டார். அந்த மனிதர், அருகிலிருந்த சோலையைச் சுட்டிக்காட்டி அங்கு போய் குதிரையைத் தேடும்படி சாந்த்பாடீலைப் பணித்தார்.

‘ஏதோ சொல்கிறார்... போய்தான் பார்ப்போமே’ என்ற எண்ணத்துடன், முழு நம்பிக்கை இல்லாமல் சோலைக்குள் சென்ற சாந்த்பட்டீலுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்... அவரது குதிரையை அங்கே கண்டுகொண்டார். அந்த மகிழ்ச்சியில் விசித்திர மனிதரை வேண்டி பணிந்து தன்னோடு தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். சில நாள்கள் கழித்து சாந்த்பாடீலின் உறவுக்காரப் பையனுக்குக் கல்யாணம் வந்தது. மணப்பெண் ஷீர்டியைச் சேர்ந்தவள். ஆகவே, அனைவரும் ஷீர்டிக்குப் பயணமானார்கள். அவர்களோடு விசித்திர மனிதரும் சேர்ந்துகொண்டார். 

ஷீர்டியில் கண்டோபா கோயிலை நெருங்கியதும் வண்டியில் இருந்து அனைவரும் இறங்கினார்கள். விசித்திர மனிதரும் இறங்கினார். கண்டோபா கோயில் பூசாரி மஹால்சாபதி அவரைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சியுடன் ‘‘வா சாயி’’ என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த விசித்திர மனிதருக்கு சாயிபாபா என்ற திருநாமம் நிலைத்துவிட்டது. ஏற்கெனவே தான் யோகாசனத்தில் இருந்த வேப்பமரத்தடிக்கு வந்த சாயி, அருகிலிருந்த மசூதியைத் தான் தங்குவதற்குத் தேர்ந்தெடுத்தார். ‘அன்னை இருக்கும் இடம்’ எனும் பொருள்படும்படி அந்த மசூதிக்குத் ‘துவாரகாமாயி’ என்று திருப்பெயரும் சூட்டினார். அன்றிலிருந்து இன்று வரையிலும் தன்னைத் தேடிவரும் பிள்ளைகளுக்கு அன்னையின் இல்லமாகவே திகழ்ந்து ஸ்ரீசாயியின் திருவருளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது துவாரகாமாயி!

ஸ்ரீசாயிபாபா மகா சமாதி அடைந்து நூறாவது ஆண்டு தொடங்குகிறது. இந்தத் தருணத்தில் ஸ்ரீசாயியின் திருவருளை தியானித்துப் போற்றும்விதமாக ஷீர்டியின் மகத்துவத்தையும், ஸ்ரீசாயி நிகழ்த்திய அற்புதங்களையும், ஸ்ரீசாயி வழிபாட்டுச் சிறப்புகளையும் படித்துப் பயன்பெறுவோம்!

கனவில் வந்தார்!

மும்பையைச் சேர்ந்தவர் ராம்லால். பக்தியும் பண்பும் நிறைந்தவர். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பாபா, தன்னை வந்து பார்க்கும்படி ராம்லாலைப் பணித்தார்.

கனவில் தோன்றிய மகான் யார் என்பதும், அவர் எங்கு இருக்கிறார் என்பதும் ராம்லாலுக்குத் தெரியவில்லை. ஆயினும் அவரைப் பார்த்தே தீருவது என்று முடிவு செய்தார். என்ன செய்வது, எங்கு செல்வது, எப்படி அறிவது என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்தார் ராம்லால்.


அன்று மாலை, அவர் கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு கடையில் காணப்பட்ட படத்தைப் பார்த்தவுடன் பரவசமானார். அது அவரது கனவில் வந்து அழைத்த மகானின் படம். உடனே, கடைக் காரரிடம் சென்று விசாரித்தார். படத்தில் இருந்தவர், ஷீர்டியைச் சேர்ந்த மகானான சாயிபாபா என்பதைத் தெரிந்துகொண்டார்.

தன்னைத் தேர்ந்தெடுத்து அழைத்ததோடு நில்லாமல், வந்து சேரும் வழியையும் காட்டிய பாபாவின் லீலையை எண்ணி உள்ளம் உருகினார் ராம்லால்.உடனே ஷீர்டிக்குப் பயணமானார். அதன்பின் வாழ்நாள் இறுதிவரை பாபாவின் அருகிலேயே இருக்கும் பெரும் பேறு பெற்றார்.

ஸ்ரீராமனையே  கண்டேன்!

பாபா, பக்தர்களுக்கு அவர்களின் இஷ்ட தெய்வங்களின் உருவங்களில் காட்சி தந்து, அருள் புரிந்த அற்புதங்கள் ஏராளம்.

விட்டல் பக்தருக்கு, அந்தப் பாண்டுரங்க விட்டலாகவே வியத்தகு காட்சி கொடுத்தார். மாருதியாகவும், சத்திய நாராயணராகவும், கணபதியாகவும், நரசிம்மராகவும் பக்தர்களின் கண்களுக்குத் தென்பட்ட சம்பவங்களும் உண்டு.

