Sunday, September 25, 2016

திருவண்ணாமலை கிரிவலம்... அது தருமே உயிர்பலம்!

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்   கிரிவலம் வருவது  வாடிக்கை. முழு நிலவொளியில் ஈசனை மனதில் நிறுத்தி, 'அருணாச்சலேஸ்வரா' என்று முணுமுணுத்தவாறே வருவதில் உள்ள சுகானுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதையாகும். கிரிவலம் செல்லும்போது வழியில், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருத்திலிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்யலிங்கம் ஆகிய எட்டு லிங்கங்களை தரிசிக்கும் பேறு பக்தர்களுக்குக் கிடைக்கும்.
 சிவபெருமானின் அடி முடியைக் காண பிரம்மா அன்னப்பறவையாகவும் விஷ்ணு வராக அவதாரமும் எடுத்துப் புறப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவராலும் காணமுடியவில்லை. இறுதியில் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி அளித்த தலம்தான் திருவண்ணாமலை.
கிருதயுகத்தில் அக்னிமலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,துவாபர யுகத்தில்தங்க மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகின்றது.
திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் ஆகியோரின் ஆசிரமங்கள் இருக்கின்றன. அங்கு பக்தர்கள் அவரவரது தேவைக்கு ஏற்ப முன்பதிவு செய்து கொண்டு அறைகள் எடுத்துத் தங்கலாம்.
மலை முழுவதுமே அருணாச்சலேஸ்வரரே வியாபித்திருக்கிறார் என்பதால், ,கிரிவலம் முடித்ததும் சுவாமி தரிசனம் செய்யத் தேவையில்லை. இதனால், பலர் முதல் நாளே அறை எடுத்துத் தங்கி சுவாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வருவார்கள். கிரிவலப்பாதை முழுவதும் 400 ரூபாயிலிருந்து குறைந்த வாடகையில் அறைகள் கிடைக்கின்றன.


 கிரிவலம் செல்லும்போது கால்களில் செருப்பு இல்லாமல், செல்வது நல்லது. மலை முழுவதும் ஒவ்வொரு அடியிலும் பல நூறு லிங்கங்கள் பதிந்து இருப்பதாக ஒரு நம்பிக்கை உலவுகிறது. முதலில் சற்று சிரமமாக இருந்தாலும் போகப் போக சரியாகிவிடும்.
கிரிவலம் வரும்போது நண்பர்களுடனோ குழுவாகவோ வந்தாலும் தேவையற்ற வீண் பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் ஆகியவற்றை தவிர்த்து சிவாய நமவென ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தவாறே நம் பயணத்தைப் பூர்த்திசெய்வது நல்லது.
கிரிவலப் பாதையில் நடக்கும்போதே நமக்கும் இறைவனுக்குமான (ஆத்ம நிவேதனம்) உரையாடல் தொடங்கிவிடும். மனம் ஒடுங்குதலாகி, ‘நாம் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ன செய்யப்போகின்றோம்?’ என்பன போன்ற கேள்விகள் நமக்குள் எழத் தொடங்கிவிடும். அந்த சிந்தனைகள் நம் மனத்தை சுத்தம் செய்து நமக்கான வாழ்க்கைப் பாதையைத் தெளிவாக்கி விடும்.
கிரிவலம் உடல், மனம் இரண்டுக்கும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும். தேக பலமும் தெய்வ பலமும் ஒன்றாகி நமக்கு உயிர் பலம் தந்திடும்.

Rooms in Home - அறைகளும் அமைப்புகளும்!

