Sunday, February 11, 2018

ஆரம்பமும் முடிவுமில்லா ஆண்டவனின் உருவம் எப்படியிருக்கும்? - `சிதம்பர ரகசிய’ தத்துவம்!

சிவபெருமானை உருவ வழிபாடாக நடராஜர், சோமாஸ்கந்தர் எனப் பல வடிவங்களில் வணங்கி வருகிறோம். அதுபோலவே அருவுருவ வழிபாடாக லிங்கத்திருமேனியையும் வணங்குகிறோம். உருவமும் அருவமும் இல்லாத சிவ வழிபாடு ரகசிய வழிபாடு எனப்படுகிறது. பழங்கால யோகியர்களும், ஞானியர்களும் ஓர் உருவம் ஒரு நாமம் ஒன்றுமில்லாத ஈசனை மறைபொருளாக வைத்து வழிபட்டார்கள். அந்த வகையில் முந்தைய காலங்களில் எல்லா சிவாலயங்களிலும் சிவனை ரகசிய வடிவில் வணங்கும் முறை இருந்துவந்துள்ளது. ஆனால், காலப்போக்கில் அந்த முறை மறைந்து போனது. இன்றும் திருவாரூர், ஆவுடையார் கோயில், தில்லை சிதம்பரம் போன்ற கோயில்களில் மட்டும் சூட்சும வடிவில் ரகசிய வழிபாடு நடைபெற்று வருகிறது. சிதம்பரத்தில் மட்டுமே இந்த ரகசிய வழிபாடு பொதுமக்கள் காணும் வகையில் செய்யப்படுகிறது. சிதம்பர ரகசியம் என்று கொண்டாடப்படும் சிவவழிபாட்டின் மகத்துவங்கள் நுட்பமானவை.




மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,

மாலாட நூலாட மறையாட திறையாட, அகிலமே செயலாற்ற எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் பேராற்றல்தான் சிவம். ஆடல்தான் சலனம் ஆனது. சலனமே பிரபஞ்சத்தை உருவாக்கியது. பிரபஞ்ச வெளியே பல கோள்களை உருவாக்கி, சகல ஜீவராசிகளையும் தன்னுள் கொண்டுள்ளது. இப்படி சிவனின் ஆடல் கலையே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்  என்னும் ஐவகைத் தொழிலை தொடர்ந்து செய்து வருகிறது. ஆடல்நாயகன் என்றாலே நமக்கு சிதம்பரம்தான் நினைவுக்கு வரும். சிதம்பரம் எனப்படும் தில்லை நடராஜப்பெருமானின் ஆலயம் அமைந்துள்ள பகுதி பூமத்திய ரேகையின் மையப் பகுதி எனப்படுகிறது. சிதம்பரம் கோயிலின் அமைப்பே வித்தியாசமானது. தில்லையின் கூத்தன், சிதம்பரத்து நாயகன் ஆடும் நடனம் ஆனந்தத் தாண்டவம் எனப்படுகிறது. இதை அறிவியலாளர்கள், 'காஸ்மிக் நடனம்' என்று கூறுகிறார்கள். இந்த நாட்டியமே பிரபஞ்சத்தின் தோற்றம் எனப்படுகிறது. சித்சபை, தேவசபை, ராஜசபை, கனகசபை, நடனசபை என ஐவகை சபைகளில் இங்கு ஆடல்வல்லான் அருளாட்சி செய்கிறார். சித்சபையில்தான் உலகமே வியக்கும் சிதம்பர ரகசியம் மறைபொருளாக வணங்கப்படுகிறது. 

வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடிக்காட்டிய இடமே சிதம்பரம். தில்லை மரங்களால் காடாக இருந்த பகுதியில் சிவபெருமான் ஆடிக்காட்டிய இடத்தில் பின்னர் விஸ்வகர்மா, முனிவர்களின் ஆலோசனைப்படி ஆலயம் எழுப்பினார். அந்த ஆலயமே இப்போதிருக்கும் சிதம்பரம் கோயில். கோயிலின் முக்கியப்பகுதியே சித்சபை. இதை ஹேமசபை, ஆன்மசபை, என்றும் அழைக்கிறார்கள்.'பொன்னம்பலம்' என்று பாரோர் புகழும் பகுதியும் இதுதான். இதற்குத்தான் முதலாம் பராந்தகச் சோழனால் பொற்கூரை வேயப்பட்டது. வேத காலத்திலிருந்தே புகழப்பட்ட இந்தச் சபையில்தான் ஆடல்வல்லான் நடராஜர், சிவகாம சுந்தரி அம்மையுடன் அருளாட்சி செய்கிறார். 'சித்' என்றால் 'ஞானம்' 'அம்பரம்' என்றால் 'வான்வெளி'. ஆகாய வெளியில் ஞானத்தை உருவாக்கும் ஆனந்தத் தாண்டவத்தை ஆண்டவன் இங்கு அருளுகிறார். அதனாலேயே இது ஆகாயத்தலமாக மாறியது.