டாக்டர் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவம் ஆச்சர்யம் நிறைந்தது. அந்த டாக்டர், ராமரின் அதி தீவிர பக்தர். அவருக்கு வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அந்த அதிகாரியோ பாபாவின் பரம பக்தர்.

ஒருமுறை வருவாய்த்துறை அதிகாரி ஷீர்டி சென்று பாபாவை தரிசிக்க விரும்பினார். அவர் எங்கு சென்றாலும் டாக்டர் நண்பரும் உடன் செல்வது வழக்கம். எனவே, ஷீர்டிக்குத் தன்னுடன் வருமாறு டாக்டரை அழைத்தார்.

அப்போது டாக்டர், “நான் ஸ்ரீராமரையே தெய்வமாகக் கொண்டவன். எனக்கு எல்லாமே ஸ்ரீராமர்தான். ராமரை வணங்கும் நான், ஒரு முஸ்லிமை வணங்க விரும்பவில்லை. அதனால் நீங்கள் மட்டும் போவதுதான் சரி... நான் வரவில்லை!” என்று உறுதிபடக் கூறிவிட்டார் டாக்டர்.

நண்பரான வருவாய்த்துறை அதிகாரி, “ஸ்ரீராமர்மீது உங்களுக்கு உள்ள பக்தியை நான் அறிவேன். அதை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. மேலும், நீங்கள் பாபாவை வணங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. யாரும் உங்களை வற்புறுத்தவும் மாட்டார்கள். நாம் இருவரும் சேர்ந்தே பயணம் செய்வது வழக்கம் ஆயிற்றே. எனது திருப்திக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் நீங்கள் வந்தே ஆக வேண்டும்!’’ என்று உரிமையுடன் அழைத்தார்.

நண்பரின் அன்புக்குக் கட்டுப்பட்ட டாக்டர், அவருடன் ஷீர்டி சென்றார். இருவரும் பாபாவின் தரிசனத்துக்காக மசூதிக்குச் சென்றனர். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

பாபாவின் பக்தரான வருவாய்த்துறை அதிகாரி, மகானை வணங்குவதற்கு முன் அவரை முந்திக்கொண்டு முன்னால் விரைந்து சென்ற டாக்டர், எவரும் எதிர்பாராத விதமாக பாபாவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். இரு கைகளையும் கூப்பி அவரை, பக்தியுடன் வணங்கினார்.

மட்டற்ற வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த அதிகாரி, மருத்துவரின் மனமாற்றத்துக்கான காரணத்தைக் கேட்டார். அந்த டாக்டர், “என் அன்புக்குரிய ஸ்ரீராமர் அந்த ஆசனத்தில் வீற்றிருக்கக் கண்டேன். அதனால் பணிந்து வணங்கினேன். மீண்டும் நோக்கும்போது அங்கு சாயிபாபா இருந்தார். ராமர் வேறு; சாயி வேறு அல்ல என்று உணர்ந்துகொண்டேன். பாபா ஒரு முழுமையான யோகி. அவதார புருஷர்!” என்று நெகிழ்ச்சியுடன் கண்ணில் நீர் மல்க, தழுதழுத்த குரலில் கூறினார்.

டாக்டருக்கு, அவரின் அன்புக்கு உகந்த ராமராகக் காட்சி கொடுத்து லீலை புரிந்த சாயிபாபாவின் பிறந்த நாள் ‘ராமநவமி’ அன்றுதான் என்பது பல பக்தர்களின் நம்பிக்கை.
பாபா கேட்டது பணம் அல்ல..!

அடியவர்களுக்கு தான - தர்மத்தைப் பற்றிப் புரிய வைக்கவும், பணத்தின் மீது உள்ள பற்று குறைவதற்கும், அவர்கள் மனம் தூய்மை அடைவதற்கும் பாபா தட்சணையைக் கட்டாயமாகக் கேட்டுப் பெற்றார்.

பாபா, தான் பெற்ற தட்சணையைப் பல மடங்காகத் திருப்பிக் கொடுப்பது என்ற ஒரு விசித்திரமான நியதியைக் கொண்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நாளில் கிடைத்த தட்சணை ரூபாய் இருபத்தைந்து என்றால், அன்று அவர் விநியோகம் செய்தது ரூபாய் முந்நூறுக்கு மேல் இருக்கும். நாள்தோறும் பாபாவிடம் தானம் பெற மசூதிக்கு இரவு 8 மணியளவில் ஒரு பெரிய கூட்டமே வருவது வழக்கம். வந்தவர் அனைவருக்கும் அவரவர்களின் தேவைக்கேற்ப பாபா மிகச் சரியான தொகையை எப்படி அளித்தார் என்பது, யாராலும் புரிந்துகொள்ள முடியாத அதிசயமாகும்.

பல சந்தர்ப்பங்களில் அவர் மறைபொருளாகவும், குறியீடாகவும் தட்சணை கேட்பதுண்டு.


பேராசிரியர் ஜி.ஜி.நார்கே என்பவர் பல மாதங்கள் பாபாவுடன் தங்கியிருந்து அவரது அன்புக்குரியவராக ஆனார்.

ஒருமுறை பாபாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று சற்றும் எதிர்பாராத விதத்தில் பாபா அவரிடம் பதினைந்து ரூபாய் தட்சணை கேட்டார்.