நிலத்தடியில் உள்ள நீரோட்டம் குறித்தும், வீட்டு முகப்பு மற்றும் திசைகள் குறித்தும் சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் நம் வீட்டில் அமையும் அறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
பூஜையறை
வீட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது பூஜையறை. சூரிய உதயத்தின்போது, சூரியக் கதிர்கள் வீட்டில் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அந்த இடத்தை பூஜை அறையாக உபயோகிக்க வேண்டும். பொதுவாக, சூரிய ஒளி வடகிழக்கில் விழுவது போன்ற மனையையே தேர்ந்தெடுப்பார்கள். எனவே, வீட்டில் வடகிழக்கு பாகத்தில் பூஜை அறை அமைப்பது விசேஷம்.
அந்த இடத்தில் வேறு அறைகள் அமைக்கக் கூடாது. அப்படி வேறு அறைகள் அமைந்து அதில் எவரேனும் தங்கினால், அப்படியானவர்களுக்கு சோம்பல் குணம் மிகுதியாகும். தங்குபவர்கள் சிறுவர்களாக இருந்தால், படிப்பில் தடை ஏற்படும்.
குளியல் அறை
பொதுவாக வீட்டில் பயன்பட்ட நீர், வீட்டில் விழும் மழை நீர் ஆகியன வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசை வழியே வெளியேறும்படி தரை மட்டத்தை அமைப்பார்கள். அதற்கேற்ப வீட்டின் குளியறையை கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பாகத்தில் அமைப்பது நல்லது. கிழக்கில் குளியறை அமையும் பட்சத்தில், குளித்ததும் வழிபாடு செய்ய முற்படும்போது, ஆரோக்கியம் தரும் தெய்வமான சூரியதேவனை வழிபட ஏதுவாக  இருக்கும். இதற்கு வழியில்லாதபோது, மற்ற திசைகளில் குளியலறையையும், தண்ணீர் வெளியேறும் வழிகளையும் அமைக்கலாம்.
சமையல் அறை
ஒவ்வொரு மனிதருக்கும் மிக அத்தியாவசியமானது உணவு. அதைத் தயார் செய்வதற்கு அக்னி அவசியம்.
இறை வழிபாட்டில் மந்திரங்களைச் சொல்லியபடி அக்னியில் பொருள்களைச் சமர்ப்பிப்பது உண்டு. அதாவது, இருதயத்தை பலிபீடமாகவும், ஆத்மாவை அக்னியாகவும் பாவித்து தன்னையே தியாகம் செய்ய வேண்டும் எனும் கருத்துடன் அமைந்த சடங்கு முறை இது. இதிலிருந்து அக்னியின் முக்கியத்துவத்தை அறியலாம். சமையலுக்கும் அக்னியே பிரதானம். முன்பெல்லாம் வீடுகளில் அடுப்பெரிக்க விறகுகளைப் பயன்படுத்தினர். தற்காலத்தில் பல்வேறு நவீன முறைகள் வந்துவிட்டன. எந்த வகையானாலும் அக்னி பிரதானமாகிறது. அக்னிக்கு உரிய திசை தென்கிழக்கு. எனவேதான், தென்கிழக்கு திசையில் அக்னி பயன்பாட்டை ஏற்படுத்தினார்கள். அவ்வகையில் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமையலறையை அமைத்துக்கொள்வது சிறப்பு. மற்ற திசைகளில் சமையலறை அமைப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
படிக்கும் அறை
வாஸ்து சாஸ்திர நூல்களில், வீட்டின் தென் மேற்குப் பகுதி படிப்பதற்கு உரியதாகக் கூறப்படுகிறது. ஜோதிட விதிப்படி புதன் கிரகத்தை வித்யாகாரகன் என்று சொல்வார்கள். ஆக, படிக்கும் அறையானது புதனுக்கு உரிய திசையில் அமைவது விசேஷம். அல்லது, ஞானகாரகனாகிய குருவுக்கு உரிய திசையில் அமைக்கலாம். புதனுக்கு உரிய திசை வடக்கு; குருவுக்கு உரியது வடகிழக்கு. இந்த திசைகளை நோக்கியபடி படிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
படுக்கை அறை
பொதுவாக, சராசாரி மனிதர் ஒருவர் நாளின் 24 மணி நேரத்தில், 8 மணி நேரம் அலுவல்களிலும், 8 மணி நேரம் வெளியிடங்களிலும், 8 மணி நேரம் வீட்டிலும் இருப்பதற்கான சூழ்நிலை உள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும், தெளிவான சிந்தனைகளுடனும் செயல்பட நல்ல நிம்மதியான தூக்கம் அவசியம். அது கைகூட தென்மேற்கில் படுக்கை அமைக்கலாம். மேலும், படுக்கையறையில் கிழக்கு, மேற்கு அல்லது தெற்கில் தலைபாகம் இருக்க படுப்பது சிறப்பாகும்.
அதேபோல், பிரசவித்த பெண்கள் வீட்டில் தங்குவதற்கான இடம் குறித்தும் சில நியதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் தங்குவதற்கு வீட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள அறைகளை ஒதுக்க வேண்டும். தாய்க்கும் குழந்தைக்கும் காலை சூரிய ஒளி நன்கு படும் வகையிலான அறைகளை ஒதுக்கவேண்டும். அதற்கு கிழக்கு பகுதி மிக ஏதுவானதாகும்.
தற்காலத்தில் பெரிய பில்டர்கள், கட்டுமான நிறுவனங்கள் மூலம் கட்டித் தரப்படும் வீடுகளிலும், மேற்கண்ட விதிமுறைகள்  பெரும்பாலும் கவனத்தில்கொள்ளப்படுகின்றன. மதபேதம் இல்லாமல் அனைவருக்கும் வாஸ்து விதிமுறைப்படியிலான வீடு அமைவது, மகிழ்ச்சியான விஷயம். ஒருவேளை மேற்கண்ட நியதிகள் இல்லாமல் சிற்சில தவறுகள் காணப்பட்டாலும், குடும்ப ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படி உரிய நிவர்த்திமுறைகளை மேற்கொள்ளலாம்.
அறைகள் குறித்துத் தெரிந்துகொண்டோம். இனி, வீட்டின் எந்தெந்த பாகத்தை என்னென்ன விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம் என்பது குறித்து இன்னும் சில விளக்கங்களைப் பார்ப்போம்.
* வீட்டின் ஈசான்ய பாகமானது (வடகிழக்கு பாகம்) பூஜை செய்வதற்கு உரிய இடம். மேலும், நெல் முதலான தானியங்களைச் சேமித்துவைக்கவும் உகந்தது. தலைவன் தலைவி படுக்கை அமைய, நன்மை விளையும்.
* வீட்டின் தென்கிழக்குப் பகுதியை சமையல் செய்யவும், வீடு தேடி வரும் உறவினர் தங்கவும் பயன்படுத்தலாம். இந்த இடத்தில் படுக்கை அமைவது கூடாது; மீறினால் குழந்தை துர்க்குணத்துடன் பிறக்கும். வீட்டுத் தலைவருக்கு பொருள் சேதம் உண்டாகும்.
* வீட்டின் தெற்கு பாகம் பூஜையறை, உணவு உண்பதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கும் உரிய இடமாகும். இங்கு படுக்கை அமைந்தால், பிறக்கும் குழந்தை ஊனத்துடன் பிறக்கும்; வம்ச விருத்திக்கு கெடுதல் உண்டாகும்.
* தென் மேற்குப் பகுதியில் பாத்திரங்கள், உயர்ந்த பொருட்கள் வைப்பதற்கும், பிள்ளைகள் படிப்பதற்கும் ஏற்ற இடமாகும். இங்கும் படுக்கையறை அமையக்கூடாது.
* வீட்டின் மேற்குப் பகுதி தம்பதி சேர்க்கைக்கு உகந்த இடம். பிறக்கும் குழந்தை ஆணானால், மெய்ஞ்ஞானியாகத் திகழ்வான். பெண் குழந்தை எனில், சிறந்த குணவதியாகத் திகழ்வாள்.
* வீட்டின் வாயு மூலையில் பூஜை அறை அமைக்கலாம். முற்காலத்தில் இந்தப் பகுதியை பிரசவத்துக்கான இடமாகத் தேர்வு செய்வார்கள் (முன்பு வீட்டிலேயே பிரசவம் நிகழும்). இந்த இடத்தில் நெற்களஞ்சியம் வைப்பதால் லாபம் ஏற்படும்.