சித்சபையின் வலது பக்கமாய் ஒரு திரை தொங்கியிருக்கும். இதனுள்தான் சிதம்பர ரகசியம் பொதிந்துள்ளது. அர்ச்சகர்களின் அனுமதியோடு அவர்கள் திறந்துகாட்டினால்தான் நாம் அதைக் காண முடியும். சிதம்பரம் கோயிலின் மறைபொருளான தத்துவமே இந்த ரகசியம்தான். எல்லையற்ற ஆனந்தத் தத்துவமான சிவபெருமான், எங்கும் விரிந்து பரந்த சக்தியாக வியாபித்திருக்கிறார் என்பதைக்கூறும் வடிவமே சிதம்பர ரகசியம். எளிதில் உணர்ந்துகொள்ள முடியாத பேராற்றலை மனித வடிவின் ஏழு ஆதார சக்கரங்களோடு இணைத்து வழிபடுவதே சிதம்பர ரகசியம். யோகிகளும் ஞானிகளும், இந்த உலகையே தங்கள் உடலாகக்கொண்டு அதில் மனமிருக்கும் பகுதியை ஆகாயமாக வரித்துக்கொண்டார்கள். 'ஆகாயத்தில் மலர்ந்த அற்புதத் தாமரை மலரே இறைவன்' என்று போற்றினார்கள். தாமரை எனும் ஞானவடிவில் உறையும் ஈசன் நம்முள் நுழைந்து பேரானந்த நிலையை எட்டச்செய்யும் ஒரு குறியீட்டு வடிவமே 'சிதம்பர ரகசியம்' எனப்படுகிறது

புண்ணியம் செய்தவர்களைத் தவிர வேறு எவருக்கும் கிட்டாத அந்த ரகசியத்தை காண்பதும் எளிதன்று, உணர்வதும் எளிதன்று. திரையை விலக்கி உள்ளே நோக்கினால் தங்கத்தாலான ஒரு வில்வமாலை காட்சி தரும். அதுவே தில்லை ரகசியம். ஆடல்பெருமானின் ஆன்மா அங்கே உறைவதாக ஐதீகம். பரமாத்மாவே ஜீவாத்மா என்பதை உணர்த்தும் அற்புத வடிவம் அது. அந்த வில்வ தளத்தின் வடிவமே பிரபஞ்சம். ஆண்டவன் பரந்து விரிந்த ஆகாய உருவில் இருக்கிறார். ஆரம்பமும், முடிவும் இல்லாத அநாதியான ஆண்டவன் உருவமற்று இருக்கிறான் என்பதையே சிதம்பர ரகசியம் நமக்கு போதிக்கிறது. இந்த ரகசியத்தை உள்ளபடியே உணர்ந்து கொஞ்சேமெனும் அனுபவித்து வழிபட்டால் பேரின்ப நிலையினை எட்டலாம் என்பதே ஆன்றோர்கள் சொல்லும் வழிகாட்டுதல். 

சிதம்பர ரகசியம் குறித்து மேலும் தகவல்களை அறிந்துகொள்ள திருநள்ளாறு கோடீஸ்வர சிவாச்சாரியாரைக் கேட்டோம்... 
"மறைபொருளான சிவபெருமானின் மூல மந்திரங்களின் தொகுப்பாகவே சிதம்பர ரகசியத்தின் யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. நடராஜப்பெருமானின் கால்நுனியில்தான் உலகின் மையப்புள்ளி உள்ளது. அதுவே உலகைச் சுழல வைக்கிறது. அண்டமே, பிண்டமாக உள்ளது என்பதை உணர்த்தவே ஆண்டவன் இங்கு பிரமாண்ட வடிவில் காட்சி தருகிறார். சிதாகாசப்பெருவெளியில் நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருக்கிறார். ஆகாயமே வாயுவை உருவாக்கியது. அதிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து நிலம் என பஞ்சபூதங்களும் தோன்றி சிருஷ்டி உருவானது. அதைப்போல சகலமும் ஒடுங்குவதும் இங்கேதான். ஈசனின் உடுக்கைதான் ஒலியை உருவாக்கியது. அதுவே சிருஷ்டிக்கு ஆதாரமானது. பிரமாண்ட வடிவத்தை ஞான வடிவில் தரிசிக்கவே இங்கு சிதம்பர ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அற்புத யந்திரத்தை தரிசித்தால் பிறப்பிலா பேரின்ப நிலையினை அடையலாம்.' என்றார்.