திடுக்கிட்டுப் போனார் நரகே. காரணம், அவரிடம் அப்போது ஒரு பைசாகூட இல்லை. அவரிடம் பணம் எதுவும் இல்லை என்பது பாபாவுக்கு நன்றாகவே தெரியும்.

நரகேயின் முகவாட்டத்தைக் கண்ட அவர், “உன்னிடம் பணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். எனக்கு அது தேவையும் இல்லை. ‘பணம்’ என்று நான் குறிப்பிட்டது விலை மதிப்பில்லாத பண்பு நலத்தையே. நீ ‘யோக வாசிஷ்டம்’ படித்துக்கொண்டிருக்கிறாய் அல்லவா? அந்த உயர்ந்த நீதி நூலின் நெறிகளை உணர்ந்து உன் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டால், அதுவே உன் மனத்தில் வாசம் செய்யும் எனக்குத் தரும் தட்சணையாகும். இதையேதான் நான் கேட்டேன்!” என்று, தான் தட்சணை கேட்டதன் உட்பொருளை உரைத்தார் பாபா.

அளவில்லா ஆனந்தம் அடைந்த நரகே அவ்வாறே செய்ய உறுதி பூண்டார். மதிப்பே பெறாத சாதாரண உலோகக் காசுகளை பாபா விரும்பி தட்சணையாகக் கேட்டுப் பெற்றார் என்று நாம் நம்பினால், அது நமது அறியாமையைக் காட்டுகிறது என்பதைத் தவிர வேறென்ன கூற முடியும்?
பாபா உபயோகித்த சக்கி!



இந்த இயந்திரம் பத்திரமாக துவாரகாமாயியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் பாபா கோதுமையை அரைப்பது வழக்கம். ஒருமுறை பாபா கோதுமையை அரைத்து, அந்த மாவை ஷீர்டி எல்லைக்கு வெளியே கொட்டி ஷீர்டிக்குள் காலரா வராமல் தடுத்தார். நம் கர்ம வினைகளை அழிப்பதுதான், பாபா இயந்திரத்தில் கோதுமை அரைப்பதன் உண்மையான உட்பொருள். இந்த இயந்திரத்தை இப்போது தரிசித்தாலும், பாபாவின் அருளால் நம் கர்ம வினைகள் அகலும் என்பது உறுதி.

ஷ்யாம் சுந்தர் எனும் குதிரை!


 குதிரை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடமிருந்த பெண் குதிரை ஒன்றுக்கு வெகு நாள்கள் வரை குட்டிகள் இல்லை. பாபாவின் அருளால் அந்தக் குதிரைக்குப் பல குட்டிகள் பிறந்தன. அவற்றுள் முதலில் பிறந்த குதிரைக் குட்டியை பாபாவுக்கு அன்பளிப்பாக அளித்தார் வியாபாரி.

பாபா அந்தக் குதிரைக்கு ஷ்யாம் சுந்தர் என்றோர் அழகான பெயர் சூட்டினார்.

ஷ்யாம் சுந்தர் பாபாவுடன் துவாரகாமாயியில் கிழக்குத் திசையில் உள்ள அறையில் இருக்கும். பாபாவுக்கு ஆரத்தி நடைபெறும்போது பாபாவின் எதிரில் ஷ்யாம் சுந்தர் நிற்கும். ஆரத்தி முடிந்ததும் அது பக்தியுடன் பாபாவைத் தலை வணங்கும். பாபா முதலில் ஷ்யாம் சுந்தருக்கு உதியை இட்டு விடுவார். அதன் பிறகே மற்ற பக்தர்களுக்கு உதியை அளிப்பார்.

பாபா உறங்குவதற்காக துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு ஊர்வலமாகச் செல்லும்போது, ஷ்யாம் சுந்தர் பூரண அலங்காரங்களுடன் நடனமாடிக்கொண்டு முதலில் செல்லும். சாவடி ஆரத்தியிலும் ஷ்யாம் சுந்தர்தான் பாபாவை வணங்கி முதலில் உதியை இட்டுக் கொள்ளும் பேற்றைப் பெற்றிருந்தது.

அந்த ஷ்யாம் சுந்தர் 1945-ல் முக்தி அடைந்தது. அதன் நினைவாக ஸ்ரீபாலாசாஹேப் என்கிற பக்தர், ஒரு குதிரை சிலையைச் செய்து அர்ப்பணித்தார். இந்தச் சிலை துவாரகாமாயியில் பாபா அமரும் கல்லுக்கு வடக்குத் திசையில் நிறுவப்பட்டுள்ளது.

ஐந்தறிவு பிறவியாக இருந்தபோதிலும் பாபாவின் பரம பக்தனாக இருந்து, அவரது அன்புக்குப் பாத்திரமாகி, அவரது அருளால் முக்தியும் எய்திய ஷ்யாம் சுந்தரின் சிலை தரிசனத்துக்கு உரியது. இதுமட்டுமல்ல; நாம் தரிசிக்க வேண்டிய இன்னும் பல மகத்துவங்களும் ஷீர்டியில் உண்டு.

மரத்தூண்!