ராஜயோக ராசிகள்!

க்கிரம் என்றால் ஒரு கிரகம் பின்னோக்கி நகர்வதைக் குறிக்கும். கிரகங்கள் முன்னோக்கி நகர்வதை நேர்கதி என்றும், பின்னோக்கிச் செல்வதை வக்கிர கதி என்றும் சொல்வார்கள்.

முன்னோக்கிச் செல்வது சிறப்பாகும். பின்னோக்கிச் செல்வது சிறப்பாகாது. பின்னோக்கிச் செல்லும் கிரகம், சில நேரங்களில் ஏற்கெனவே அது கடந்து வந்த ராசிக்கும்கூடச் சென்றுவிடும். அதாவது மேஷத்தில் இருக்கும் கிரகம் வக்கிரம் பெற்று மேஷ ராசியிலிருந்து விலகி, மீன ராசிக்கும் செல்லக்கூடும்.

சில நேரங்களில் ஒரு கிரகம் வேகமாக நகர்ந்து அடுத்த ராசிக்குச் செல்வதை அதிசாரம் என்று சொல்வார்கள். அதாவது மீன ராசியில் உலவிக் கொண்டிருக்கும் கிரகம் மேஷ ராசிக்கு விரைவாகச் சென்று விடுவது அதிசாரம் எனப்படுகிறது. குறிப்பாக குருவானவர் மீன ராசியில் ஏறத்தாழ ஓராண்டு காலம் உலவ வேண்டும். ஆனால் அவர் மீனத்தில் ஆறு மாத காலமே உலவி விட்டு, வேகமாக மேஷ ராசிக்குச் செல்வது அதிசாரமாகும்.
வக்கிர கதியில் உள்ள கிரகம் தன் ஆதிபத்தியத்துக்கு நேர்மாறான பலன்களைத் தரும் என்பது முன்னோர்களின் கூற்று



ஒரு கிரகம் நேர்கதியில் செல்லும்போதுதான் தனது ஆதிபத்தியத் துக்கு ஏற்ற முழுமையான சுப பலன்களைத் தரும். பால்வெளியில் உள்ள நட்சத்திரங்களின் ஊடே செல்லும் கிரகங்கள், ஒரு நாளுக்கு இவ்வளவு டிகிரிதான் நகர வேண்டும் என்று கணக்கு இருக்கிறது. நட்சத்திரங்கள் வான்வெளியில் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட ராசியில் நிலையாக இருக்கும். கிரகங்கள் மட்டுமே நகர்ந்து, குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு இடம் மாறும். இப்படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரு ராசியைக் கடந்து, அடுத்த ராசிக்கு இடம் மாறும். ஒவ்வொரு கிரகத்துக்கும் குறிப்பிட்ட வேகம் இருக்கிறது. அந்த வேகத்தின் அடிப்படையில் இடமாற்றம் நிகழும்.

வான் வெளி முழுவதும் 360 டிகிரியாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேஷ ராசியின் ஆரம்பம் 00.00 டிகிரியாகும். 30 டிகிரி வரை மேஷ ராசி வியாபித்திருக்கும். ஒரு ராசிக்கு 30 டிகிரி;

12 ராசிகளுக்கு 360 டிகிரி. டிகிரி என்பது பாகை.  மினிட்ஸ் என்பது கலை. குறிப்பாக சூரியன் ஒரு நாளில் ஒரு டிகிரி நகர்வார். அதாவது 360 நாட்களுக்கு அவரது நகர்தல் 360 டிகிரியாக இருக்கும். ஆக, சூரியன் 12 ராசிகளைச் சுற்றிவருவதற்கு ஒரு வருட காலம் பிடிக்கும். மற்ற கிரகங்களின் நகர்வு....

சந்திரன் : 13 முதல் 15 டிகிரி
செவ்வாய் : 30 முதல் 45 மினிட்ஸ்
புதன் : 65 முதல் 100 மினிட்ஸ்
குரு : 5 முதல் 15 மினிட்ஸ்
சுக்கிரன் : 62 முதல் 82 மினிட்ஸ்
சனி : 2 மினிட்ஸ்
ராகு-கேது : 3 மினிட்ஸ்

சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் சஞ்சரிப்பார். சந்திரன் இரண்டேகால் நாளும், செவ்வாய் 45 நாட்களும் சஞ்சரிப்பார்கள்.  புதனும் சுக்கிரனும் ஒரு மாத காலமும், குரு பகவான் ஒரு வருடமும், சனி இரண்டரை வருடங்களும், ராகு-கேது ஒன்றரை வருட காலத்துக்கும் ஒரு ராசியில் சஞ்சரிப்பார்கள்.

