Sunday, December 9, 2018

ராஜயோகம் யாருக்கெல்லாம் அமையும்- ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன?

ஜோதிட சாஸ்திரத்தில் பல வகையான யோகங்கள் கூறப்பட்டிருக் கின்றன. எந்த ஒரு யோகமும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அதிலும் ராஜயோகம் என்பது சிலருக்கு மட்டுமே ஏற்படும்.  அரசனாக, அதிகாரியாகப் பலரையும் ஆட்சி செய்யக்கூடிய அதிகாரம், லட்சத்தில் ஒருவருக்குத்தான் கிடைக்கும். "ஒருவரை அதிகாரம் செலுத்தக்கூடிய ராஜயோக அமைப்பைத் தரும் கிரக அமைப்பு எப்படி அமைய வேண்டும்" என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.


''ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் பார்வையைப் பொறுத்தே  உலக இயக்கத்திலும் மனித வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக குரு பகவான் கடக ராசியில் இருக்கும்போது அவருடைய ஒளியளவு பூமிக்கு அதிகமாகவும், மகரத்தில் உள்ள போது மிகக் குறைவாகவும் கிடைக்கும். இதுபோலவே மற்ற கிரகங்களின் ஒளி மாறுபாடுகளும் மனித வாழ்வில் பல வகைகளிலும் தாக்கங்களை  ஏற்படுத்தும். கிரகங்களின் உச்சம், நீசம், ஆட்சி, நட்பு, பகை போன்ற கிரக வலிமையைப் பொறுத்தே ஜாதகம் கணிக்கப்படுகிறது. இதற்குக் காரணகர்த்தாவான கிரகம் சூரியன். 
சூரியனின் இயக்கத்தை வைத்தே பன்னிரண்டு மாதங்களும், பன்னிரண்டு ராசிகளாக அமைக்கப்பட்டன. மேஷ ராசி, சித்திரை மாதத்தையும், துலாம் ராசி ஐப்பசி மாதத்தையும் குறிக்கும்.