துவாரகாமாயியில் பாபா உபயோகித்த அடுப்புக்கு அருகில் மரத் தூண் ஒன்று உள்ளது. பாபா இதன் மேல் சாய்ந்துகொண்டுதான் உணவு சமைப்பார். பாபா இந்தத் தூணைச் சுற்றி வலம்வருவதும் வழக்கம்.
உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்தத் தூணின் மீது சாய்ந்து கொண்டால் உடல்வலி நீங்கப் பெறுவார்கள். ஆனால், இந்தத் தூணை எக்காலத்துக்கும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதால், தற்போது இந்தத் தூணின் மீது சாய்ந்து கொள்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் தான் என்ன? இந்தத் தூணை தரிசித்தாலே உடல் உபாதைகள் நீங்கிவிடும்!

அன்னம் செழிக்கும்!


பாபா உபயோகித்த அடுப்பு, துவாரகாமாயியின் கூடத்தில் உள்ளது. பாபா, தானே சந்தைக்குச் சென்று தனக்கு பக்தர்களால் கொடுக்கப்பட்ட தட்சணையில், உணவு சமைப்பதற்குத் தேவையான பண்டங்களை வாங்கி வருவார். தானே சுவையாகச் சமைத்து ஏழைகளுக்கு உணவு அளிப்பார். தனக்கு உண்ண நான்கைந்து வீடுகளில் பிச்சை எடுப்பார்.
பக்தர்கள் அனைவரும் இந்த அடுப்பை துவாரகாமாயியில் அவசியம் தரிசிக்க வேண்டும். பாபாவின் கருணையால் இந்த அடுப்பை தரிசிப்பவர்களின் வீட்டில் உணவுக்குப் பஞ்சம் இருக்காது.

அருளொளி பெருகும் சமாதி மந்திர்!


ஷீர்டி செல்லும் பக்தர்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய இடம் பாபாவின் சமாதி கோயில் (சமாதி மந்திர்).

ஷீர்டிக்கு மூல ஸ்தானமான சமாதி மந்திரில்தான் பாபாவின் மகா சமாதி உள்ளது. பாபாவின் சமாதியில் இரண்டு திருவடிகள் சலவைக் கற்களால் செய்யப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.
சமாதிக்குப் பின்னே இத்தாலிய சலவைக் கல்லால் ஆன பாபாவின் திரு உருவச் சிலை உள்ளது. அருளொளி வீசும் அற்புதமான இந்தச் சிலையை வடித்தவர், பாலாஜி வஸந்த் தாலிம் என்பவர்.

தாலிம், பாபாவின் சிலையை வடிக்கும்போது பாபாவே அவர் முன் தோன்றி தரிசனம் அளித்தார். எனவே, சமாதி மந்திரில் இருக்கும் சிலை, பாபா உயிருடன் இருப்பதைப் போலவே தோற்றம் அளிக்கிறது.

சமாதி மந்திரில் எந்த இடத்தில் நின்றாலும் பாபாவின் அன்பு பொங்கும் பார்வை தன்னையே நோக்குவதாக உணர்ந்து ஒவ்வொரு பக்தரும் உருகுவர்.

வீட்டுக்குள் நுழையும் குழந்தைகளை அன்பும் மகிழ்ச்சியும் பொங்க ஒரு தாய் வரவேற்பதைப் போல பாபாவின் சிலையைக் காணும்போது நாம் உணர்வோம்.

அனுமன் கோயில்!


ஷீர்டி சாவடிக்குப் பின்னால் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கருவறையில் இரண்டு ஆஞ்சநேயர் சிற்பங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
பாபா, இந்த ஆலயத்துக்கு அடிக்கடி போவது வழக்கம். அது மட்டுமல்லாமல், பாபா இந்த ஆலயத்தைச் செப்பனிட்டும் உள்ளார். இந்தக் கோயிலின் அமைதியான சூழ்நிலையும், இங்குள்ள பாபாவின் படமும், செந்தூர வண்ண ஹனுமான் மூர்த்திகளும் பக்தர்களுக்கு அளவிலா ஆனந்தத்தையும், ஆன்மிக சக்தியையும் வழங்கும். இந்தக் கோயில் - சமாதி மந்திர், துவாரகாமாயி, சாவடி இவற்றுக்கு மிக அருகில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் அவசியம் சென்று ஆஞ்சநேயரை தரிசித்து, அவர் அருளை யாசிக்க வேண்டும்.

உதி பிரசாதம்!

‘உதி’ என்பது நெருப்புக் குண்டமான ‘துனி’யில் உதித்த சாம்பலே ஆகும். அது பாபாவின் அளவற்ற அருளாற்றலின் அடையாளமாக விளங்குவது.அடியவர்களின் அல்லல்களையும், அன்பர்களின் நோய்களையும் அடியோடு நீக்கும் அற்புத சக்திகொண்டது ‘உதி’.

நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. எல்லாவற்றையும் அனுபவித்து முடித்த பிறகு உடலானது ஓய்ந்து, மாய்ந்து போகும். பின்னர் எரிக்கப்பட்டுச் சாம்பலாகிப் போகும். உற்றார், பெற்றோர், மற்றோர் ஆகிய அனைவரும் நம்முடையவர் அன்று. தனியாக வந்த நாம், தனியாகவே போக வேண்டி இருக்கும். எனவே, வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொண்டு மெய்ப்பொருளை, பிரம்மத்தை அறிய முயற்சிக்க வேண்டும். இவை அனைத்தையும் உணர்த்துவதே ‘உதி’.