இவை பொதுவானவை. கிரகங்களின் வக்கிர கதி, அதிசாரம் போன்றவற்றால் இவை (கால வித்தியாசம்) மாறுபடும். என்றாலும் சூரியன், சந்திரன், ராகு, கேதுக்களுக்கு இந்த மாற்றம் ஏற்படாது. காரணம் சூரியனும் சந்திரனும் வக்கிரகதி அடைவதில்லை.  ராகுவும் கேதுவும் எப்போதுமே வக்கிர கதியில் (பின்னோக்கி நகரும் நிழல் கிரகங்கள்) இருப்பார்கள்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கே வக்கிர கதி உண்டாகும். ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்கிரமாக உள்ளது என்பதை 'வ’ என்று அந்தக் கிரகத்தின் அருகில் குறித்திருப்பார்கள். ஆங்கில ஜாதகத்தில் 'R’ என்று குறிக்கப்பட்டிருக்கும். 'வ' என்றால் வக்கிரம், R என்றால் Retrograde  பின்னோக்கி நகர்தல்- வக்கிரம்.









வக்கிரம் பெற்ற கிரகங்கள் கெட்ட ஸ்தானங்களில் வக்கிரமானால் நற்பலன் களைத் தருவார்கள். சுப ஸ்தானங்களில் வக்கிரமானால் கெடுபலன்களைத் தருவார்கள். ஜாதகத்தில் 6, 8, 12-ஆம் இடங்கள் அசுப ஸ்தானங்கள் ஆகும். இந்த அசுப ஸ்தானங்களில் உள்ள கிரகங்கள் வக்கிரமாக இருந்தால் சுப பலன்களைத் தருவார்கள். 1, 4, 7, 10, 5, 9 ஆகிய இடங்கள் சுப ஸ்தானங்கள் ஆகும். இந்த சுப ஸ்தானங்களில் உள்ள கிரகங்கள் வக்கிரமாக இருந்தால் கெடு பலன்களைத் தருவார்கள்.

அதேபோன்று பலம் குறைந்த நீச ராசியில் இருக்கும் கிரகங்கள் வக்கிரம் பெற்றால் உச்ச பலனைத் தருவார்கள். அதாவது மேஷம் சனிக்கு நீச வீடு. அவர் மேஷத்தில் வக்கிரமாக இருந்தால் சுப பலனைத் தருவார்.
உச்ச ராசியில் இருக்கும் கிரகங்கள் வக்கிரம் பெற்றால் நீச பலனைத் தருவார்கள். குரு கடகத்தில் உச்சம் பெறுவார். குருவானவர் கடகத்தில் வக்கிரமாக இருந்தால் குறிப்பிட்ட அமைப்பில் பிறந்த ஜாதகர் உச்ச பலனைப் பெறமுடியாமல் சங்கடங்களை அனுபவிக்க வேண்டிவரும்.
குருவுக்கு இரு வீட்டு ஆதிபத்தியம் (தனுசு, மீனம்) இருப்பதால், அவர் எந்தெந்த வீடுகளுக்கு ஆதிபத்தியம் பெறுவாரோ அந்தந்த வீடுகளுக்கு உரிய முழுமையான சுப பலன்களைப் பெறமுடியாமல் போகும்.
மேலும் குரு பகவான் பொருளாதாரம், குழந்தைகள், வாழ்க்கைத்தரம், உண்மை, தெய்வ பக்தி, உள்ளுணர்வு, நல்ல நட்பு, சுபகாரியங்கள், மகப்பேறு, மதாபிமானம், விஞ்ஞானம், பேரன், பேத்தி, தந்தையின் தந்தை, தங்கம், வங்கி, புஷ்பராகம், கருவூலம், வேத விற்பன்னர், பிராமணர், ஆலோசகர், மதபோதகர், குருக்கள், பொன் நிறப்பொருட்கள் ஆகியவற்றைக் குறிப்பவர் ஆவார். அவர் வக்கிரமாக உள்ளபோது, அவரது ஆதிபத்திய பலன்கள் கிடைக்காமல் போகும். மாறாக கெடுபலன்கள் உண்டாகும். சுப பலன்கள் நிகழக் குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்படும்.

தற்போது கோசாரப்படி குரு வக்கிர கதியில் உலவுகிறார். குருவின் வக்கிர கதி சஞ்சாரத்தால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும்.

அதாவது மேஷத்துக்கு 3-ல் உலவும் குரு கெடுபலன்களைத் தருவார். அவர் வக்கிரமாகி 2-ம் இடத்தை நோக்கி நகர்வதால் 2-ம் இடத்துப் பலன்களைத் தருவார். இதேபோல் கடகத்துக்கு 12-ல் உள்ள குரு 11-ம் இடத்துப் பலனையும், கன்னிக்கு 10-ல் உள்ள குரு 9-ம் இடத்துப் பலனையும், விருச்சிகத்துக்கு 8-ல் உள்ள குரு 7-ம் இடத்துப் பலனையும், மகரத்துக்கு 6-ல் உள்ள குரு 5-ஆம் இடத்துப் பலனையும் தருவார். இதனால் இதுவரையிலும் குரு பலம் இல்லாத ராசிக்காரர்களுக்கு விளைந்து வந்த கெடுபலன்கள் விலகி, நற்பலன்கள் உண்டாகும்.