உச்சம் எனப்படும் வலுவான நிலையை மேஷ ராசியில், சித்திரை மாதத்தில் சூரியன் பெறும்போது அவரது கதிர்கள் நம்மைச் சுட்டெரிக்கின்றன. சூரியனின் ஒளி அப்போது பூமிக்கு அதிகமாகக் கிடைப்பது கண்கூடு.
அதுபோலவே சூரியன் வலுவிழந்து நீசம் எனப்படும் துலாம் மாதமாகிய ஐப்பசியில் அவரது ஒளி நமக்குக் கிடைக்காமல் எப்போதும் மேகமூட்ட மாகவே இருக்கும். 
யோகம் எனப்படும் சம்ஸ்கிருத வார்த்தைக்கு இணைவு அல்லது சேர்க்கை என்று பொருள். அதிலும் 'ராஜயோகம்' என்ற வார்த்தைக்கு 'அரசனாக்கும் சேர்க்கை'  என்று பொருள்.
எல்லோருடைய ஜாதகக் கட்டத்திலும் ஜோதிடர்கள் பல வகையான  யோகங்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால், அரசனாக அதிகாரம் செய்யக்கூடிய அமைப்பைப் பெறுபவர் லட்சத்திலோ, கோடியிலோ ஒருவர்தான். அந்த அதிகாரம் செய்யக் கூடிய ராஜயோகத்தைத் தருபவர் சூரியன். அதற்குத் துணை நிற்பவர் சந்திரன்.
ஒருவர் நிஜமான ராஜயோகத்தை அனுபவித்து அரசனாகவோ அல்லது அரசனுக்குச் சமமான அதிகாரம் செய்யக் கூடிய அமைப்புகளிலோ இருக்க வேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருக்க வேண்டும்.  
அதிகாரத்தை அனுபவிக்கும் அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஜாதகங்களில் இந்த அமைப்பை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். இந்த அமைப்பு அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமைகிறது.
சூரியனும், சந்திரனும் ஒளிக் கிரகங்கள். சூரியனிடமிருந்தே சந்திரன் ஒளியைப் பெற்றுப் பிரதிபலிப்பதால் ஒரு நல்ல யோக ஜாதகத்தில் சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருக்க வேண்டும்.  
சந்திரன் சூரியனுடன் இணைந்தோ அல்லது சூரியனுக்கு, நான்கு, ஏழு, பத்தாமிடங்களிலோ சந்திரன் இருந்தால், ஜாதகர் ராஜயோகம் பெறுவார்.
சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருந்தாலும், அவர்கள் அமர்ந்திருக்கும் வீடுகளும் ராசிக்கோ, லக்னத்துக்கோ கேந்திர வீடுகளான ஒன்று, நான்கு, ஏழு, பத்து என இருந்தாலோ அது முதல் தரமான ராஜயோகம்.  
ஒரு ஜாதகர் என்ன தொழில் செய்வார் அல்லது எதன் மூலம் ஜீவிப்பார் என்பதைக் குறிப்பிடும் இடமான தொழில் ஸ்தானம் எனப்படும் பத்தாம் பாவத்தில் சூரியன் திக்பலத்துடன் இருப்பது, நீடித்த அரசாளும் அமைப்பைக் குறிக்கும் ராஜயோகம்.
ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருப்பது போலவே, அவருடைய வீடான சிம்மமும் வலுவாக இருக்கவேண்டும். பொதுவாக ஒரு பாவம் அதன் அதிபதியால் பார்க்கப்பட்டால் வலுவாகும் என்ற விதிப்படி கும்பத்தில் சூரியன் இருந்து சிம்மத்தைப் பார்க்கும் நிலையில் சிம்ம ராசி அதிக வலுப்பெறும். 
கும்பத்தில் சூரியன் இருக்கும் மாதமான மாசி மாதம் பிறப்பவர்கள் அரசாங்கம், அரசியல் ஆகியவற்றில் முக்கிய முதன்மைப் பதவிகளை வகிக்க முடியும். 
சுபகிரகமான குரு மேஷத்தில் இருந்தோ, தனுசில் இருந்தோ வலுப்பெற்று தனது திரிகோணப் பார்வையால் சிம்மத்தைப் பார்ப்பதும் அரசு வகையிலான யோகங்களைத் தரும்.
இதில் ராஜயோகம் என்பது அந்தக் கால நடைமுறைக்கு ஏற்ப சொல்லப்பட்டது. தற்போதைய நிலையென்றால் வலுவான சூரியனும், வலுப் பெற்ற சிம்மமும் ஒருவரை மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்.எல்.ஏ ஆகவோ, அதன் மூலம் மந்திரி, முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளிலோ இருக்கவைப்பார்.
இந்தப் பதவிகள் குறிப்பிட்ட காலவரையறைகளை உடையவை. ஜாதகமோ திசாபுக்திகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடியது என்பதால் ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் மட்டுமே பதவியிலிருப்பார்கள்.
வலுவான சூரியன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருந்தால்,  ஒருவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக்கி அழகுபார்க்கும்.
'சிவராஜ யோகம்' என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் யோகம் என்னவென்றால், குருவும், சூரியனும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் அமைப்பாகும்.இந்த அமைப்புதான் ஒருவரை  மற்றவர் மீது அதிகாரம் செய்ய வைக்கும். இவர் பேசும் வார்த்தைகள் 'கட்டளை வாக்கிய'மாகவே அமைந்திருக்கும். அவர் சொன்னால் கேட்பதற்கும் பத்து பேர் காத்திருப்பார்கள்.
சூரியனிடமிருந்து தான் பெறும் ஒளியைத் திரும்ப அவருக்கே பிரதிபலித்து, தலைவனான சூரியனை புனிதப்படுத்தி, உச்ச பதவிக்குத் தயார் செய்யும் ஒரு அமைப்புதான் சிவராஜ யோகம். இத்தகைய அமைப்பில் குருவும் சூரியனும் சம சப்தமமாக ஏழாம்பார்வையாக இருப்பார்கள்
இந்த யோக அமைப்பில் குருவும், சூரியனும் பலவீனமடையாமல் இருப்பதுடன் பகை, நீசம் பெறாமலும் இருக்கவேண்டும். மேலும் பாவ கிரகங்களின் தொடர்பும் ஏற்பட்டிருக்கக்கூடாது. சூரியன் வலுவாக இருப்பதைப் பொறுத்து, ஒருவர் அரசாங்கத்தில் சாதாரண அதிகாரி முதல் உயர் அதிகாரி வரை மந்திரி முதல் முதல்வர் வரை பதவி வகிக்கும் அமைப்பைப் பெறுவார்.