சாயிபாபாவின் உதி, உடல் பிணிகளையும் மன நோய்களையும் ஒழித்திடும் ஒப்புயர்வற்ற உன்னத மருந்து. பாபா, உதியை அன்பர் களின் நெற்றியில் இட்டுத் தன் கையை அவர்கள் தலைமீது வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம். உற்சாகமான மனநிலையில் இருக்கும்போது அவர் உதியைப் பற்றிய பாடலை இனிய குரலெடுத்துப் பாடுவதும் உண்டு!

சாயி தந்த பத்துக் கட்டளைகள்!

முமுக்ஷ :
சுதந்திர உணர்வுடன் கூடிய இறைவனைக் காண வேண்டும் என்ற விருப்பம். மனைவி, சமூகம், உறவு, வேலை என்று ஏகப்பட்ட விலங்குகளால், தான் பூட்டப்பட்டிருப்பதாக எண்ணுகிறான் மனிதன். முதலில் இந்தத் தளைகளில் இருந்து விடுபட வேண்டும். தான் தளைகளாக நினைத்துக்கொண்டிருப்பவை எல்லாம் உண்மையில் தளைகளே அல்ல என்பதைப் புரிந்து, இறைவனைக் கண்டே ஆக வேண்டும் என்ற லட்சியத்தை மேற்கொள்ள வேண்டும்.
விரக்தி: இந்த உலகப் பொருள்கள், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றை விலக்க வேண்டும். இவை கூடவே கூடாது என்று பொருள் அல்ல. பணம், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டு அவற்றுக்காகவே உழைக்கக் கூடாது. அவற்றுக்காக ஏங்கக் கூடாது.

அந்தர்முகதா
: உள்முகச் சிந்தனை. மனிதன் வெளியில் நடப்பவற்றையே எப்போதும் பார்க்கிறான். அதை விடுத்து உட்புறமாகப் பார்க்க வேண்டும். அதாவது தியானம் செய்ய வேண்டும்.

தீவினைகள் கசடறக் கழிபடுதல்:
கொலை, கொள்ளை, மற்றவர்களை அழிப்பது போன்ற கொடுஞ்செயல்களைச் செய்யக் கூடாது.

ஒழுங்கான நடத்தை:
உண்மை பேசுவது, நேர்மையைக் கடைப்பிடிப்பது ஆகியவை.

ப்ரியாக்களை விலக்கி ச்ரியாக்களை நாடுதல்: புலன் இன்பம் தருபவை ப்ரியாக்கள். ஆன்மிக வளர்ச்சி தருபவை ச்ரியாக்கள். பேராசை, அதிகப் பற்று போன்றவை புலன் இன்பத்துக்கே வழி வகுக்கும். அவற்றை விலக்கி தியானம், கோயில், தெய்வம் போன்றவற்றில் மனதை ஈடுபடுத்த வேண்டும்.

அடக்கி ஆளுதல்: மனதையும் உணர்வையும் அடக்கி ஆள வேண்டும்.

தூய்மை: மனத் தூய்மை வேண்டும்.

குருவின் இன்றியமையாமை:
நல்ல குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் கடவுளைக் காண இயலாது. எனவே, கடவுளைக் காண வேண்டும் எனில் ஒரு குருவை நாட வேண்டும்.

கடவுளின் அனுக்கிரகம்: முதல் ஒன்பது கட்டளைகளையும் நிறைவேற்றினால், கடவுளின் அருள் தானாகக் கிட்டும். ஒன்பது கட்டளைகளையும் ஒழுங்காக நிறைவேற்றுபவரிடம் கடவுள் மகிழ்ச்சியுற்று விவேகம்,
வைராக்கியம் ஆகியவற்றை அளித்து, தன்னை அடைய வழி காட்டுவார்.

சப்தாஹ பாராயணம்!

‘சப்தாஹம்’ என்ற சொல்லுக்கு ‘ஏழு நாள்களில் செய்யும் பாராயணம்’ என்பது பொருள். அதாவது பாபாவின் வாழ்க்கை வரலாறான ஸ்ரீசாயி சத் சரிதத்தை வியாக்கிழமை அன்று தொடங்கி, அடுத்து வரும் புதன்கிழமை அன்று முடிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலையில் குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் தீபமும் ஊதுபத்தியும் ஏற்ற வேண்டும். சாயிபாபாவுக்கு நைவேத்தியமாகச் சர்க்கரை, இனிப்பு வகை, பால், சமைத்த அன்னம், பழங்கள் என்று ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கலாம்.
பின்னர் ஸ்ரீசாயிபாபாவை மனதார வணங்கி நமது குறைகளை அவரிடம் கூறி பிரார்த்தித்துக் கொள்ளவும். அடுத்து சத்சரிதத்தைப் படிக்கத் தொடங்கவும்.