குரு பலம் உள்ள அதாவது ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு சுப பலன்கள் குறையும்.
ஜாதகத்தில் சுப யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானாலும், ஜனன கால ஜாதகத்தில் குரு ஆட்சி, உச்ச, மூலத்திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும், (அதாவது தனுசு, மீனம், கடகம் ஆகிய ராசிகளில் பலம் பெற்று நேர்கதியில் இருந்தால்) கோசார பலவீனம் ஜாதகரைப் பாதிக்காமல் இருக்கும்.

வக்கிர குருவால் பாதிக்கப்படாமல் இருக்க, வியாழக்கிழமைகளில் குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது. குருவுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்வதன் மூலம் நலம் உண்டாகும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும், குடும்பப் பெரியவர்களையும் வணங்கி, அவர்களது வாழ்த்துக்களைப் பெறுவதன் மூலமும் குரு அருள் கிடைக்கும். அதன் மூலம் வாழ்வில் நலம் கூடப் பெறலாம்.

Sunday, September 4, 2016

ஆனை முகத்தானின் அபூர்வ தகவல்கள்!


பிள்ளையாரே முழுமுதற் தெய்வம் என்பதும், அவரே கணங் களின் அதிபதி என்பதும், அவர் அவதரித்த திருநாளே விநாயக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது என்பதும் நமக்குத் தெரி யும். இவைமட்டுமின்றி, பிள்ளையாரைப் பற்றி நாம் அவசியம் அறியவேண்டிய தகவல்கள் இன்னும் உண்டு.
தெரிந்துகொள்ளலாமா ஆனைமுகன் குறித்த அந்த அபூர்வ தகவல்களை!
பிள்ளையாருக்கு எத்தனைப் பெயர்கள்?
கணபதி என்ற சொல்லுக்குத் தேவகணங்களின் தலைவன் என்று பொருள். ‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், ‘ண’ என்பது மோட்சம் பெறுவதையும், ‘பதி’ என்பது ஞான நெறியில் திளைத்துப் பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் ‘மனோவாக்கினை கடந்த தலைவன்’ என்றும் பொருள்கொள்ளலாம்!
தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர். விக்னங்களைப் போக்குபவர் ஆதலால் விக்னேஸ்வரர். கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி எனும் பெயர் கொண்டார். 
சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இவனது துன்பம் தீர்க்க எண்ணிய விநாயகப் பெருமான், சந்திரனை தன் நெற்றியில் திலகமாக அணிந்து கொண்டாராம். இதனால், பாலசந்திர விநாயகர் எனும் திருநாமம் பெற்றார்.
ஒருமுறை, அக்னி பகவானும் சாபம் பெற்றார். அக்னியைக் காப்பாற்ற தனது காதுகளையே முறங்களாக்கி விசிறி, அக்னியின் வெப்பம் தணியாமல் இருக்க அருள் செய்தாராம் விக்னேஸ்வரர். இதனால் சூர்ப்பகர்ணர் என்று பெயர் கொண்டார்.
பரமேஸ்வரனால் வழங்கப்பட்ட பரசு ஆயுதத்தால் பூவுலகில் தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார் பரசுராமர். இதன் பொருட்டு சிவனாருக்கு நன்றி சொல்ல திருக்கயிலாயம் வந்தார். வாயிலில் அவரைத் தடுத்து நிறுத்தினார் பிள்ளையார். அவரைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முயன்றார் பரசுராமர். இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதன் உச்சகட்டமாக... விநாயகரை நோக்கி பரசு ஆயுதத்தை வீசினார் பரசுராமன்.
அந்த ஆயுதத்தால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்பது பிள்ளையாருக்குத் தெரியும். ஆனால், தந்தை அளித்த அந்த ஆயுதத்துக்கு இழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதினார் பிள்ளையார்; தமது இடது தந்தத்தால் அந்த ஆயுதத்தை எதிர்கொண்டார். தந்தம் முறிந்தது! இதன் மூலம் ஏக தந்தர் எனும் திருநாமத்தை ஏற்றார்.
இவை பிரமாண்ட புராணம் கூறும் தகவல்கள். இவை தவிர,  பல்வேறு தலங்களில் பல்வேறு காரணப்பெயர்களும் உண்டு கணபதிக்கு.
பிள்ளையாருக்கு முதலில் மோதகம் படைத்தது யார்?
பிள்ளையாருக்கு முதன்முதலில் மோதகம் படைத்தது, வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி.
சர்வவியாபியான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார்! அருந்ததி அண்டத்தை உணர்த்த, மாவினால் ‘செப்பு’ என்ற மேல் பகுதியைச் செய்தாள். அண்டத் தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை, மாவுக்குள் வைத்தாள். அதுவே, மோதகம் என்னும் கொழுக்கட்டை.

இப்படியும் சொல்லலாம்... இந்த உலகமே மோதகம்தான். உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் பூர்ணத்தைப் போன்று இனிமையானதுதான். நாமும் இனியவர்களாக, இனிய செயல் களையே செய்பவர்களாகத் திகழ்ந்தால், இறைவன் நம்மை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவான்!

பிள்ளையாருக்கு எத்தனை தேவியர்?
ஸித்தி, புத்தி மற்றும் வல்லபை ஆகியோரை விநாயகரின் தேவியராகக் குறிப்பிடுகிறது விநாயக புராணம். இவர்கள் மட்டுமல்ல... மோதை, பிர போதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமந்தினை, நந்தினி, காமதை ஆகியோரும் விநாயகரின் தேவிகளாகத் திகழ்வதாக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன.
மண் பிள்ளையாரும் மாவுப் பிள்ளையாரும்!
ஐம்பொன் விக்கிரகங்களாக மட்டுமல்ல, மண்ணில் பிடித்து வைத்து வழிபட்டாலும் பரிபூரண பலன் தருவார் விநாயகர்.மண்ணால் செய்த விநாயகரை வழிபட, நற்பதவி கிட்டும்.

புற்றுமண் விநாயகரை வழிபட, லாபம் பெருகும்.
வெல்ல விநாயகர்- நன்மைகள் அதிகரிக்கச் செய்வார்.
உப்பு விநாயகர்- எதிரிகளை வெல்லும் வல்லமை தருவார்.
வெள்ளெருக்கு விநாயகர்- செல்வம் பெருக அருள்வார்.
கல் விநாயகரை வழிபட்டால், சகல நலன்களும் கிட்டும்.
மாவினால் செய்த விநாயகரை வழிபட, அனைத்துக் காரியங் களிலும் வெற்றி பெறலாம்.
பிள்ளையாரைப் போற்றும் புராணங்கள்
முத்கல புராணம், சிவ புராணம், கந்த புராணம், கணேச புராணம், மச்ச புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், பத்ம புரணம் ஆகிய புராணங்களும், ரிக் வேதம், சுக்ர நீதி, சுப்பிர பேதம், அபிதான கோசம் முதலான ஞான நூல்களும் விநாயகரைப் போற்றுகின்றன.
பிள்ளையாரை அர்ச்சிக்க 21 இலைகள்!
விநாயக சதுர்த்தி அன்று 21 பத்ரங்களால் (இலை) பிள்ளை யாரை அர்ச்சித்து வழிபடுதல் விசேஷம். அவை: முல்லை, கரிசலாங்கண்ணி, வில்வம், ஊமத்தை, இலந்தை, வெள் ளருகம்புல், துளசி, வன்னி, நாயுருவி, கண்டங்கத்திரி, சுருளி, எருக்கு, மருதை, விஷ்ணு கிராந்தி, மாதுளை, தேவதாரூ, மருவு, அரசு, ஜாதிமல்லிகை, தாழை, அகத்திக் கீரை.
வெள்ளிக் கிழமை, விநாயக சதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி ஆகிய தினங்கள் பிள்ளையாரை வழிபட உகந்த தினங்கள். இந்த தினங்களில் சிரத்தையுடன் விரதம் இருந்து பிள்ளையாரை வழிபட்டால், நினைத்ததை அடைந்து நீடூழி வாழலாம்.
பிள்ளையார் சுழி!
வியாச பகவானின் மகாபாரதத்தை எழுத்திலே வடித்த முதல் எழுத்தாளன் விநாயகர். ஆகவேதான், எதையும் எழுதுமுன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறோம் என்பார்கள்.
வைணவ ஆலயங்களான திருவரங்கம் கோயிலில் விக்னபதி, திருவல்லிக்கேணியில் வெண்ணெய் விநாயகர், அழகர் கோயிலில் தும்பிக்கை ஆழ்வாராகத் திகழ்கிறார் பிள்ளையார்.
சிதறு தேங்காய் எதற்கு?
வித்யுன்மாலி, தாருகாக்ஷன், கமலாக்ஷன் ஆகிய அசுரர்களையும் அவர்களின் கோட்டைகளையும் சிவனார் அழிக்கப் புறப்பட்டபோது, தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.
விநாயகரை வேண்டிக் கொள்ளாமல் புறப்பட்டதால் ஏற்பட்ட இடர் இது என்பதை உணர்ந்த ஈசன், கணபதியை எண்ணினார். மறுகணம் அங்கு தோன்றிய கணபதிக்கு உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது, முக்கண்ணனையே தனக்குக் காணிக்கையாகத் தர வேண்டும் என்றார் கணபதி. எனவே ஈசன், தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்குப் படைத்தருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிட விநாயகருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
உச்சிப்பிள்ளையார்
நாம் வாழ்வது பூவுலகம். இதற்கு மேலே விண்ணுலகும், கீழே பாதாள லோகமும் இருப்பதாக புராணங்கள் கூறும். இந்த மூன்றையும் மும்மண்டலங்கள் என்றும், மூவுலகங்கள் என்றும் சிறப்பிக்கிறோம். இந்த மூன்றுக்கும் முழுமுதற் தெய்வமாகத் திகழ்பவர் கணபதி. ஞானநூல்களெல்லாம் அவரை உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள கணபதி என்ற மூன்று நிலைகளில் வைத்து போற்றுகின்றன.
ஆலயங்களில் மகா கணபதியாக வழிபடும் பிள்ளையாரை, மலை முகட்டிலும் உச்சியிலும் வைத்து உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் சந்நிதி அமைத்து பாதாள விநாயகர் என்றும் அன்பர்கள் வழிபடுகின்றனர்.
தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சியில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாராக அவர் கோயில் கொண்டுள்ளார் கும்பகோணத்திலும் ஒரு உச்சிப்பிள்ளையார் உண்டு. அந்த ஊரில் கட்டுமலை  அமைப்பு ஒன்றை உண்டாக்கி அதன் மீது விநாயகர் ஆலயத்தை அமைத்துள்ளனர். இவரும் உச்சிப்பிள்ளையார் எனப் போற்றப்படுகிறார்.