ஏழு நாள்கள் முடிவடைந்தவுடன், பாபாவுக்கு தட்சணையாக நம்மால் இயன்றதைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த நாள் வியாழக்கிழமை அன்று காலையில் ஏழை, எளியவர்களுக்கு
அன்னதானம் செய்ய வேண்டும். இங்ஙனம் சப்தாஹ பாராயணம் செய்து ஏழு நாள்கள் ஸ்ரீசாயிநாதரை வழிபடுவதால், அவரின் திருவருளால் நமது துன்பங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
ஒன்பது வார விரத வழிபாடு!

நமது வேண்டுதலை பாபாவிடம் கூறி ஒரு வியாழக்கிழமையன்று இந்த விரதத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் அன்றைய தினம் பால், பழம் போன்ற பொருள்களை மட்டுமே அருந்த வேண்டும். அவ்வாறு இருக்க இயலாதவர்கள் ஏதேனும் ஒரு வேளை மட்டும் உணவருந்தலாம். ஆனால், நிச்சயமாக வெறும் வயிற்றில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கக் கூடாது.

பூஜை தொடங்குவதற்கு முன்னர், பாபாவின் படத்துக்குப் பூமாலை சாற்றி தீபம், ஊதுவத்தி முதலியவற்றை ஏற்றிவைக்க வேண்டும். பின்னர் பாபாவின் அஷ்டோத்ரம், சத்சரிதம் ஆகியவற்றைப் படித்து, அவரை மனதார வணங்க வேண்டும். விரதமிருக்கும் அன்றைய தினம் அருகிலிருக்கும் சாயிபாபா கோயிலுக்குச் செல்வது சிறப்பானது.

இவ்வாறு ஒன்பது வியாழக் கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து ஸ்ரீசாயிநாதரை வணங்கி வழிபட்டு வந்தால், பாபாவின் அருளாசியினால் நாம் வேண்டிய பிரார்த்தனை, அந்த ஒன்பது வாரங்களுக்குள் நிறைவேறிவிடும்.

சாயிபாபா பொன்மொழிகள்
‘‘ஷீர்டியில் உள்ள துவாரகாமாயியை அடைந்தவர்கள்,
அதீதமான மகிழ்ச்சி அடைவார்கள்!’’

‘‘ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தும்
சேவை செய்தும் நாம் மகிழ்வுடன் இருப்போம்!’’

‘‘அ
திர்ஷ்டம் உள்ளவர்களுக்கும்,
பாவங்கள் நீங்கப்பெற்றவர்களுக்கும்
சாயியை வழிபடும் பேறு கிட்டுகிறது.”

‘‘பேராசையும் கடவுளும் எதிரெதிர் துருவங்கள். எங்கே
பேராசை நிலவுகிறதோ, அங்கே கடவுள் இருப்பதில்லை!’’

``கல்லறைக்குள் இருந்தாலும் நான் உயிரோடும்
சக்தியோடும் இருப்பேன். நீ எங்கு இருந்தாலும்
என்னை நினைத்தால், உன்னுடன் இருப்பேன்!’’

- ஷீர்டி சாயிபாபா


Sri Sai Baba - பாபா மகா சமாதி 100-வது ஆண்டு

வர் யார்? எங்கு பிறந்தார்? அவர் வந்த வழிதான் என்ன?' என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண முடியாத புதிராக, அவதார புருஷராக ஷீர்டியில் தோன்றியவர் ஸ்ரீசாயிபாபா. பொறுமையோடும் நம்பிக்கையோடும் வழிபடும் பக்தர்களுக்கு ஸ்ரீசாயிபாபாவே சகலமும்.




ஷீர்டியில் மையம்கொண்டு உலகெங்கிலும் தமது அருள் கடாட்சத்தைப் பரப்பி, தமது கருணை மழையால் அடியவர்கள் அனைவரையும் வாழவைத்த கற்பகவிருட்சமாம் ஸ்ரீசாயிபாபா மகா சமாதி எய்திய தினம் விஜயதசமி; 1918-ம் ஆண்டு. இந்த வருடம் விஜயதசமி திருநாள் முதல், ஸ்ரீசாயிபாபா மகா சமாதி  அடைந்து 100-வது ஆண்டு தொடங்குகிறது.

இந்தத் தருணத்தில் ஷீர்டி ஸ்ரீசாயிபாபாவின் மகிமையை தியானிப்பதும் போற்றுவதும் மிகச் சிறப்பான ஆராதனையாக அமைந்து அவரின் திருவருளைப் பெற்றுத்தரும் அல்லவா?

ஷீர்டியில் இருந்த காலம் முழுவதும் எண்ணற்ற பல அற்புத அருளாடல்களை நிகழ்த்திய சாயிநாதர்,  ‘நான் என்னுடைய பூத உடலைத் துறந்து கல்லறைக்குச் சென்றாலும், இப்போது போலவே எப்போதும் உயிர்ப்புடன் இருப்பேன்; என்னைச் சரணடையும் பக்தர்களின் வாழ்க்கையில் அளவற்ற சந்தோஷத்தையும், நிம்மதியையும் தருவேன்’ என்று பக்தர்களுக்கு உறுதியளித்தார். அதற்கேற்ப இன்றைக்கும் தொடர்கின்றன அவரது அருளாடல்களும் அவர் நிகழ்த்தும் அற்புதங்களும்.