சிதம்பரம் திருத்தலத்தில் உள்ள திருமுறை காட்டிய விநாய கரும் உயரமான இடத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் ஆவார்.
திருநல்லூர் என்னும் தலத்தில் கட்டுமலை மீது, மலைப் பிள்ளையார் எனும் பெயரில் அவர் அருள்பாலிக்கிறார்.
பாதாள விநாயகர்!
சில தலங்களில், மண்ணின் கீழே பாதாளத்தில் வீற்றிருப்ப வராகவும் விநாயகரைத் தரிசிக்கலாம்.  இந்த நிலையில், பூமி மட்டத்திலிருந்து பல படிகள் இறங்கிப் போய் அவரைத் தரிசிக்க வேண்டும். இவரை ஆழத்துப் பிள்ளையார், பாதாள பிள்ளையார் என்ற பெயர்களில்  பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
காளஹஸ்தி சிவாலயத்திலும், விருத்தாசலம் திருக்கோயிலிலும் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன. விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் ஆழத்துப் பிள்ளையார் ஆலயம் பெரியதாகவும் புராதனச் சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது.
பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்...
மயிலாடுதுறை- திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது திலதர்ப்பணபுரி. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் காட்சி தருகிறார்!

ராமேஸ்வரம் கோயிலின் நுழைவாயிலில் தரிசனம் தரும் இரட்டைப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே கோயிலுக்குள் செல்லவேண்டும் என்பது மரபு.
மருதமலையில் ஆலமரம் முதலான ஐந்து விருட்சங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இடத்தருகில் அருள்கிறார் பஞ்சவிருட்ச கணபதி. பஞ்ச விருட்சத்தின் அடியில், முனிவர்கள் அருவமாக தவம் செய்வதாக ஐதீகம்!
தாமரை மலரில் அமர்ந்த நிலையில்... வழக்கத்துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தருகிறார் திருப்பரங்குன்றம் கற்பக விநாயகர்.
கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரம் மகாதேவர் கோயிலில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனியராகவும் காட்சி தருவார். நிறம் மாறுவதால் இவரை, பச்சோந்தி விநாயகர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.
சென்னை- மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப் பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம். இவரை, ‘வலஞ்சை விநாயகர்’ என்கின்றனர்.
குழந்தை கணபதி
நவநீத கிருஷ்ணரைப் போன்று அழகிய குழந்தை வடிவில் உள்ள விநாயகரை, வேலூர் கோட்டையில் சிற்பக் கலை நிறைந்த கல்யாண மண்டபத்தில் தரிசிக்கலாம்.
அரியலூர்- ஜெயங்கொண்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள வைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப்பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.
ஐங்கரனான விநாயகர் மூன்றுகரத்தோனாக எழுந்தருளும் தலம் பிள்ளையார்பட்டி. இங்கே, விநாயகருக்கு வெள்ளை ஆடை மட்டுமே அணிவிக்கின்றனர். சகஸ்ரநாம அர்ச்சனைக்காக, தினமும் 108 மோதகம் படைப்பதும் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு.
திருவையாறு கோயிலில் அருள்கிறார் ஓலமிட்ட விநாயகர். நள்ளிரவில் ஓலமிட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டிருப்பதை ஊர்மக்களுக்கு உணர்த்திக் காப்பாற்றியதால் இவருக்கு இந்தத் திருநாமம்! இதே தலத்தில் லிங்கத்தின் ஆவுடைப் பகுதியின் மீது அமர்ந்தருளும் ஆவுடைப்பிள்ளையாரை தரிசிக்கலாம்.
வேண்டுதலுக்கு செவிசாய்க்கும் பிள்ளையார்!
தஞ்சை- திருவையாறு சாலையில் திருக்கண்டியூருக்கு அருகில் உள்ளது திருவேதிக்குடி. இங்குள்ள வேத விநாயகர், வேதங்களை காதுகொடுத்துக் கேட்கும் பாவனையில் சற்றே செவி சாய்த்து அமர்ந்திருக் கிறார். இறைவன் அருளும் வேதங்களை இவர் செவி சாய்த்துக் கேட்பதாக ஐதீகம். எனவே இவரை, செவி சாய்த்த விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள முக்குருணி விநாயகரின் விக்கிரகத் திருமேனி, திருமலை நாயக்கரால் வண்டியூர் தெப்பக்குளம் வெட்டும்போது கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம்- மருத்துவக்குடியில் அமைந் துள்ளது அபிராமியம்மை சமேத ஐராவதீஸ்வரர் ஆலயம். இங்கே அருள்பாலிக்கும் விருச்சிக விநாயகரின் திருமேனி முழுவதும் விருச்சிகத்தின் (தேள்) செதில் போன்ற அமைப்புள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது!
கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருவலஞ்சுழி. இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு வெள்ளைப் பிள்ளையார் என்று பெயர். இவரின் விக்கிரகத் திருமேனி கடல் நுரையால் செய்யப்பட்டது என்பது ஐதீகம். எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது.
திருவாரூர் கோயிலில் அருளும் ஐங்கலக் காசு விநாயகர் விக்கிரகத்தை, சோழ மன்னர் ஒருவர் ஐந்து கலம் பொற்காசுகளைக் கொண்டு செய்ததாக ஐதீகம்.
அம்மையப்பனை பிள்ளையார் வலம்வந்த ஊர்
விநாயகப்பெருமான் அம்மை-அப்பனை வலம் வந்து ஞானப்பழம் பெற்ற ஊர் திருவலம் என்பர். வேலூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த ஊரில் அருள்பாலிக்கும் வலம்வந்த விநாயகரை தரிசிக்க, வல்வினைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தலத்தில் நர்த்தன விநாயகரை தரிசிக்கலாம். ஒரு காலம்... வேதம் ஓதுதலை முனிவர்கள் மறந்துவிட, விநாயகரே வேதியராக வந்திருந்து, வேதம் ஒலித்து வீரநடனம் ஆடினாராம். இதையட்டி அமைந்த பெயரே நர்த்தன விநாயகர்.