அவைபற்றி அறியுமுன், ஷீர்டி மகான் மகா சமாதி எய்திய அந்த விஜயதசமி திருநாளின் நெகிழ்வான தருணங்கள் குறித்துப் பார்ப்போம்.

சாயிநாதர், தம்முடைய மகா சமாதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே, விரைவில் தாம் மகா சமாதி அடைய இருப்பதை மறைமுகமாகப் பக்தர்களுக்கு உணர்த்தவும் செய்தார். ஆனால், பக்தர்கள் அதை உணரவில்லை. பாபா எப்போதும் தங்களை விட்டுப் பிரியமாட்டார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

அது 1916-ம் ஆண்டு விஜயதசமித் திருநாள். ஏராளமான பக்தர்கள் ஷீர்டியில் குவிந்தனர். அன்றைக்கு ஷீர்டி கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. மாலையில், ‘ஸீமோல்லாங்கன்’ எனும் சடங்கு நிறைவடைந்து அனைவரும் திரும்பிக்கொண்டிருந்தனர்.


அப்போது துவாரகாமாயியில் இருந்த பாபா திடீரென்று கடும்கோபம் கொண்டார். அவர் தம் தலையில் அணிந்து கொண்டிருந்த துணி, கப்னி என்ற அங்கி, கோவணம் அனைத்தையும் கழற்றிப் புனித நெருப்பு தணல்விட்டு பிரகாசித்த துனியில் வீசினார். பாபாவின் கண்கள் இரண்டும் நெருப்புக் கங்குகள் போல் ஜொலித்தன. அவருடைய திருமேனி முழுவதும் மிகுந்த சோபையோடு விளங்கியது.  திகம்பரராக நின்ற பாபா பலவாறாகக் வசைச் சொற்களைக் கூறினார். ஒருவருக்கும் பாபாவைச் சமாதானப்படுத்தத் துணிவில்லை. கடைசியில் பாபாவின் பக்தர்களில் ஒருவரான பகோஜி, பாபாவின் அருகில் நெருங்கி அவருடைய இடுப்பில் ஒரு கோவணத்தைக் கட்டிவிட்ட துடன், ‘‘பாபா, இன்று புனிதமான ஸீமோல்லாங்கன் தினம் அல்லவா? நீங்கள் ஏன் இப்படிக் கோபம் கொண்டு மக்களைப் பயமுறுத்துகிறீர் கள்?’’ என்று கேட்டார். அப்போதும் கோபம் அடங்காத பாபா, தமது கோலால் பூமியை அடித்து, ‘இன்றுதான்  எனது  ஸீமோல்லாங்கனம்’ என்றார். இரவு பதினோரு மணிக்குப் பிறகே பாபா கோபம் தணிந்து இயல்புநிலைக்குத் திரும்பினார். அதற்குப் பிறகு எதுவுமே நடக்காதது போல் நடந்துகொண்டார். அடுத்த இரண்டாவது ஆண்டு விஜய தசமியன்று பாபா மகா சமாதி அடைந்தார். அதற்குச் சில நாள்களுக்கு முன்பும், தாம் மகா சமாதி அடைய இருப்பதைச் சூசகமாக உணர்த்தவே செய்தார். 

பாபாவின் பக்தரும் பெரும் செல்வந்தருமான பூட்டி என்பவர் ஷீர்டியில் ஒரு பெரிய மாளிகையைக் கட்டி, அதன் நடுவில் முரளிதர கிருஷ்ணனின் சிலையை வைக்க பாபாவிடம் சம்மதம் கேட்டார். பாபாவும் அதற்குச் சம்மதித்தார். ‘‘கோயில் வேலை முடிந்த உடன் நான் அங்கே தங்குவேன்’’ என்று கூறினார். தான் கட்டிய மாளிகையில் பாபா வந்து தங்கப்போகிறார் என்பதை அறிந்து பூட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், உண்மையில் நடக்கவிருப்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

சாயிபாபா உடலைத் துறக்கப் போகும் நாளை அறிந்திருந்தார். பூட்டியின் மாளிகையைத்தான் சமாதி கோயிலாகத் தேர்ந்தெடுத் திருந்தார். அதன் காரணமாகவே முரளிதரனாகத் தானே வரப்போவதை மறைமுகமாக உணர்த்தினார்.

1918-ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் ஒரு நாள்... பாபா மசூதியை விட்டு வெளியே சென்றிருந் தார். மாதவ்பாஸ்லே என்ற சிறுவன், வழக்கம்போல் துவாரகாமாயியைப் பெருக்கிச் சுத்தம்செய்து கொண்டிருந்தான். அப்போது, பாபா போற்றிப் பாதுகாத்து வந்த செங்கல் இருப்பதைக் கண்டான். புனிதமான அந்தச் செங்கல் மீது, குப்பைகள் பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அதை வேறு இடத்தில் வைக்கலாம் என்று கையில் எடுத்தான். அந்தச் செங்கல் கையை விட்டு நழுவி, தரையில் விழுந்து இரண்டு துண்டுகளானது. 

சற்று நேரத்தில் திரும்பி வந்த பாபா செங்கல் உடைந்திருப்பதைப் பார்த்து மிகவும் மனம் தளர்ந்தவராக, ‘உடைந்தது வெறும் செங்கல் அல்ல; என் விதிதான் உடைந்துவிட்டது. அதை அருகில் வைத்துக்கொண்டுதான் ஆத்ம தியானம் செய்து வந்தேன். என் உயிருக்கும் மேலான செங்கல் இன்று என்னை விட்டுப் பிரிந்துவிட்டதே’ என்று வருத்தம் மேலிடக் கூறினார். அந்தச் செங்கல் தன்னுடைய குரு தனக்கு அளித்த பரிசு என்று பாபா அடிக்கடி கூறியிருக்கிறார். ஆகவே, அது உடைந்ததும் மனம் தளர்ந்ததுபோல் காட்டிக் கொண்ட பாபா,  தன் உடலைத் துறப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தார். சில நாள்களுக்குப் பிறகு ஒருநாள் பாபா சில பக்தர்களிடம், ‘‘முதலில் நான்  போகிறேன். நீங்கள் பின்னால் வாருங்கள். என்னுடைய கல்லறை உங்களிடம் பேசும்; என் பெயரும் உங்களுடன் பேசும்; என்னுடைய புனித மண்ணும் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும்’’ என்றார். ஆனால், அப்போதும் பாபா கூறிய வார்த்தைகளின் பொருள் அவர்களுக்கு விளங்கவில்லை. 1918-ம் ஆண்டு தம் உடலை உதற வேண்டிய நாள் நெருங்கிய நிலையில், வஜே என்பவரை அழைத்து, ‘ராம விஜயம்’ என்ற நூலைத் திரும்பத் திரும்பப் படிக்கும்படிக் கூறினார். விஜய தசமிக்கு நான்கு நாள்களுக்கு முன்பு ஒரு பக்தையிடம், ‘‘அம்மா, எனக்கு துவாரகாமாயியும் சாவடியும் அலுத்துவிட்டன. நான் பூட்டியின் மாளிகைக்குப் போய் விடலாம் என்று நினைக்கிறேன். அங்கே பெரிய மனிதர்கள் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள்’’ என்று கூறினார்.
பாபாவின் உடல்நிலை சிறிது சிறிதாக மோசம் அடையத் தொடங்கியது. விஜயதசமிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே பாபா லெண்டித் தோட்டத் துக்குச்  செல்வதையும், பிச்சை எடுக்கப்போவதையும் நிறுத்திவிட்டு மோனத் தவத்தில் மூழ்கிவிட்டார்.

1918-ம் ஆண்டு அக்டோபர் 15, விஜயதசமி திருநாள். நண்பகல் ஆரத்தி முடிந்தவுடன், காகா சாகேப் தீட்சித்தையும் பாபு சாகேப் பூட்டியையும் மதிய உணவுக்குப் போய் வரும்படி அனுப்பி விட்டார். லட்சுமிபாய் சிந்தே, பாகோஜி சிந்தே, பயாஜி, லட்சுமணன் பாலா சிம்பி, நானா சாகேப் நிமோண்கர் ஆகியவர்கள் அவர் அருகில் இருந் தனர். ஷாமா படிகளின் கீழே உட்கார்ந்திருந்தார்.

“எனக்கு மசூதியில் சௌகரியமாக இல்லை. என்னை பூட்டியின் ‘தகடி வாடாவுக்கு’ (கல் கட்டடத்துக்கு) எடுத்துச் செல்லுங்கள். அங்கே நான் நலமாக இருப்பேன்” என்று சொல்லியவாறே பாபா, பயாஜியின் உடலில் சாய்ந்து உயிரைத் துறந்தார். சாயி மகானின் மூச்சு நின்று போனதைக் கவனித்த பாகோஜி, கீழே அமர்ந்திருந்த நானா சாகேப் நிமோண்கரிடம் தெரிவித்தார். நானா சாகேப் சிறிது நீர் கொண்டுவந்து பாபாவின் வாயில் ஊற்றினார். ஊற்றிய தண்ணீர் வெளியே வழிந்தது. அதிர்ச்சியடைந்த நிமோண்கர் கதறி அழத் தொடங்கினார். அவர் மட்டுமா? பாபாவின் மறைவுச் செய்தி கேட்டு ஷீர்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

மதங்களைக் கடந்த மகான் சாயிபாபாவின் புனித உடலை எப்படி அடக்கம் செய்வது என்பதில் முதலில் பக்தர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு பக்தர்களிடையே இணக்கம் ஏற்பட்டு, அவரது பொன்னுடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று, பாபாவின் விருப்பப்படி  பூட்டியின் மாளிகையில் முரளிதரனின் கருவறைக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அடக்கம் செய்தனர். சமாதி மந்திர், சர்வ சமய சமரச மந்திராக, சாந்தியும் சந்தோஷமும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஆலயமாகத் திகழ்கிறது.

அதேபோல், தம்முடைய வாக்கு, சத்திய வாக்கு என்பதை நிரூபிப்பது போல் இன்றளவும் தம் பக்தர்களின் வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்தவே செய்கிறார் ஷீர்டி ஸ்ரீசாயிபாபா.