மயிலாடுதுறைக்கு தென்மேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தேரழுந்தூரில் வழிகாட்டி விநாயகர் அருள் புரிகிறார். இங்கு வந்த திருஞானசம்பந்தருக்கு, சிவாலயம் செல்ல வழிகாட்டினாராம் இந்தப் பிள்ளையார்.

சாட்சி கணபதி... பாக்கு பிரசாதம்!
ஆந்திர மாநிலம்- சைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு
பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தங்களின் வருகையை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டுமாம். பக்தர்கள் சைலத்துக்கு சென்றுவந்ததற்கு இந்தப் பிள்ளையாரே சாட்சி என்பதால், இவரை ‘சாட்சி கணபதி’ என்கின்றனர்.


கர்நாடக மாநிலம்- ஹுப்ளியில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ள ஊர் சப்பி. இங்கு, விநாயக சதுர்த்தி அன்று ஐந்து அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள், செந்தூரத்தால் விநாயகர் செய்து பூஜிப்பார்களாம். வழிபாடுகள் முடிந்ததும், பிரசாதமாக பாக்கு தரப்படுமாம். பாக்கு பிரசாதம் கிடைத்த பக்தர்களின் வேண்டுதல்கள், அடுத்த மூன்று வருடத்துக்குள் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை.

Temple 26 : அகத்தியர் வழிபட்ட மகா கணபதி!



தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பேருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கணபதி அக்ரஹாரம். இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்துக் காத்தருள்கிறார் மகா கணபதி.
அகத்திய முனிவர் காவிரிக்கரையில் தவம் புரிந்தபோது, திருவையாற்றின் அருகில் இருந்த கணபதி அக்ரஹாரத்தில் விநாயகப்பெருமான் குடிகொண்டிருப்பதை அறிந்து, அவ்விடத்துக்குச் சென்று பூஜித்து வழிபட்டிருக்கிறார். இத்தகைய பெருமையைக் கொண்ட இத்திருக்கோயிலுக்கு கௌதம முனிவர், காஞ்சி மகா பெரியவர் போன்ற மகான்களும் வருகை தந்துள்ளார்கள்.
ஆவணியில் திருவிழா:
இவ்வூரைப் பொறுத்தவரையில், வீட்டுக்குப் பசுமாடு வாங்குவதில் தொடங்கி வயல்களில் நாற்று நடும்வரை எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், முதலில் இக்கோயிலுக்கு வந்து மகா கணபதியை வழிபட்ட பிறகுதான் துவங்குவர். ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி தினம் இருந்தாலும், ஆவணியில் வரக்கூடிய சதுர்த்தி தினமே மஹா சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும், மற்ற திருக்கோயில்களில், விநாயகர் சதுர்த்தி தினத்தில்தான் கொடியேற்றத்தோடு விழா நிகழ்வுகள் துவங்கும். ஆனால் இக்கோயிலில், விநாயகர் சதுர்த்திக்கு 9 நாட்கள் முன்னரே கொடியேற்றப்பட்டு திருவிழாக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடுகின்றன. 10-வது நாள் விநாயகர் சதுர்த்தியை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள் இவ்வூர் மக்கள்.

விநாயகர் சதுர்த்தியன்று கிராமத்து அபிஷேகம்:
விநாயகர் சதுர்த்தி தினத்தில் காலை 5 மணிக்கே திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, அன்றைய தினம் முழுவதும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும். காலை 9 மணிக்கு, கிராமத்து அபிஷேகம் என்ற பெயரில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனையைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பின்னர், கணபதியை காவிரி நதிக்கரையை நோக்கி தீர்த்தவாரிக்கு எடுத்துச்சென்று திரும்பியதிலிருந்து பூஜைகள் தொடர்ந்த வண்ணமிருக்கும். கொடியேற்றம் ஆன நாளிலிருந்து 9 நாட்கள் வழிபாடு செய்த கலசங்களைக் கொண்டு,  மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்றைய தினம் முழுவதும்,  பூ, பழம், தேங்காய், கொழுக்கட்டை எல்லாம் படைத்து பக்தர்கள் கணபதியை வணங்கிச் செல்வர்.



மயூரி வாகனம்:
பொதுவாக, முருகனின் வாகனமாகத்தான் மயில் கருதப்படுகிறது. ஆனால், இக்கோயிலில் உள்ள கணபதிக்கும் மயில்தான் வாகனமாய்த் திகழ்கிறது. எனவே, இந்தக் கணபதியை மயூரிவாகனன் என்றும் அழைக்கிறார்கள்.

பிற விழாக்கள்:
தை மாதம் பொங்கல் விழாவையொட்டி வரும் சங்கடஹர சதுர்த்தி, இக்கோயிலில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், புஷ்பாஞ்சலி எனப்படும் பூ அலங்காரத்தின்போது கணபதிக்கு 100 கிலோ பூக்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. கஜ பூஜை என்ற யானைகளுக்கான பூஜை இக்கோயிலில் வெகு பிரபலம்.